பக்கம் எண் :

19

Kachchik Kalambagam

ஈரடித் தாழிசைகள் - 8

இடங்கர்வாய்ப் பட்டகளிற் றின்னுயிரைப் புரந்தசெயல்
கடல்வீழ்த்த நாவரையன் கன்மிதத்தற் கொப்பாமோ.

1

கைகைக்குக் கானடந்த காகுத்தன் பொறையினுநீ
வைகைக்கு மண்சுமந்த வண்மைமிகப் பெரிதன்றோ.
2
கம்பத்தன் உயிர்மாயக் கடுஞ்சமர்செய் கைவலியென்
கம்பத்தன் சிலையெடுக்கத் தலைநெரித்த கால்வலிக்கே.
3
கொம்பனையாள் கல்லுருவிட் டின்னுருவங் கொண்டதினும்
சம்பந்தன் என்பைப்பெண் ணாக்கியது சால்புடைத்தே.
4
அம்பொன்றாற் புணரிநீர் சுவறச்செய் ஆற்றலினும்
நம்பொன்றாப் புரமூன்றை நகைத்தழித்தல் மேன்மையதே.
5
எழுவிடையைத் தழுவிமணம் எய்துமொரு செயலினுஞ்சீர்
மொழியரையன் அமணர்கரி முனிவொழித்த தற்புதமே.
6
அண்டரிள மடவாரை அணைந்தவபி ராமமெனோ
பண்டிருடி மனைவியர்கள் பாடழிந்த வனப்பினுக்கே.
7

பற்குனற்கு மாயன்சு பத்திரையைத் தந்தவகை
சற்குணற்குப் பரவைதரு தண்ணளிக்குநேராமோ.

8

(இ-ள்.) (1) இடங்கர் வாய்ப்பட்ட - முதலையின் வாயில் அகப்பட்ட, களிற்றின் - கசேந்திரன் என்னும் யானையினது, உயிரை -, புரந்த - திருமால் பாதுகாத்த, செயல் - செயலானது, கடல் வீழ்த்த - கடலில் சமணரால் தள்ளப்பட்ட, நா அரையன்கல் - திருநாவுக்கரசரைக் கட்டிய கருங்கல்லானது, மிதத்தற்கு - மிதக்கச் செய்து கரை சேர்த்த செயலுக்கு, ஒப்பாகுமோ-,

திருமால் கசேந்திரன் இடரை நேரில் வந்து தீர்த்தது, சிவபிரான் நேரில் வராமலிருந்தும் அவரது திரு ஐந்தெழுத்தினை ஓதிய நாவுக்கரசருக்கு அவரைக் கட்டியிருந்த கல் மிதக்கச் செய்ததற்கு ஒப்பாகுமோ?

திருமால் சக்கரத்தைச் செலுத்தி முதலையைக் கொன்று யானையைக் காப்பாற்றினார்.  சிவனாரது ஐந்தெழுத்தினை வட்டமிட்ட அளவில் அது சமணருக்கும் தீங்கில்லாமலும் அப்பருக்கும் தீங்கில்லாமலும் கல்லைக் கரையில் கொண்டுவந்து சேர்த்தது.