இருசீர் ஓரடி அம்போதரங்கம் - 16
சடையுறு செல்லினை |
1 |
விடையுறு மெல்லினை |
2 |
கலையளை சொல்லினை |
3 |
சிலைவளை வில்லினை |
4 |
மலைவலி புல்லினை |
5 |
வழிபெறு மல்லினை |
6 |
களமில கல்லினை |
7 |
பரவெளி இல்லினை |
8 |
அமுதுகு பாவினை |
9 |
அனலுறு கோவினை |
10 |
சிலையில வாவினை |
11 |
தலைநதி மேவினை |
12 |
மறைபடு நாவினை |
13 |
உலகுணு மேவினை |
14 |
கரிவளர் காவினை |
15 |
கதிதரு மாவினை |
16. |
(இ-ள்.)
(1) சடையுறு - சடையில் பொருந்திய, செல்லினை - மேகத்தை உடையாய், செல் - மேகம்.
செறுநர்த்தேய்த்த செல் உறழ் தடக்கை - திருமுருகாற்றுப்படை. செல் என்பது இடியையும்
மேகத்தையும் உணர்த்தும். பகைவரை ஒழிப்பதில் இடிபோன்றும் அடியவரைக் காப்பதில்
மேகம் போன்றும் உள்ளனை.
(2) விடையுறும் - எருத்து மாட்டின்
மீது அமரும், எல்லினை - ஒளியினை உடையாய். ‘எல்லே இலக்கம்’ - தொல்காப்பியம்.
இடையியல்.
(3) கலைஅணை - நூல்களைத் தழுவிய, சொல்லினை
- சொற்களை உடையை.
(4) சிலை - மலையை, வளை - வளைத்த,
வில்லினை - வில்லாக உடையை.
சிலை - கல். சிலை, மலைக்குச்
சினையாகு பெயர். கருவியாகு பெயரெனினுமாம். வளைவில் - வினைத்தொகை. வளை, பிறவினைப்
பொருளில் நின்றது.
(5) மலைவலி - பார்வதியை, புல்லினை
= தழுவினை. வல்லி என்பது வலி என நின்றது. இடைக்குறை விகாரம். வல்லி என்பது வல்லிக்
கொடிபோன்றவளாகிய உமாதேவிக்கு உவமையாகு பெயர்.
(6) வழிபெறு - இடம்பெற்ற, மல்லினை
- வளப்பங்களை உடையை.
மல் - வளப்பம்: ‘மல்லல் வளனே’
- தொல்காப்பியம். வழி - வழிபாடு. (வையங் காவலர் வழிமொழிந் தொழுக - புற நா.
8) வழிபாடு செய்யும் அருச்சுனனிடத்து மல் போர் செய்தனை என்று கொண்டு மல் என்பது
மல் போர் எனினும் ஆம்.
(7) களம் - கழுத்தில், இலகு
- விளங்கும், அல்லினை - நஞ்சின் இருளை உடையை. இனிக், களம் இல - குற்றமிலதாகிய,
கல்லினை - கைலைமலையை உடையை எனினும் அமையும்.
களம், குற்றம் என்ற பொருளில்
கள்ளம் என்பதன் இடைக் குறைவிகாரம். இல என்பது இலது என்பதன் கடைக்குறை.
(8) பரவெளி - பரவெளியாகிய,
இல்லினை - வீட்டை உடையை. பரவெளி - சிதாகாசம்.
(9) அமுது உகு - (நினைப்பவர் பாடும்)
அமுது ஒழுகும். பாவினை - இனிய பாட்டுக்களை உடையை. பாவாவது தேவாரப்பா.
(10) அனல் உறு - நெருப்புப் பொருந்திய,
கோவினை - கண்ணினை உடையாய். இனிக், (கையில்) அனலை ஏந்திய பெருமையிற் சிறந்தோனாயினை,
(கோ - பெருமையிற் சிறந்தோன்) எனலுமாம். அன்றியும், நெருப்பின் கண் உற்ற கிரண
வடிவாயினை (கோ - கிரணம்) எனலும் ஆகும்.
(11) சிலையில் - (கைலாய) மலையாகிய
வீட்டில், அவாவினை -விருப்பம் உடையாய். சிலையில் அவாவினை - கல் வடிவமாயிருந்து
அடியார்க்கு அருள்புரிதலில் அவாவினை என்றும்,
சாக்கிய நாயனார் எறிந்த கல்லின்கண் விருப்பம் உடையாய்
என்றுமாம்.
“ஈசற்கு நல்லோன் எறிசிலையோ நன்னுதால் ஒண்கருப்பு வில்லோன்
மலரோ விருப்பு” என்பது காண்க.
சிலையில் அவாவினை - மலைகளில் விருப்பம் உடையாய் (மேரு
மலையை வளைத்தல், கைலாய மலையை உறைவிடமாகக் கொள்ளல், மலைமகளை மணத்தல், கல்லை
மலராக ஏற்றல் முதலியவற்றால் மலையினிடத்துத் தோன்றும் விருப்பம் உடையை.)
(12) தலைநதி - தலையில் கங்கையை,
மேவினை - விரும்பி ஏற்றனை. (பகீரதன் பொருட்டுக் கங்கையைத் தாங்கினை)
‘நம்பும் மேவும் நசையாகும்மே’
என்பது தொல்காப்பிய உரியியலாதலால் மேவினை என்பதற்கு விரும்பி ஏற்றனை என்ற பொருள்
காண்க.
(13) மறைபடு - வேதத்தைச் சொல்லிய,
நாவினை - நாவை உடையாய்.
(14) உலகு உணும் - உலகங்களை ஊழிக்
காலத்தில் உட்கொள்ளும், ஏவினை - திருமாலாகிய அம்பினைக் கொண்டனை. (ஏ - அம்பு.)
உலகு உண்ணும் ஏ - திருமால். (குறிப்பு)
(15) கரிவளர் - யானையினிடத்து
மண்ணாத தோலை, (பசுந்தோலை) காவினை - போர்வையாகக் கொண்டனை.
(கா - பாதுகாப்பு: போர்வை) மண்ணாத
- கழுவாத; உப்பு முதலியன பெய்து தூய்மை எய்தலிலாத பசுந்தோல் 2 கரி-சாட்சிக்கு,
வளர் - பொருந்துகின்ற, காவினை - பாதுகாப்பாக உள்ளனை. பொருட்சான்றாய் அமைந்தனை
3 இனிக் கரிவளர்காவினை - திருவானைக் காவினை உடையை.
(16) கதிதரு - நிலைத்தலை (வீடுபேற்றை)த்
தருகின்ற, மாவினை - மாமரத்தினை இடமாகக் கொண்டனை.
(மா - மாமரம்) கதிதரு - விரைவினைக்
கொண்ட, மாவினை - (மாணிக்கவாசகர் பொருட்டு) குதிரையைக் கொண்டாய். (மா - குதிரை)
கதிதரும் - நல்ல இயல்பு (அறத்தின்
கடவுள் எருதாக அமைந்து) வாய்ந்த, ஆவினை - எருதினைக் கொண்டனை.
கதிதரும் - போற்றுவார் விரும்புவனவற்றை
அளிக்கும் ஆற்றலை உடைய, மாவினை - மாமரத்தை உடையாய்.
கதித்தல் - பருத்தல்.
மிகவும் பருத்த (நெடுங்காலமாய்
உள்ள) மாமரத்தை இடமாகக் கொண்டனை.
மா - ஆண் யானை:
அடியார்க்கு நற்கதி அளிக்கும்
யானை முகமுடைய பிள்ளையாரை (மூத்த மகனாக)க் கொண்டனை.
மா - அன்னம்:
வீடு தரும் அன்னம் போன்ற உமையைக்
கொண்டனை.
மா - அழகு: நிலைத்துள்ள அழகுடையாய்.