திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
43

என

என்ற பாசுரத்தின் இரண்டாவது அடி ஆழ்வாரது கருத்தை அழகாகக் காட்டுகின்றது. இறைவனிடத்து மாறாத அன்பை ஆழ்வார் விரும்புகின்றார். அவ்வன்பும் பிறராற்கிடைப்பதாயின், அதனையும் விரும்பாமை ஆழ்வாரது நிலைமை எனக்கொள்க. ஆழ்வாரது இத்தகைய அன்பின் நிலைமை உலகியலிலும் அருமையாகக் காணப்படுகின்றது.

        ‘அலங்குனை அணிஇவுளி
        நலங்கிள்ளி நசைப்பொருநரேம்
        பிறர்ப்பாடிப் பெறல்வேண்டேம்
        அவற்பாடுதும் அவன்றாள் வாழியவென’

(புறம். 382)

என்ற செய்யுட்பகுதியில் கோவூர் கிழார் என்ற புலவர், ‘சோழன் நலங்கிள்ளி என்ற அரசனைப்பாடுதல், அவனாற்பரிசில் பெறுதல் அன்றி, பிறரைப் பாடவும் மாட்டேன்: அவராற் பரிசு பெறவும் மாட்டேன்,’ என்று கூறுதல் காணலாம்.

    ஆழ்வாரது ஆழ்ந்த சீரிய அன்பின் நிலை இவ்வாறு இருத்தலால், அவர் எம்பெருமானிடத்து மாறாத அன்பை அல்லது பிறிதொன்றையும் விரும்பவில்லை எனக்கொள்க.

    ஆழ்வாரது அன்பை அடிப்படையாகக் கொண்ட இன்னும் பல வகையான மன நிலைகளைத் திருவாய்மொழியிற்காணலாம்.

        ‘உண்டோவை காசி விசாகத்துக் கொப்பொருநாள்?
        உண்டோ சடகோபர்க் கொப்பொருவர்?-உண்டோ
        திருவாய் மொழிக்கொப்பு? தென்குருகைக் குண்டோ
        ஒருபார் தனில்ஓக்கும்ஊர்?1

 

1. நம்மாழ்வார் திருநட்சத்திரத் தனியன் - ஸ்ரீ குருபரம்பரா பிரபாவம் - ஸ்ரீ
  நம்மாழ்வார் வைபவம்.