தம
தம் ஆசாரியராகிய பட்டரிடத்தில் ஆறாயிரப்படி வியாக்கியானத்தைப் பெற்ற
நஞ்சீயர், அதனைச் சிறிது விரிவாகச் செய்யத் திருவுள்ளம் பற்றி, அதனைப் பட்டரிடத்தில்
விண்ணப்பஞ்செய்து அவர் அனுமதி கொண்டு, ஒன்பதினாயிரப்படி என்னும் இவ்வியாக்கியானத்தை
அருளிச்செய்தார். பட்டர் திருநாடு அலங்கரித்த பின்னர், ஆசாரிய பதவியினை ஏற்ற நஞ்சீயர்,
இவ்வியாக்கியானத்தை முற்றப் பட்டோலை கொண்டு ‘இதனை ஒரு சம்புடத்திலே நன்றாக எழுதித தரவல்லார்
உண்டோ?’ என்று தம் ஸ்ரீ பாதத்து முதலிகளைக் கேட்க, அவ்வடியார்களும், ‘பலகாலும் இங்கு,
வருகின்ற, காவேரியின் தென்கரையிலுள்ள ‘நம்பூர் வரதராசர் என்பவர் நன்றாக எழுதுவார்,’ என்று
விண்ணப்பம் செய்ய, நஞ்சீயரும் வரதராசரை அழைப்பித்து, ‘ஒரு கிரந்தம் எழுதிக் காட்டும்,’
என்ன, வரதராசர் எழுதிக் காட்டியதை நஞ்சீயர் பார்த்தருளி, ‘எழுத்து முத்துப் போன்று நன்றாய்
இருக்கின்றது; ஆயினும், இது திருவாய்மொழி வியாக்கியானம் ஆகையாலே, ஒரு விலக்ஷணரைக்கொண்டே எழுதுவித்தல்
வேண்டும்; திரு இலச்சினை திருநாமம் மாத்திரமுண்டான இவரைக்கொண்டு எழுதுவித்தல் தவறு,’ என்று
திருவுள்ளத்தில் நினைந்து, வரதராசரது திருமுகத்தை நோக்க, சீயருடைய திருவுள்ளக் கருத்தினைத் திருமுகத்தால்
அறிந்த வரதராசரும், ‘அடியேனைத் தேவரீர் திருவுள்ளக் கருத்தின்படியே திருத்திப் பணிகொள்ளல்
ஆகாதோ?’ என்று விண்ணப்பஞ் செய்தார்.
அதனைக் கேட்ட நஞ்சீபரும், மிகவும் திருவுள்ளம் உவந்து வரதராசரை அங்கீகரித்தருளிப்
பிரபந்நர்களுக்கு உரிய நிஷ்டை எல்லாம் இவருக்கு நிறைவுறும்படி விசேடமான திருவருளைச் செய்து,
பட்டோலையில் எழுதின ஒன்பதினாயிரப்படியை ஒரு முறை அருளிச்செய்து காட்டியருளி, ‘இப்படியே தவறாமல்
எழுதித் தாரும்,’ என்று பட்டோலையை வரதராசர் கையில் கொடுத்தனர். பெற்ற வரதராசரும்,
‘அடியேன் ஊரிற்குச் சென்று அங்கு எழுதிக் கொண்டு வருகிறேன்,’ என்று விண்ணப்பஞ்செய்து, நஞ்சீயரிடத்தில்
விடைபெற்று ஏகினார். ஏகினவர், காவேரியில் இறங்கிச் செல்லும்போது, காவேரி சிறிது தூரம்
நீந்திச் செல்லவேண்டியதாய் இருந்ததாதலின், பட்டோலையைத் தலையிலே கட்டிக்கொண்டு நீந்தினர்.
நீந்திச்செல்லுங்கால், அவ்வெள்ளத்திலே அப்பட்டோலையினை அவர் இழக்க நேர்ந்தது. கரையினை
அடைந்த வரதராசர், ‘பட்டோலை போய்விட்டதே! இனி என்செய்வது!’ என்று வருந்தி, தமது வீட்டினை
அடைந்து, தமது நித்திய கருமங்களை
|