திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
58

மற

மற்றொரு பாசுரத்திற்கும் உள்ள பொருள் தொடர்பைக் கூறிச் செல்லும் பண்பு வேறு எவ்வுரையிலும் காண்டல் அரிது.

    இவ்வியாக்கியானம் இன்றேல், இத்தமிழ் மறையின் அர்த்த விசேடங்களை எல்லாம் அறிந்து கூற வல்லார் ஒருவரும் இலர்.1 இத்தகைய வியாக்கியானங்களைத் தமது பேரருளால் செய்து உதவிய பெரியார்கட்கு நாம் செய்யும் கைம்மாறு யாது உளது?

        ‘ஆரியன் அவனை நோக்கி ஆருயிர் உதவி யாதும்
        காரியம் இல்லான் போனான் ; கருணையோர் கடமை ஈதால்;
        பேரிய லாளர் செய்கை ஊதியம் பிடித்தும் என்னார்;
        மாரியை நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ வையம்?’ என்றான்.

(கம்ப. நாக. 271.)

  என்ற அருமைச் செய்யுள் ஈண்டுக் கருதத் தக்கது.

    இதன் பெருமைக்குச் சான்றாக முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றனை ஈண்டுக் கூறுகின்றேன். தம் ஆசாரியரான திருவாய் மொழிப்பிள்ளையிடம், திருவாய்மொழி முதலான திவ்வியப் பிரபந்தங்களினுடைய அர்த்த விசேடங்களை எல்லாம் ஐயந்திரிபு அறக் கேட்டுத் தெளிந்த ஸ்ரீமத் மணவாளமாமுனிகள், தாம் அறிந்த அர்த்த விசேடங்களை அனைவரும் கேட்டு அறிந்து உஜ்ஜீவிக்கும்படி கூறல் வேண்டும் என்ற எண்ணம் மிக்கவராய்த் திருவரங்கத்தில் வாழ்ந்திருந்த காலத்தில், செங்கோலுடைத் திருவரங்கச் செல்வனார் இவரை அர்ச்சகர் மூலமாக அழைத்தருளித் ‘திருவாய்மொழியின் அர்த்தத்தை நாமும் நம் அடியார்களும் கேட்டு வாழும்படி பெரிய திருமண்டபத்தில் தொடங்கி நடத்தும்’2 என்று தம் திருவடிகளை ஊன்றுவித்து அருளப்பாடிட்டு நியமித்தருளினார். இவரும், இறைவர் இட்ட கட்டளையைத் தலைமேற்கொண்டு அப்படியே தொடங்கி

 

1. ‘முந்துறவே பிள்ளான் முதலானோர் செய்தருளும்
   அந்த வியாக்கியைகள் அன்றாகில் - அந்தோ!
   திருவாய் மொழிப்பொருளைத் தேர்ந்துரைக்க வல்ல
   குருவார் இக் காலம்? நெஞ்சே! கூறு.’

(உபதேசரத். 40.)

  என்றார் மணவாள மாமுனிகள்.

2. ‘நாமார் பெரியதிரு மண்டபமார் நம்பெருமாள்
   தாமாக நம்மைத் தனித்தழைத்து - ‘நீமாறன்
   செந்தமிழ்வே தத்தின் செழும் பொருளை நாளும் இங்கு
   வந்துரை’ என்று ஏவுவதே வாய்ந்து.’

  என்பது அப்பெரியார் திருவாக்கு.