பக்கம் எண் :


40 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

     கொய்திட - கொய்து வந்து இட. (வரும் பாட்டிலும் இவ்வாறே
கொள்க.) நந்தனவனச்சூழல் - சூழல் (காவல்) பெற்ற நந்தனவனம்
என்க. 22

33. அங்கு முன்னரே யாளுடை நாயகி
 
  கொங்கு சேர்குழற் காமலர் கொய்திடத்
திங்கள் வாண்முகச் சேடிய ரெய்தினார்
பொங்கு கின்ற கவினுடைப் பூவைமார்.
23

     (இ-ள்.) அங்கு முன்னரே - அந்த நந்தனவனத்தில் (ஆலாலசுந்தரர்
சேர்வதற்கு) முன்னமே; ஆளுடைய ...... கொய்திட - உயிர்களை எல்லாம்
ஆளுடைய அம்மையாரது குழலுக்கு ஆகின்ற மலர்களைக் கொய்துவந்து
இடும்பொருட்டு; திங்கள் பூவைமார் - முழுமதிபோன்ற ஒளிவீசும் முகத்தையும்
மேன்மேற்பொங்கி எழும் அழகினையும் உடைய பூவைமார்களாகிய
சேடியர்கள் இருவர் சேர்ந்தனர்.

     (வி-ரை.) ஆளுடை நாயகி - பார்வதியம்மை; மேற்பாட்டிற் சொன்ன
முதல்வனாகி யாவரையும் ஆளுடைய நாயகனுக்கு நாயகி. ஆளுடை -
ஆளாக உடைய - ஆளும் தன்மையுடைய. ஈறு குறைந்த பெயரெச்சம்.

     கொங்கு சேர் குழல் - இயற்கையிலே வாசனை சேர்ந்த கூந்தல்.
இதனைக் “கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி” என்ற
திருப்பாசுரத்தாலும், திருவிளையாடற் புராணத்துள் நக்கீரர் சரிதத்தாலும்
அறிக.

     குழற்கு ஆம் மலர் - அம்மையார் பூசைக்கு ஆவன என்று
விதிக்கப்பெற்ற மலர்.

     பூவைமார் - பூவைபோன்ற பெண்கள். இச்சேடியர்கள் பெயர்;
அனிந்திதை கமலினி என்பது வரும்பாட்டிற் காண்க.

     பொங்குகின்ற கவின் - புதிது புதிதாய் விளைகின்ற பேரழகாதலின்
அது அன்று விசேடிக்கக் காரணமாயிற்று என்பது.

     அதற்கு முன்னரே நாயகி குழற்கா மலர் கொய்திடச் சேடியர் எய்தினார்
என முடிக்க. முன்னெமை - என்பதும் பாடம்.                   23

34. அந்த மில்சீ ரனிந்திதை யாய்குழற்
 
  கந்த மாலைக் கமலினி என்பவர்
கொந்து கொண்ட திருமலர் கொய்வுழி
வந்து வானவரீச ரருளென.
24

     (இ-ள்.) அந்தமில்சீர் - என்பவர் - (அச்சேடியர்களாவார்) அளவற்ற
சிறப்புடைய அனிந்திதை, நுணுகிச் செறிந்த கூந்தலும் மணம் பொருந்திய
மாலையும் உடைய கமலினி, என்ற பேருடையார்கள்; கொந்து ... கொய்வுழி
- பூங்கொத்துக்களிலே அன்று அலர்ந்த மலர்களைத்தெரிந்து கொய்து
கொண்டிருந்தபோது; வந்து ... அருளென - தேவதேவனாகிய சிவபெருமானது
திருவருளே இது என்னும் படியாக வந்து;

     (வி-ரை.) மேல்வரும் பாட்டில்“மனம் போக்கிட” என்ற வினையுடன் தொடர்ந்து பொருள் கொள்க. வந்து மனம் போக்கிடுதலே வினையாய்
முடிந்து இச் சரிதத்துக்கும் இப்புராணத்துக்கும் காரணமாயினமை காண்க. அதனைச் சொல்லாற்றலிற் காட்டி அழகுபெற அமைத்தது ஆசிரியரது சிறப்பியல்புகளில் ஒன்று.

     கொந்து கொண்ட திருமலர் - பூங்கொத்து; பூங்கொத்திலே
முன்னாள் அலர்ந்தனவாகிய பழம்பூக்களையும், பின்னாள் அலர
நிற்பனவாகிய முகைகளையும் நீக்கி, அன்றலர்ந்த புதுப்பூக்களைக் கொய்தனர்
என்பார், “கொந்து கொண்ட திருமலர்” என்றார். மேற்பாட்டிலே “நாண்மலர்”
என்றதும் இது.