பக்கம் எண் :


தில்லைவாழந்தணர் புராணம்433

Periya Puranam

இந்நிலைகள் எனவும், அதுவே இத்திருநடம் எனவும் உணர்த்தினார்.
இத்திருக்கூத்தினால் இவை போதிக்கப்பெறுதல் நல்லாசிரியர்கள் உணர்த்தத்,
திருமூலர் திருமந்திரம் (திருக்கூத்துத்தரிசனம்), சிவஞானபோதம் முதலிய
ஞானசாத்திரங்களுக்குள்ளே தெளிந்து கொள்க. 252 முதலிய
பாட்டுக்களிலும் இன்னும் வரும் இடங்களிலும் காண்க.

     தில்லை - தில்லை என்ற நகரம். தில்லை என்னு மரமடைந்த
காடாயிருந்தமை பற்றி இதற்கு இப்பெயர் வந்தது. தில்வம் என்னும்
வடமொழி, தமிழில் தில்லை என வந்தது. மரத்தின் பெயர் அது நிறைந்த
காட்டுக்காகிப், பின்னர் அக்காடிருந்த இடத்தில் அமைந்த
நகரத்துக்காயிற்று. பொது - அந்நகரிலே அமைந்த அம்பலம் - சபை.
நடம் - அச்சபையில் நிகழும் திருக்கூத்து.

“தில்லை மாநகர் போற்றி; தில்லையுட்
செம்பொ னம்பலம் போற்றி; யம்பலத்
தாடு நாடகம் போற்றி“

     என்று கோயினான் மணிமாலையிற் (40) பட்டினத்தடிகள்
போற்றியதும் காண்க.

     போற்றி - போற்றப் பெறுவது. ஊருணி என்பதனுட்போல இகரம்
செயப்படுபொருள் விகுதி. வாழியவென்பது வாழி என வந்தாற்போல
யகரங்கெட்டு வந்த வியங்கோள் வினைமுற்றெனக் கொண்டு காக்க எனப்
பொருள் கொள்ளலும் பொருந்தும்.

     இப்பாட்டிலே, ஆதி - பிரமா; நடு - விட்டுணு; அளவு -
இறுதியாகிய உருத்திரன், சோதியா யுணர்வுமாகியவன - உயிர்களுக்கு
மாயா சத்தியால் மறைப்புச் செய்யும் திரோதானசத்தியையுடைய மகேசுரன்;
தோன்றிய பொருள் - அச்சத்தி தோன்றுதற்கிடமாகிய சாதாக்கியம் -
சதாசிவமூர்த்தி என்று கூறுவாறுமுண்டு.                           1

351. கற்பனை கடந்த சோதி கருணையே யுருவ மாகி  
  அற்புதக் கோல நீடி யருமறைச் சிரத்தின் மேலாஞ் சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்துணின்று
பொற்புட னடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி
                                   போற்றி.
2


     (இ-ள்.) கற்பனை.............சோதி - பசுஞான பாசஞானங்களாற்
கற்பிக்கப்பெற்ற அவைகளை எல்லாம் கடந்து நின்ற, முன்பாட்டிற் கூறிய
அந்தச் சோதிப் பொருளானது; கருணையே உருவம் ஆகி - அருளே
திருமேனியாகக்கொண்டு; அற்புதக் கோலம் நீடி - அறிதற்கரிய
அற்புதமாகிய கோலத்திலே நீடி; அருமறைச் சிரத்தின்...........நின்று -
அரிய வேதசிரசாகிய உபநிடதங்களின் உச்சியில் உணர்த்தப்படும்
ஞானாகாயத்தின் வடிவமேயாகிய தில்லைத் திருச்சிற்றம்பலத்திலே
நிலைத்து நின்று; பொற்புடன்........போற்றி - அழகுடனே திருக்கூத்துச்
செய்கின்ற பூப்போன்றதும் கழலை யணிந்ததும் ஆகிய திருவடி நம்மாற்
போற்றப்பெறுவது! போற்றப்பெறுவது!!

     (வி-ரை.) கற்பனை கடந்த சோதி - கற்பனை கற்பிக்கப்
பெறுவதெல்லாம் கற்பனை எனப்படும். உருவமாகிய கற்பனைக்கு
முதற்காரணமாகிய மாயையைக் கடந்த ஞானவடிவம் என்றும், பல
சமயவாதிகளும் தத்தமக்குத் தோன்றியவாறே புனைந்துரைத்த
கற்பனையைக் கடந்த சோதி என்றும், சதாசிவம் மகேசுவரம் முதலிய
நிட்கள சகள மூர்த்திபேதங்களைக் கடந்த ஒளியுருவன் என்றும்
பலவாறுரை கூறுவாருமுளர். தனக்குமேல் ஒருவரிருந்து கற்பித்தலின்றித்
தானே எல்லாவற்றையும் கற்பிக்கின்ற சுயம்பிரகாசமாகிய சோதி என்பது
கருத்து. கற்பனை - பாவனையுமாம்.

“முத்தியு ஞானமும் வானவ ரறியா முறைமுறை பலபல
                            நெறிகளும் காட்டிக்
கற்பனை கற்பித்த கடவுளை“

           - சுந்தரர் தக்கேசி - திருக்கழுமலம் - 2

     “இவனிறைவ னென்றெழுதிக் காட்டொ ணாதே“ - முதலிய
தேவாரங்களும்,