பக்கம் எண் :


438 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

அதில் மிகுவன்மையும் படைத்துள்ளார். தருமம் - பூருவ மீமாஞ்சையி்கண்ட
யாகாதி கருமமும், தத்துவநெறி - உத்திர மீமாஞ்சையிற் கண்ட
பிரமோபாசனையும் குறித்தது.

     ஆளாம் திருவினாற் பொலிந்த சீர் - ஆள் ஆகும் திரு அருட்
செல்வம். “ஆட்பாலவர்க்கருளும் வண்ணம்“ - பிள்ளையார். தருமமே
பொருளாக் கொண்டு ......... செல்லும் அருமறை ........ பயின்று வல்லாராய்,
அருளான் மன்னுயிர் மல்க .... ஓம்பி - ஆளாம் திருவினால் ....... சீரார் -
என்று கூட்டி முடிக்க. கொண்டு செல்லும் அருமறை என்க. “அதாதோ
தர்ம ஜிஜ்ஞாசா“ என்பது தருமமீமாஞ்சை. “அதாதோ பிரம்ம ஜிஜ்ஞாசா“
என்பது பிரம மீமாஞ்சை.

     தத்துவ நெறி - “இலகு மெய்ந்நெறி“. சிவமாகிய பரதத்துவத்தை
அடைதற்குரிய நெறியிற் சென்று முற்றுதலின் தத்துவ நெறியிற
செல்லும்....மறை என்றார். இவர்களை முன்வைத்துப் பாடியபோது
மன்னுயிர்கள் அருளால் மல்க எரியோம்பும் இச்சிறப்பையே
திருஞான சம்பந்த நாயனார்,

     “கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே, செற்றார்“

எனத் தில்லை முதற் பதிகத்தில் முதலில் வைத்தோதியருளினார்.
ஓதுதலும், ஓதியபடியே நிற்றலும் வல்லார் என்க. “கற்க....நிற்க அதற்குத்
தக“ என்ற நீதிக் கிலக்கியமாவார் என்பது.                      5

355. மறுவிலா மரபின் வந்து மாறிலா வொழுக்கம்                                 பூண்டார்;  
  அறுதொழி லாட்சி யாலே யருங்கலி நீக்கி
                                 யுள்ளார்;
உறுவது நீற்றின் செல்வ மெனக்கொளு முள்ள
                                 மிக்கார்;
பெறுவது சிவன்பா லன்பாம் பேறெனப் பெருகி
                                வாழ்வார்;
6

     (இ-ள்.) மறுவிலா.......பூண்டார் - (இவர்கள்) குற்றமற்ற மரபிலே
வழிவழியாக வந்ததன்றியும் இடையறாத நல்லொழுக்கத்தை
மேற்கொண்டவர்கள்; அத்தொழில்.....உள்ளார் - தமக்குரிய ஓதல்
முதலிய ஆறு தொழில்களையும் விதிப்படி செய்து வருகின்றமையாலே
உலகத்தின் உயிர்கட்கெல்லாம் கலியை வாராமற் பாதுகாத்தவர்கள்;
உறுவது....மிக்கார் - தாம் பெறக்கடவதாகிய உறுதிப்பயன் திருநீற்றின்
நெறியாலாகிய அருட்செல்வமே என்று கொண்டொழுகி மிக்கெழும்
ஆசையுள்ளவர்கள்; பெறுவது.....வாழ்வார் - சிவபெருமானிடத்துத்
தாம் பெறத் தக்க பெரும்பேறாவது அவன் திருவடியிலேயே பதிந்த
அன்பொன்றுமேயாம் என்று கொண்ட பெருவாழ்வுடையார்கள்;

     (வி-ரை.) மறுவிலா மரபு - தாய் தந்தை என்ற இருமரபும்
வழிவழிச் சுட்டியறியத் தக்கவாறு தூயராம் தன்மை குறித்தது. “இருவர்ச்
சுட்டிய பல்வேறு தொல்குடி“ என்றார் நக்கீரதேவர்.

     மாறிலா ஒழுக்கம் - மாறுதல் - இடையறுதல் - அஃதில்லாது
நிலைபெற்றுநின்று ஒழுகும் ஒழுக்கம். “நிலையிற்றிரியாது“ - குறள்.
நிகரில்லாத என்றலுமாம்.

     அறுதொழில் - அந்தணர்க்குரியனவாய் நூல்களில் விதித்த ஓதல்
முதலிய ஆறு தொழில்கள். ஆட்சி - இவற்றைத் திறம்பட வழுவாதியற்றல்.
முன் குறித்த ஒழுக்க மின்னதென்று கூறியபடி.

     அருங்கலி நீக்கி - இஃது இவர்களது தொழிலால் உலகம் பெறும்
பயன் குறித்தது. தம்மிடமும் கலி வாராமல் நீக்கியவர் என்றலுமாம்.
“கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார்“ என்றும், “செல்வ
நெடுமாடஞ்சென்று சேணோங்கிச் செல்வமதி தோயச் செல்வ முயர்கின்ற,
செல்வர்வாழ் தில்லை“ என்றும் இதனையே திருஞான சம்பந்த நாயனார்
அருளியமை காண்க. கற்றல - ஓதல் ஓதுவித்தலும், எரியோம்பல் -
வேட்டல் வேட்பித்தலும், கலிசெறுதல் - ஈதல் ஏற்றலும் என இங்குக்
கூறிய அறுதொழிலும் கருதியது காண்க. ஓதல் - வேத