பக்கம் எண் :


தில்லைவாழந்தணர் புராணம்439

Periya Puranam

சிவாகமமாதி சிவநூல்களை ஓதுதல். வேட்டல - சிவபெருமானை நோக்கிச்
செய்யும் சிவவேள்விகளை யியற்றல்.

     உறுவது - தாம் அடையக் கருதுவது. உயிர்கள் அடையத்தக்க
தென்பதுமாம். தமது தொழிலொழுக்கத்தாலே பிறர்க்குரிய பயன்
கலிநீக்குதலாகவே, தாம் உறுவது நீற்றின் செல்வமும், தாம்
குறிக்கோளாகக் கொண்டபேறு அன்பும் ஆகக் கொண்டவர் என்க.
நீற்றின் செல்வர் சிறப்பும் இயல்பும் திருநீற்றுப் பதிகத்துட் காண்க.

     பெறுவது சிவன்பா லன்பாம் பேறு - வேதத்திற் சொல்லப்பெற்ற
பிரமானந்தம் சிவானந்தமே எனக் குறித்தொழுகுதல். “சிவம் சதுர்த்தம்
சாந்தம் அத்வைதம் மன்யந்தே“ என்ற வேதவிதிப்படிச் சிவனையே
நினைந்து ஒழுகுதல். இதனையே “பொது நீக்கித் தனைநினைய
வல்லோர்க்கென்றும் பெருந்துணையை“ என்றருளினார் அப்பெருமான்.
பேணுதல் - வழிபடுதல். 6

356. ஞானமே முதலா நான்கு நவையறத் தெரிந்து
                                 மிக்கார்;
 
  தானமுந் தவமும் வல்லார்; தகுதியின் பகுதி
                               சார்ந்தார்;
ஊனமே லொன்று மில்லா; ருலகெலாம் புகழ்ந்து
                                 போற்று
மானமும் பொறைபுந் தாங்கி மனையறம் புரிந்து
                                வாழ்வார்;
7

     (இ-ள்.) ஞானமே......மிக்கார் - ஞானம் முதலாக வைத்து
எண்ணப்பட்ட நான்கினையும் குற்றம் நீங்கத் தெரிந்து அவற்றிலே
மிகுதியும் திறமை பெற்றுள்ளவர்கள்; தானமும்.....வல்லார் - தானத்திலும்
தவத்திலும் சிறந்தவர்கள்; தகுதியின் பகுதி சார்ந்தார் - எல்லாவற்றிலும்
தக்கவற்றையே சார்ந்தவர்கள்; ஊனமேல் ஒன்றுமில்லார் - ஒருகுறைவும்
இல்லாதவர்கள்; உலகெலாம்....வாழ்வார் - உலகங்களெல்லாம் போற்றும்
மானத்தினையும் பொறுமையினையும் மேற்கொண்டு இல்லறத்தை வழுவாது
இயற்றி வாழ்கின்றவர்கள் (இவர்கள்);

     (வி-ரை.) ஞானமே முதலா நான்கு - ஞானம் - யோகம் -
கிரியை - சரியை என்பன. ஞானத்தை முதலாக வைத்துச் சொன்ன
தென்னையெனின், ஞானமே கனி - பலன் என்பர். அதுவே முடிந்த
பயனாம். ஆயின் இந்தப் பலனைப் பெறுதற்கு முன், கனியை
வேண்டுவான் ஒருவன் கனியே தனது விருப்பில்முதன்மை பெற்றதாயினும்
அதற்கு முன்னதாகக் காயும், மலரும், அரும்பும் இன்றியமையாது
வேண்டப்படுதலின் அவற்றை முன்னர்க் காப்பவனாவன். அதுபோலவே
இதுவுமாதலின் முதலா நான்கும் என்றார். முதல் - முதன்மையாகக்
கொள்ளப்பட்டது.

“விரும்புஞ் சரியைமுதல் மெய்ஞ்ஞான நான்கும்
அரும்புமலர் காய்கனிபோ லன்றோ பராபரமே“

என்றார் தாயுமானார். இக்கருத்துப் பற்றியே திருமூல நாயனார் புராணத்துள்,

     “ஞானமுத னான்குமலர் நற்றிருமந் திரமாலை“ (26)

     “நலஞ்சிறந்த ஞானயோ கக்கிரியா சரியையெலாம்“ (28)

என்று ஆசிரியர் வரம்புபடுத்திக் கூறியருளினார். இவ்வாறறியாது
ஞானமுதல் நான்கு என்றதற்கு ஞானத்தை அந்தமாகவுடைய நான்கென்று
கூறுவாருமுளர். முதல் அந்தமென்று பொருள்படாமை காண்க. ஞானம்
முதல் நான்கும் நான்கு பாதம் நெறி - என்பர். இவையே சன்மார்க்கம் -
சகமார்க்கம் - புத்திரமார்க்கம் - தாசமார்க்கம் என்று கூறுவர். இவற்றின்
விரிவுகளைத் திருமந்திரத்துட் காண்க.

     நவையற - ஐயந்திரிபு நீங்க. நவையறும் பொருட்டு என்று
கூறலுமாம். “கற்க கசடற“ என்ற இடத்து விபரீதவையங்களை நீக்கி
மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல் என்றுரைத்தது காண்க.