|
(இ-ள்.)
அவர்.....மிக்கார் - அவர் தமது மனைவியாரும்
அருந்ததியின் மிக்க கற்பினை யுடையராகப் பெற்றார்; புவனங்கள்....
என்று - உலகம் உய்யும்பொருட்டுப் பாற்கடலில் பொங்கி மேலெழுந்த
விடத்தை இறைவன் அமுதுசெய்ய (அது உள்ளே சென்று மறைந்துபடாமல்
எமக்கெல்லாம் அறிகுறியாக விளங்கி இருக்கும்படி) யாங்கள் செய்த
தவப்பேறுதான் அம்மட்டில் நிற்கும்படி தடுத்ததோ என்று சொல்லும்படியாக
இந்தக் கண்டமல்லவா அதனைத் தடுத்துத் தானே தரித்து நிற்கிறது என்ற
கருத்தினாலே; சிவன்....என்பார் - சிவபெருமானாகிய எமது இறைவனது
கழுத்தையே எப்போதும் எண்ணுபவராய்த் திருநீலகண்டம்
என்று
போற்றி வருவார்.
(வி-ரை.)
அருந்ததிக் கற்பின் மிக்கார்
- அருந்ததியின் கற்பு
மிக்கார் - என மாற்றி உரைக்க. அருந்ததியின் - அருந்ததியின்
மேம்பட்ட. இங்ஙனமன்றி அருந்ததியைப்போலும் கற்பின் மேம்பட்டவர்
என்றுரைத்தலுமொன்று.
புவனங்களுய்யத் தரித்ததென்று
- என்று கூட்டுக. நஞ்சுண்டது
தேவர்களின் பொருட்டேயாயினும் அதனைக் கழுத்தளவில் நிறுத்தித்
தரித்தது தமது கருணையை எல்லாப் புவனங்களிலும் உள்ள எல்லா
உயிர்களும் உணர்ந்து உய்யும்பொருட்டாதலின், உய்யத்தரித்தது
என்றார். “பொங்கி நின்றெழுந்த கட னஞ்சினைப், பங்கி யுண்டதோர்
தெய்வமுண் டோசொலாய்“ என்பது முதலிய சைவத் தெய்வத்
திருவாக்குக்கள் எங்கெங்கும் இக்கருணைத் திறத்தினைத் தேற்றம்பெறப்
போற்றி முழக்குதல் காண்க.
தகைந்து
- தகைவுசெய்து - தடுத்து.
திருநீலகண்டம்
- இத்திருப்பெயரின் ஆணையாலே பதிக முழுதும்
ஆணையிட்டு ஆளுடைய பிள்ளையார் அருளிச்செய்த திருநீலகண்டத்
திருப்பதிகமுங் காண்க.
அவர்
- முன்பாட்டிற் சொல்லியபடி எளியரானாராகிய அவர்
என்று சுட்டு விரித்துரைத்துக் கொள்க. திருநீலகண்டம் என்பார் (ஆகிய)
அவர் என்று வினையாலணையும் பெயராக்கிக் கூட்டியுரைப்பார் சுப்பராய
நாயகர்.
என்பார்
- எளியராயின அவரே முன்னர்ச் சொல்லிய நலத்தின்
வந்தார் - விருப்பின் நின்றார் - சாரும் நீரார் என்ற இயல்புடன்
“திருநீலகண்டம்“ என்பாருமானார் என்க. இங்ஙனமன்றி மனைவியார் -
மிக்கார் - திருநீலகண்டமென்பார். - என இச்செயலை
மனைவியார்க்காக்கி யுரைப்பது மகாலிங்கையர், ஆலாலசுந்தரம் பிள்ளை
இவர்களதுரைகள். இப்பாட்டிலே அவர் தங்கண்
என முன் பாட்டுக்களைத்
தொடர்ந்து கூறுவதனோடு, நாயனாரது இயல்புகளையே தொடர்ந்து கூறிச்
செல்கின்றார்; நாயனார்க்கே இதுபற்றிய காரணப்பேர் போந்தமை
முன்னரும் (359) பின்னரும் பெறப்படுகின்றது; “திருநீலகண்டத்துக்குயவனார்“
என்று முதனூல் (திருத்தொண்டத் தொகை) விதித்தது; ஆதலின்
திருநீலகண்டம் என்று பத்திசெய்துரைக்கும் இவ்வியல்பு நாயனார்க்கு
உரைக்கப்பெறுதலே தகுதியாம். “என்பார் ஆன தங்கேள்வர்“ என்று
இப்பாட்டையும் வரும்பாட்டையும் குளகமாகத் தொடர்ந்து பொருள் கூறுவர்
ஆறுமுகத் தம்பிரான் அவர்கள். “ஆதியார் நீலகண்டத் தளவுதாம் கொண்ட
ஆர்வம்“ எனப் பின்னர்க் (366) கூறுவதும் இக்கருத்தையே வலியுறுத்தும்.
அன்றியும் ஆணையிடுபவர் ஆணையிடப் பெறுபவர்க்குகந்த பொருள்
குறித்து அதன்மீது ஆணையிடுதலே மரபு. ‘உன் குலதெய்வத்தாணை', ‘உன்
அப்பன் ஆணை' முதலிய வழக்குக்களும் காண்க. நாயனார்
திருநீலகண்டத்திற் பற்று மிக்குப் பயின்ற பண்பினாலே அன்றோ மனைவியார்
அதனைக் கூறி ஆணையிட்டவுடன், “தாங்கொண்ட ஆர்வ“த்தினாலே
“பேதியா ஆணை கேட்ட பெரியவர்“ அதனை ஆயுள்முழுதும் கடவாது
உய்த்ததும் ஆம் என்க இன்னும் பலவாற்றாலும் இதுவே பொருள் என்க.
சிவன் எந்தை
- சிவனாகிய எந்தை நஞ்சுண்டதாலும் கழுத்திற்
றரித்ததாலும் யாமெல்லாம் உளமாயினோம் என்ற கருத்துந் தோன்ற
இங்குச் சிவனெந்தை என்ற சொல்லாற் போற்றினார். “அத்தன்
முத்தன் சிவன்“ (358) என்ற திருக்
|