பக்கம் எண் :


இயற்பகை நாயனார் புராணம் 503

Periya Puranam

சுட்டியது. ஏவின - செயப்பாட்டு வினைப்பொருளில் வந்தது. அடியார்பணி
அடியவர்க்காதலோடு ஆண்டானுக்குமாவன ஆதலின் அதனையே
பேணினார் என்க. மிக்க சீர் அடியார் - (405) என மேற்பாட்டிற் கூறியதும்
காண்க.

     இப்பாட்டிற்கு இயற்பகையார் என எழுவாய் வருவித்துரைக்க.

     இவ்விரண்டு பாட்டுக்களும் ஒரு முடிபு கொண்டன.

     வினைப்படி - விளங்க - என்பனவும் பாடங்கள். 3

     407. (வி-ரை.) ஆயுநுண்பொருளாகியும் - ஆய்ந்து ஆய்ந்து
அறியத்தக்க நுண் பொருளாய் எஞ்சிச் செல்லும் தன்மையுடையராகியும்.
ஆகியும் வெளியே ஆடுவார் என்று கூட்டுக.


     “அணோ ரணீயாந்“ - வேதம்.

     “பாதாள மேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியு மெல்லாப் பொருண்முடிவே“

                                 - திருவாசகம்

     “அணுவோ ரண்டமாஞ் சிறுமை கொண்டு“ - திருவிசைப்பா 1311
என்பன தமிழ் வேதம்.

     “அணுக்க ளெல்லாம் அண்டங் களாக“
                  - திருவிளையாடற்புராணம்.

     ஆயும் - இஃது ஆணவ சொரூபமான யான் எனது என
உயிரறிவுகொண்டு, ஆராய்கின்றேன் - அறிகின்றேன் - என்னும்
ஆராய்ச்சியன்று. ஆணவத்தை முற்றிலும் அடிப்படுத்தி அவன் அறிவிக்க
அறிகின்றேன் - என்னும் பரஞான சிற்சத்தி ஒளியின் உதவியால் அறிகின்ற
ஆராய்ச்சி இங்குக் கருதப்பெற்றது.

     “அருளும் வண்ணமும் மாதி மாண்புங் - கேட்பான் புகிலள
வில்லை“
     “ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச் - சோதிக்க வேண்டா“
      என்னும் திருப்பாசுரங்களின் விரிவுரையில்,

“ஓது மெல்லை யுலப்பில வாதலின் - யாது
மாராய்ச்சி யில்லை“- திருஞான - புரா - 833

     “இன்ன தன்மை யேது எடுத்துக்காட் - டன்ன வாற்றா லளப்பிலன்“
- மேற்படி - 835

என்று ஆசிரியர் அருளியமை காண்க. ஆய்தல்...உள்ளதனுணுக்கம் என்று
தொல்காப்பியர் கூறலின் மிக்க நுண் பொருளாகியும் என்றுரைத்தலுமாம்.

     ஆகியும் - ஆடுவார் - மனம் வாக்குக்களுக் கெட்டாததாயும்
சிவஞானத்தால் அறியப்பெறுவதாயும் உள்ள நுண் பொருளேயாயினும்
திருவம்பலத்தினிடத்தே தாமாக வெளிப்பட்டு எல்லா உயிர்களும் உய்யுமாறு
அருட் கூத்தாடுவார். “உலகெலா முணர்ந்தோதற் கரியவன்..அம்பலத்
தாடுவான்“ என இப்புராணத் தொடக்கத்திற் கூறியது காண்க. “அரங்கிடை

     நூலறிவாள ரறியப்படாத தோர் கூத்து“ - (திருவதிகை -
காந்தாரம் - 6) என்ற அப்பர் பெருமான் தேவாரமுங் காண்க.

     ஆராய்வார் காணாமை நுண் பொருளாகியும், அங்ஙனம் ஆராய்ச்சி
செய்யாது பணிவார் காண வெளிப்பட அம்பலத்து ஆடுவார் என்று உரை
கூறுவர் ஆலால சுந்தரம் பிள்ளை அவர்கள். உம்பர் நாயகிக்கும்...
அறியோம் - இது கவிக்கூற்று. இங்கு இறைவன் திருமேனி தாங்கிவரும்
இயல்பினைப்பற்றி முன் ஆயுநுண் பொருளாகியும் என்றதற்கேற்ப ஒர்
ஆராய்ச்சி செய்கின்றார். இவர் திருமேனி தாங்கி வருவதில் ஒன்றற்கொன்று
மாறுபட்ட இவ்விரண்டியல்புகள் காணப் பெறுகின்றன; ஆயுநுண்
பொருளாவார் வெளியே யாடுவாருமாயினர்; ஓருருவு மில்லார் ஒரு வேடங்
கொண்டார். தூர்த்த வேடமுடைய பொன்மேனியில் தூய நீறும் விளங்கிற்று;
இவர்தாம் இவ்வாறு வருங்கால் தமது பங்குடைய உமையம்மையார் அறிய
வந்தனரோ? அன்றி அறியாமை வந்தனரோ? எனின் அறிய வருவாராயின்,
இவர் இங்குப் பிறர் மனைவியாரை வேண்டிச் செல்வதற்கு அவர்
உடன்பட்டிரார் அவர் அறியாது வந்தாரெனின் உடன் பிரியாது இருப்பா