பக்கம் எண் :


568 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

     460. (வி-ரை.) வழிவரும் இளைப்பு - வழி வருதலாலுள தாகிய
இளைப்பு - அயர்ச்சி. ஓடும் - உடனிகழ்ச்சிப் பொருளினில் வந்த
மூன்றனுருபு. வழிவருதலென்னும் புறத்து நிகழ்ச்சியாகிய அயர்ச்சியுடன்
உள்ளிருந்து வருத்திய பசியும் என்க. எனவே உள்ளும் புறமுமாக
இருவழியானும் அடியவர் வருந்தினார் என்று அவர்பாற் சென்ற அன்பு
காரணமாக நாயனார் கவலைகொண்ட அருமைப்பாடு குறித்தது.

     வருத்திய - வழிவரும் அயர்ச்சி சேர்தற்கு முன்னரே உண்ணின்று
வருத்தம் செய்த. ஐயன் - பெரியோன். “எழுந்தருள் பெரியோய்“ (463)
என்பதுங்காண்க.

     அன்பினிற் பொலிந்து சென்று - அன்பு நிறைதலால் மிகக்
கிளர்ச்சியுடன் விரைந்துபோய். இது நாயனார் பயிர்களைப் பறிப்பதற்குச்
சென்ற விரைவினையும், அது போழ்து அவரது மன நிலையையும் குறித்தது.
ஒவ்வோர் கணமும் அடியவர் பசியதிகரித்தலைப் பொறார்களாக
இவ்விருவரும் செய்த செயல்களின் தன்மை குறித்தபடியாம்.

     குழி நிரம்பாத புன்செய்க் குறும்பயிர் - புன்செய்ப் பயிர் -
கீரை முதலிய இலைக்கறிப் பயிர். இவை புன்செய் நிலத்தில்
பயிரிடப்பெறுவன. குழிநிரம்பாத - பயிர்கள் இடப்பெற்ற குழிகளின்
அளவுக்கு மேற்பட்ட உயரம் மேலே வளர்ந்து வராத. இங்குக் குறித்த
பயிர் பூசணி - சுரை முதலியன என்றுரைப்பாருமுண்டு. பூசணி - சுரை
முதலிய செடிகள் குழிகளளவுக்கு மேல் வராத பக்குவத்திலேயும்,
மற்றெந்தக் காலத்தும் கறியாகப் பயன்படுவன அல்லவாதலின் அவை
உரையன்றென்க.

     புன்செய் - வீட்டுக் கொல்லையாக நாயனார் பயன்படுத்திய புன்செய்
நிலம்.

     நாயனார் முளை வாரிவந்தது நெல் விளையும் நன்செய் நிலமென்றும்,
கறிக்காகும் குறும்பயிர் பறித்து வந்தது அவரது மனையை அடுத்துக்
கொல்லைப் பயிர் செய்துவந்த புன்செய் நிலமென்றும் அறியலாம். இப்போது
பரம குடியை அடுத்த இளையான் குடி என்னும் இவ்வூரில் வீட்டு
மனைகளின் அடுத்து இங்குக் குறித்த புன்செய் மேடு என்று வழங்கும்
ஒரு புன்செய் இடமும், அதனை அடுத்து இது குறித்த முளைவாரி
அமுதளித்த வயல்
என வழங்கும் நன்செய் நிலமும் இன்னுங்
காணப்பெறுகின்றன. இவ்விரண்டு நிலங்களினும் நாயனார் நென்முளையும்,
பயிரும் மேல் விளையாமல் வாரியும் பறித்ததும் விட்டபடியால் இன்றைக்கும்
ஒன்றும் விளையாமலிருந்து வருகின்றன என்பது அவ்வூரார் சொல்லத்
தெரியும் செய்தியாம். இவற்றை வேலியிட்டுப் பாதுகாத்து உலகிற்கு
அறிவிக்குமாறு கல்வெட்டு முதலிய, நினைவின் அடையாளங்கள் பொறித்துக்
காவல்செய்து போற்றுதல் சைவர்களின் முதற்கடமைகளில் ஒன்றாம்.

     தடவி - குழி நிரம்பாத குற்றளவுடைமையானும், நள்ளிருட்
காலமாதலானும் அக்குறும் பயிர்களைத் தடவிப் பறிக்க வேண்டியதாயிற்று
என்க. பாசப் பழிமுதல் பறிப்பார்போல நாயனார் பறித்தவை குறும்பயிர்
அன்று; அவை அவரது பாசத்தின் பழிமுதல் பறித்தலே போல நின்றன
என்றார். பாசப் பழிமுதல் - ஆணவமாகிய சகல மலத்திற்கும் வேராகி
நிற்கும் மூலமலம் என்பர். “யாக்கை தன்பரிசும் வினையிரண்டும் சாருமல
மூன்றுமற“ (154) என்ற கண்ணப்ப நாயனார் புராணமுங் காண்க.
பிற்காலத்துச் செல்லல் நீங்குதற்காக வித்தியிருந்த நெல் முளை
வாரியதனானே வித்துமேல் விளையாமல் செய்த செயல் ஆகாமிய
கர்மங்களைக் கிழித்தலும், குறும்பயிர் வேருடன் பறித்ததனானே பிராரத்த
வினைகளை அழித்தலும், மனையின் அலக்குக்களை அறுத்து மேலும் புவன
போகங்களை இல்லாமல் வீட்டியதனாலே சஞ்சித கர்மங்களை அழித்தலும்
குறிக்கப்பெற்றன என்று இங்கு விசேடங் காண்பாருமுண்டு. இவை
ஆணவமாதி மும்மலங்களின் அழிவு குறித்தன என்பாருமுண்டு.
இவையெல்லாம் தக்கார்வாய்க் கேட்டுணரத்தக்கன. முதல் - மூலவேர்.

     பறிப்பார்போல - இங்கு போல என்ற உவமவுருபு பயன்பற்றித்
தோன்றிச் சிறப்பு நிலைக்களமாயின உவமம் என்பர். உவமிக்கப்பட்ட
பொருளும் உவமையும்