பக்கம் எண் :


612 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

     491. (இ-ள்.) விரைசெய்...பெறுநாடு - வாசனையுடைய கொன்றை
மாலை தரித்த சடையினையுடைய சிவபெருமானது திருவடிகளைப் பூசித்துப்
பெருந்தவஞ் செய்து, பரசு பெற்ற காரணத்தால் பரசிராமன் எனப் பேர்பெற்ற
முனிவன் பெற்ற நாடு; திரைசெய்...மலைநாடு - அலைகளை யுடைய கடலிலே
படும் பெருவளங்களும், திருந்து நிலங்களின் செழித்த வளங்களும்,
மலைகளினுடைய இனிய வளங்களும் ஒரு சேரப் பெருகி மிகுகின்ற நாடாகிய
மலை நாடாகும்.

     (வி-ரை.) விரைசெய் - சுற்றிலும் வாசங் கமழும்படி செய்கின்ற நறும்
விரை செய் இதழி
என மாற்றிக் கூட்டுக. நறும் விரை - மிக்க மணம் -
நன்மணம், நறும் - அழகிய என்றுரைப்பாரும், பிரணவம் போன்றிருத்தலால்
மந்திரமணம் என்பாருமுண்டு. தொடை இதழி - தொடுத்ததுபோலச் சரமாகப்
பூக்குங் கொன்றை. இதழித்தொடை - என மாற்றி மாலையாகத் தொடுத்த
கொன்றை என்றுரைப்பினுமாம். இதழி வேணியார் - சிவபெருமான். வேணி
- சடை. கொன்றையும் வேணியும் சிவபெருமானுக்கே சிறப்பாயுரிய
அடையாளங்கள்.

     கழல்பரசிப் பரசுபெறும் மாதவ முனிவன் பரசிராமன் - பரசி -
துதித்து - முனிவனது பேர்க்காரணமும், சரிதமும், அவன் பெருமையுங்
குறித்தபடி. பரசு - மழுவாயுதம். பரசிராமன் - பரசும் இராமன் எனவும்,
பரசுபெற்ற இராமன் எனவும் இருவழியும் சரிதக்குறிப்புப் பெற நின்ற
இப்பெயரின் அழகிய ஆட்சியைக் காண்க. தசரதராமனி னின்றும் வேறு
பிரித்துணர இம்முனிவனைப் பரசி ராமன் என அடைகொடுத்தே வழங்குவர்.

     இவன் பரசுபெற்ற சரிதம் புராணங்களுட் கேட்கப்பெறும். இம்முனிவன்,
தனது தந்தையாகிய சமதக்கினி முனிவனைக் கார்த்தவீரியன் கொன்றதற்காகப்
பழிவாங்கும் பொருட்டு அவனையும் அவன் மரபினரையும் கொல்வேன்
என்று சூள்கொண்டு, சிவபிரானைக் குறித்து மாதவஞ் செய்தான்;
சிவனருளினாலே பரசாயுதம் பெற்றான்; அதன் துணையாலே, தான்
எண்ணியபடியே கொன்று பழி வாங்கிய மன்னர்களின் இரத்தத்தைக்
கொண்டு பிதிர்தருப்பணஞ் செய்து தன் மூதாதைகளை மகிழ்வித்தான்
என்பது. இதன் விரிவு காஞ்சிப் புராணம் பரசிரா மீசப்படலம் மதலியவற்றிற்
காண்க.

     பெறு நாடு - இம்முனிவன் வருணனிடமிருந்து பெற்ற நாடு மலை
நாடு. இதுவும் ஒரு சரிதங்குறித்தது. புராணங்களுட் காண்க. முன்கண்டவாறு
பலரையுங் கொன்றதனால் முனிவனைப் பழிசூழ்ந்தது. அது நீங்குமாறு
முனிவன் ஒரு நாடு கண்டு அதனை வேதியர்க்குத் தர எண்ணி மழுவைத்
தென்றிசைக் கடலில் வீசினான். வீசவே வருணன் விலக இந்நாடு உண்டாக,
அதனையே மறையவர்க்குத் தந்தனன் என்பது வரலாறு. முனிவன்,
அரசர்களைக் கொன்று தானே நாடாண்டிருந்து அந்நாடுகளைத்
தானம்செய்து, பின் இந்நாடு கண்டு, அதனில் ஆட்சி புரிந்து
வேதியர்க்கீந்தனன் என்பதும் வரலாறு.

     இவ்வரலாறுகளைப் புராண கதை என்று இலேசாகக் கூறி
ஒதுக்குவாருமுண்டு. இராமாயணமும் பரசிராமனது சரிதமும் பெருமையும்
கூறும். “ஊழிக் கடை முடிவிற்றனி யுமைகேள்வனை யொப்ப“ என்பது
முதலாகப் பலவாற்றானும் இராமாயணத்தில் பாராட்டப்பெற்றது காண்க.
இம்மலைநாடு இன்றைக்கும் பரசிராம க்ஷேத்திரம் என வழங்கி வருவதும்,
அது (மழைவளம்), நீர்வளம், நில வளம், குடிவளம், மக்கள் ஒழுக்கம் முதலிய
பலவாற்றானுஞ், சூழ உள்ள ஏனை நாடுகளினின்று வேறாகத் தனித்தன்மை
பெற்று விளங்குவதும், அதனில் வேதியரும், அவரது வைதிக ஒழுக்கமும்
நின்று நிலவித் தேற்றமாக விளங்குவதும், பிறவும் ஊன்றிக் காண்போர்
இச்சரித உண்மைக்கு ஆதரவு காண்பர். பரசுபெறு மாதவ முனிவன்
பரசிராமன் பெறு நாடு
வேணியார் கழல் பரசிப் பரசு பெற்றான்