பக்கம் எண் :


638 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
     வரும்பயன் - இவ்வுலகில் வருதலாலுளதாகிய உறுதிப்பயன். பயனை
வளத்தினாற் கொள்வார் என்க,

     கொள்வார் - கொள்வாராகி - அடைவாராகி; முற்றெச்சம்.
கொள்வார் - அமுது செய்வித்து - வணங்கிச் - சமைத்தார்எனக் கூட்டி
முடிக்க. 3

     505. (வி-ரை.) முக்கண் நக்கரசம் முதல்வனார் - முக்கண் -
சோமன் - சூரியன் - அக்கினி என்பன இறைவனது முக்கண் எனப்
பெறுவன. நக்கர் - கோவணமுமின்றியுள்ள நீருவாணமான திருவுருவம்.
முதல்வனார் - யாவர்க்கும் தலைவராகிய சிவபெருமான். மூன்று கண்ணும்
நக்கராய உருவமும் அவரது முதன்மைத தன்மை குறிப்பன. என்னை?
முக்கண்கள் முழு ஒளி யுருவத்தையும், நக்கவுருவம் பிறவெல்லாம்
மேற்கொண்ட உடைமாத்திரையா யொழியத், தாம் ஒருவரே எஞ்சி நிற்கும்
நிலையையும் குறிக்கும். இவரது அற்றத்தை மறைக்கும் கோவணம்
வேதமாதலின, அஃதில்லாத நக்க வுருவம் வேதத்தினுள் விளங்குவதும்,
வேதங்கடந்ததும் ஆகிய நாதாந்தமாகிய சொரூபம் என்ப. நக்கராம் அவர்
- நக்கனாராகிய அவர். சுட்டுப் பெயர் உயர்வு குறித்து வந்தது.
“சிவனவனென் சிந்தையுள்“ என்புழிப் போல.

     அவர் திருநல்லூர்
- அவர் விரும்பி வெளிப்பட வீற்றிருக்கும்
திருநல்லூர். “தேற்றப் படத்தரு நல்லூ ரகத்தே சிவனிருந்தான்“, “வடபாற்,
கயிலையந் தென்பா னல்லூருந்தம் வாழ்பதியே“ என்ற திருவிருத்தங்கள்
காண்க. நல்லூரின் முதல்வனாரது திருவிழா என்று கூட்டுக.

     திருவிழா விருப்புடன் வணங்குதலும், அன்ப ரமுதுசெய் திருமடஞ்
சமைத்து அவர்களை அமுது செய்வித்தலும் என்னுமிரண்டுமே தாம்
வருபயனாம் என்று கொண்டனர் அமர்நீதியார். “மண்ணி னிற்பிறந்
தார்பெறும் பயன்மதிசூடும், அண்ண லாரடியார்தமை யமுதுசெய் வித்தல்,
கண்ணி னாலவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல், உண்மையாம்“ என்ற
திருஞானசம்பந்த மூர்த்திகள் புராணமும், அவரது திருமயிலைத் தேவாரமும்
காண்க. இதுபற்றியே இங்கு நாயனார் திருவிழா வணங்கியதும்,
திருமடஞ்சமைத்ததும், அமுதளித்தலும் ஆயின. 506-பார்க்க.

     மிக்க சீர்வளம் திருவிழா - திருவிழா மிகுந்த சிறப்புக்களுடன்
கூடியிருந்தது என்பதாம். அவை பலவற்றையும் “முத்துவிதானம்“ என்ற
(குறிஞ்சிப்பண்) திருவாரூர்ப் பதிகத்தில் அப்பர்பெருமான் எடுத்தருளி
யிருப்பது காண்க. சீர்களின் மிக்கதாகிய வீடுபேற்றினுக்கும் காரணமாகி
மக்கட்கு உறுதி தரும் திருவிழா. சீரினை வளர்க்கும் விழா என
உரைப்பினுமமையும்.

     அன்பர்கள் அமுதுசெய் தக்க திருமடம் என மாற்றிக் கூட்டுக.
அன்பர்களிலே, தக்கார், தகவிலர் என்ற பாகுபாடின்மையால் தக்க
என்பதனை அன்பர்களுக்கு அடைமொழியாக்கி உரைப்பது பொருந்தாதென்க.
தக்க அன்பினை உடையார் - இறைவனை அடைவிக்கத்தக்க அன்பு
எனக்கொண்டு இயற்கைகுறித்த அடைமொழியாக உரைப்பாருமுண்டு.
திருமடத்திற்குத் தகுதியாவது இடத்தாலும், பிறவசதிகளாலும், வரும்
அன்பர்க்குத் தக்கவாறு அமைதல். 513 பார்க்க. திருமடம் - இறைவன்
எழுந்தருளுமிடம். திருக்கோயில் எனப் பெறுவதுபோலவே, அவனது
அடியார்கள் எழுந்தருளுமிடமும் திருமடம் என்று கூறப்பெறும். “திங்களு
ஞாயிறுந் தோயுந் திருமட மாங்கொன்று செய்தார்“ (திருநாவு - புரா - 389),
“அமைச்சனார் திருமடங் காடட“ (676), “செங்கமலத் திருமடமற் றிது“ -
(877) - திருஞானசம்பந்தமூர்த்திகள் புராணம் - முதலிய ஆட்சிகள் காண்க.

     தொக்க சுற்றமும் தாமும் - தொக்க - தம்மைச் சுற்றிக் கூடிய.
சுற்றியிருப்பது சுற்றம். மனைவி மக்கள் முதலியோர். “சுற்றத்தாற் சுற்றப்
படவொழுகல் செல்வந்தான், பெற்றத்தாற் பெற்ற பயன்“ - குறள். சுற்றமுந்
தாமும் வந்து அணைந்தார் ஏன்