பக்கம் எண் :


அமர்நீதி நாயனார் புராணம்641

Periya Puranam
     மணிகண்டர் - மணி நீலமணி. அதன் நிறத்திற்காயிற்று. மணி நிறம்
போன்ற நிறமுடைய கழுத்தினை யுடையவர். “நீலமா மணிகண்டத்
தொண்டோளானே“ - தேவாரம். மணி யென்ற பொதுப்பெயர் இடநோக்கி
இங்கு நீலமணி குறித்தது. மணி - அழகு என்றலுமாம்.

     நல்லூர் மணிகண்டர் திருவிழா என மாற்றுக. அணி - சிறப்புக்கள்.
மிக்க சீர்வளம்
(505) என்ற இடத்துக் காண்க. விழாவின் சிறப்புக்களை
எண்ணி எண்ணி இன்புற்றுச் சேவித்தல் திருவிழா அணி சேவித்து எனப்
பெற்றது. விழாவையும் அதன் அணியையும் என்றும்மைத் தொகை யாக்கி
யுரைப்பினுமையும்.

     அருள்பேணி - “அவனருளாலே அவன்றாள் வணங்கி“ என்றபடி
சிவபெருமானை வணங்குதற்கு அவனருள் வேண்டப்பெறுதல்போலவே,
அவனது அடியார் இன்பமோடமுது செய்திடுதற்கும் அவனருள் வேண்டப்
பெறும். ஆதலின் ‘அருளைப் பேணி' என்றார். பேணி - பாராட்டி -
வந்தித்து.

     உருகு சிந்தையின் - அடியார்க் கமுது செய்விக்கும்படி திருவருள்
கூட்டி வைத்தலின், அவ்வாறு தம்பால் இறைவன் கருணை கூர்ந்ததை
எண்ணி எண்ணி மனமுருகினார் என்க. “அத்தா வுன்னடியேனை யன்பா
லார்த்தாய்“, “எத்தனையும் அரியநீ யெளியை யானாய், “எனையாண்டு
கொண்டிரங்கி யேன்று கொண்டாய்“, “இத்தனையு மெம்பரமோ ஐய வையோ!
எம்பெருமான் றிருக்கருணை யிருந்தவாறே“ என்று பலவாறும் எண்ணி
யெண்ணி உருகி நிற்றல்.

     மகிழ்ந்து - அருள் பேணி மனமுருகுதலால் உளதாம் உள்ள நிகழ்ச்சி.
உறைநாளில் - இத்திருப்பணிகள் செய்து வாழ்ந்து வருகின்ற நாள்களிலே.
ஒரு - இறைவனடி கூட்டப் பெறுதலால் ஒப்பற்ற என்பதும் குறிப்பு.

     அடியவர் கேளாமலே அவரவர் குறிப்பறிந்து, உடை, உணவு உறையுள்
என்ற மூன்றும் அளித்து அவர்கள் இன்பமடையப் பார்த்துத் தாம் இன்புற்று
மகிழ்ந்திருந்தனர். இவற்றிற்காகவே திருமடமுஞ் சமைத்துத் தாமும்
திருநல்லுரில் வந்தணைந்தனர் என்க. 5

     507. (வி-ரை.) பிறைத் தளிர்ச் சடை - பிறையைத் தளிர்போலச்
சூடிய, சடை. இலையாக மேலும் வளர நிற்பது தளிராதலின், சடையைச்
சார்ந்ததனால் முழுமதியாக வளரநின்ற பிறையைத் தளிர் என்றார். பிறையும்
ஆத்தியின் றளிரும் சூடிய என்று உம்மைத் தொகையாக்கி
உரைப்பாருமுண்டு. “பிறை மல்கு செஞ்சடை“ என்ற இத்தலத் தேவாரக்
குறிப்பும் காண்க.

     பெருந்தகை - பெரியதனுளெல்லாம் பெரிதான தகைமையுடைய.
இறைவனது பெருந்தகைமை யாவது உயிர்கள் எத்தனை பிழை செய்யினும்
வெறுத்துத் தள்ளாது பொறுத்து அவைகளிடத்து மேலும் கருணை
செய்துகொண்டே யிருத்தல். “வெறுப்பனவே செய்யுமென் சிறுமையைநின்
பெருமையினாற் பொறுப்பவனே“, “பிழைத்தவை பொறுக்கை யெல்லாம்
பெரியவர் கடமை போற்றி“, முதலிய திருவாசகங்களும், “மண்ணுலகில்
வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையிற், கண்ணுதலான் பெருங்கணை
கைக்கொள்ளும்“ என்ற புராணமும் காண்க. “பேதையா ளவளொடும்
பெருந்தகை யிருந்ததே“ - திருஞான - தோணி - கொல்லி - 2.
“பெருந்தகை
யைப் பெறற்கரிய மாணிக்கத்தை“ - திருச்செங்காட்டங்குடி
- திருத்தாண்டகம் - 1.

     பெருந் திருநல்லூர் - அவனும் பெருந்தகை; அவனது ஊரும்
பெரியது; திருவும் நலமும் தருவது என்பது குறிப்பு.

     கறைத் களத்திறை - மணிகண்டர் - (506) என முன்னர்க் கூறியது
காண்க. “நஞ்சணி கண்ட னல்லூருறை நம்பனை“ என்பது இத்தலத்
தேவாரம். திருநீல கண்டம் அவரது பெருந்தகைமையும் கருணையும் காட்டி
நிற்கும் அடையாளமாம்.