பக்கம் எண் :


96 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
     செங்கயற் பழனம - செங்கயல் மீன்களையுடைய வயல்கள்.

     திருமகள் உறையுள் - இலக்குமி வாழும் இடம் - இருப்பிடம். மங்கல
வினைகள் நிகழும் இடங்கள் யாவும் அந்த வினைகளின் சிறப்புக்களால்
இலக்குமி தேவியே வசிக்கும் இடங்களாகத் தோன்றின என்பது. திருமகள்
உறையுள்
- தாமரை என்றுரைப்பினும் அமையும்.

     முதலில் மங்கல வினைகள் எனப் பொதுப்படக் கூறிப் பின்னர்
அவற்றில் நிகழும் கம்பலைகளும், அவற்றில் வினைசெய் பெண்களும், அவர்
மழலையும், அவர் அணிகளும், அவ்விடங்களின் அழகும் தொடர்ந்து
கூறினாராயிற்று. 30

81. மேகமுங் களிறு மெங்கும் வேதமுங் கிடையு
                                மெங்கும்
 
  யாகமுஞ் சடங்கு மெங்கு மின்பமு மகிழ்வு
                                மெங்கும்
யோகமுந் தவமு மெங்கு மூசலு மறுகு மெங்கும்
போகமும் பொலிவு மெங்கும் புண்ணிய முனிவ
                                ரெங்கும்.
31

     (இ-ள்.) வெளிப்படை.

     (வி-ரை.) மேகமும் களிறும் - முகில்களும் யானைகளும் ஒருங்கே
விரவிக் காணப்பெறுகின்றன. முகிலோ - யானையோ என நிறத்தினாலும்
அளவினாலும் முழக்கினாலும் பிரித்துணரப்படாமல் ஐயமுறும்படி பொருந்தின.
இவை யிரண்டின் ஓசையும் மங்கல ஓசைகளாம். “காரெதிர் தானமாக்கள்
முழக்கமும்” என முன்னரும் கூறினமை காண்க. (திருமலை-4)

     வேதமும் கிடையும் - வேத மோதுதலும், அவைகளைப் பயிலும்
மாணவர் குழாமும். “ஓது கிடைசூழ் சிறுவர்களும் உதவும் பெருமை
யாசானும்” (சண்டேசர் புரா-3) “ஓது கிடையி னுடன் போவார்” (சண்டேசர்
புரா - 17) கிடை - வேதம் பயிலும் மாணாக்கர் கூட்டம். மறுகு -
தெருக்கள்; வீதிகள்.

     மேகவோசை - யானை ஓசை - வேத ஓசை - இம் மூன்று விரவி
முழங்குவன என இவற்றை ஓரடியில் வைத்துக் கூறினார்.

     “ஆரணங்களே யல்ல மறுகிடை, வாரணங்களும் மாறி முழங்குமால்”
- திருநகர் - 10 எனப் பின்னர்க் கூறுவதும் காண்க. யானைப் பந்திகள்
நாட்டிலே நகரங்களின் புறத்து அமைவன. அந்நகர்ப்புறங்களிலேயே வேதம்
ஓது கிடையும் யூப வேள்விப் பொதுச்சாலைகளும் அமைவன. வேள்வியினால்
மேகங்கள் உண்டாவன - ஆதலின், களிறும் - யாகமும் - மேகமும் -
ஓரிடத்து நிகழ் பொருள்களாகிய இப்பாட்டில் ஒருங்கே கூறப்பட்டன.
“வேள்வி நற்பயன் வீழ்புனலாவது” என்ற பிரமாணமும் காண்க.

     யாகமும் சடங்கும் - யாகங்களும், அவற்றின் முன்னும் பின்னும்
செய்யும் சடங்குகளும், சண்டீச நாயனார் புராணத்தில் “கோதின் மான்றோற்
புரிமுந்நூல்” (3) என்ற பாட்டில் வேதமும் கிடையும் கூறிய ஆசிரியர்
அதனோடு சார வைத்து அடுத்த “யாக நிலவு” (4) எனும் பாட்டில் “யாகமும்
களிறும” கூறினமையும் இங்குச் சிந்திக்கற்பாலது. இந்த யாகங்கள்
சிவபெருமானைக் குறித்துச் செய்யப் பெறுவன.

     இன்பமும் மகிழ்வும் - “இருமைக்கும் இன்பம் அளிக்”
கின்றவையாய்த், “தீது நீங்கச் செய்யப்” பெறுவனவாய் உள்ள யாகங்களைச்
செய்ததனாலே உளதாகும் அனுபவமாகிய இன்பமும், மகிழ்வைத்தரும்
செயல்களும் என்க. யாகங்களினியல்பு திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம்
280-429 திருப்பாட்டுக்களிற் காண்க. இன்பம் - மனம் முதலியவற்றால்
நிகழும் உயிர் அறிவு. அகப்பொருளின்பம். மகிழ்வு அதனாற் புறத்தே
நிகழ்வது.