பக்கம் எண் :


ஆனாயநாயனார்புராணம்1203

 

     வினைப்பால் - என்பதற்குச் செயலின் பொதுமை என்றும், மெய் -
உடம்பு - காயம் - என்றும் கொண்டு, வாய், மெய், மனம் என்ற மூன்றின்
செயலால் எனத் தனித்தனி கூட்டி உரைத்தலுமாம். "மானிடப் பிறவி தானும்
வகுத்தது மனவாக்காயத், தானிடத் தைந்து மாடு மரன்பணிக் காக வன்றோ"
(சித்தியார் - 2 - 92) பார்க்க.

     பேயுடன் ஆடும் பிரான் சிவபெருமான். பேய் - சிவ கணமாகிய
சுத்த தத்துவ உடம்புடைய நற்கணம். சிவபூதங்கள். பௌதிகமாகிய வாயு
சரீரமுடைய பைசாசங்களல்ல "பேயாய நற்கணத்தி லொன்றாய நாம்" (அற்புத
- அந் - 86) என்ற அம்மையார் திருப்பாட்டும் "பாரிடம் பாணி செய்யப்
பறை கட்சிறு பல் கணப் பேய், சீரொடும் பாட லாட லிலயஞ்சிதை யாத
கொள்கை" (பஞ்சமம் - திருவொற்றியூர் 2) என்ற ஆளுடைய பிள்ளையார்
தேவாரம் முதலியவை பார்க்க. பேயோடாடி என்பது நிகண்டில்
சிவபெருமானது பெயர்களிலொன்றாக ஓதப்படுதலும் காண்க. பேயோடாடுதல்
அவரது நித்தியத்துவம் பரத்துவம் முதலிய தன்மைகள் குறிக்கும்.

     அடி அல்லது பேணாதார் - எதிர்மறையாற் கூறினார் நியதி
பிழையாமையும் உறுதிப்பாடும் குறித்தற்கு. 875ல் உரைத்தவை பார்க்க.

     இப்பாட்டால் ஆனாயரது உயிரின் நிலையாகிய அகவாழ்வாகிய
சிவச்சார்பு கூறப்பட்டது. வரும்பாட்டில் உடல்பற்றிய புறவாழ்வாகிய
உலகநிலை கூறுவார். உயிர்பற்றிய அகவாழ்க்கையின் சிறப்பு நோக்கி
அதனை முன்வைத்தோதினார். 9

935.



ஆனிரை கூட வகன்புற விற்கொடு சென்றேறிக்
கானுறை தீய விலங்குறு நோய்கள் கடிந்தெங்குந்
தூநறு மென்பு லருந்தி விரும்பிய தூநீருண்
டூனமி லாய முலப்பில பல்க வளித்துள்ளார்.



10

     (இ-ள்.) வெளிப்படை. (அவர்) பசுக்கூட்டங்களை, அகன்ற
முல்லைநிலக்காட்டிற்கு ஒருங்கு சேரக் கொண்டுபோய்க் காட்டில் உள்ள
கொடிய விலங்குகளாலும் பொருந்தும் நோய்களாலும் வரும் துன்பங்களை
நீக்கிக் காத்து, எங்கும் தூய நறிய மெல்லிய புல்லை அருந்தி விரும்பும்
தூயநீரினை உண்டு, குற்றமில்லாதபடி பசுக்கூட்டங்கள் அளவில்லாது
பெருகும்படிக் காப்பாற்றினார்.

     (வி-ரை.) கூடக் - கொண்டு, சென்று, - ஏறிக், - கடிந்து, - ஆயம் -
அருந்தி - உண்டு - பல்க, - அளித்துள்ளார் எனக் கூட்டி முடித்துக்கொள்க.

     கூடக்கொடு சென்று ஏறி என்பது ஆனிரைகளைச் சேர்த்துத்
தம்முடனே கூடக் கொண்டு செல்லுதல் குறித்தது.

     கடிந்து - அளித்து உள்ளார் என்பது தீமை நீக்கிக் காத்தலும்
நன்மை பெறும்படி காத்தலும் குறித்தது. பசுபதியாகிய சிவபெருமான்
பசுக்கூட்டங்களாகிய உயிர்களைக் காக்கும் பாசநீக்கமும் சிவப்பேறுமாகிய
இரண்டும் இங்கு உட்குறிப்பிற் பெறப்படுவதும் காண்க. "திறங்கொண்ட
வடியார்மேற் றீவினைநோய் வாராமே" என்ற ஆளுடைய பிள்ளையார்
தேவாரமும் பிறவும் காண்க.

     அகன் புறவு - அகன்ற காடு. மருத நிலத்தினை அடுத்துப் புறத்தே
உள்ள முல்லைப் பகுதி புறவு எனப்படும். "மண்ணிக் கரையின்
வளர்புறவின் மாடும்" (சண்டீசர் - புரா - 27), "அருகுவளர் புறவில்"
(மேற்படி 33), "அங்கட் கடுக்கைக்கு முல்லைப் புறவம்" (திருவொற்றியூர்த்
திருவிருத்தம் - 10) முதலியவை காண்க.

     கொடு, சென்று, ஏறி - கொடு என்றது பசுக்கள் இருக்கும்
வீடுகளிலிருந்து அழைத்துக் கூட்டிக்கொள்ளுதலும், சென்று என்றது
அங்கு நின்றும் புறவுக்குக் கூட்டிப்போதலும், ஏறி என்றது புறவுக்குள்
ஏற்ற இடங்களிற் புகுதலும் ஆகிய செயல்கள். இவற்றை ஏற்ற ஒவ்வோர்
சொல்லாற் கூறும் அமைதி காண்க.

     தீய விலங்கு - பசுக்களுக்கு ஊறு செய்யும் புலி, சிறுத்தை, நரி
முதலியவை.