பக்கம் எண் :


1348 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

      2. துன்பக் கடலினுட்பட்ட தொண்டரை எடுத்து இன்பக்கரைக்கண்
ஏற்றுவதனால் சிவபெருமானுக்கு உருத்திரன் என்னும் திருநாமம் எய்திற்று,
அப்பெருமான் தந்த திருக்குமாரர்களுக்கும், அவனடி யடைந்தோர்க்கும்,
அவனுடைய கணங்கட்கும், அவனுருவந் தாங்கினோர்க்கும் அவன் சார்பு
பற்றி உருத்திரப் பெயர் வழங்கும்.

     3. முழுமுதற்கடவுளாகிய அவ்வுருத்திர மூர்த்தியின் எல்லா
வடிவங்களும் கோரவடிவம், சாந்தவடிவம் என்னும் இரண்டனுள் அடங்கும்.
அவற்றுள் கோரவடிவம் பிறவிப் பெரும் பிணிக்கு மருந்தாக உள்ளது.
சாந்தவடிவம் சிவத்துவ விளக்கந் தருவது. முன்னது திருவுருத்திர நமக
மந்திரங்களால் துதிக்கப்படுவது. பின்னது சமக மந்திரங்களால்
துதிக்கப்படுவது.

     4. வேதம் மூன்றனுள் நடுவிலுள்ள யசுர் வேதத்தின் ஏழு
காண்டங்களுள் நடுக்காண்டத்துள்ளது திருவுருத்திரம். இது பதினோரு
அநுவாகங்களாகிய உட்பிரிவுகளை யுடைமையால் உருத்திரை காதசநீ
என்றும் பெயர்பெறும். இப் பதினொரு அநுவாகங்களிலும், இருக்கும்
யசுசும் ஆகிய மந்திரங்கள் கூறப்படும். அவற்றுள் 1 - வது அநுவாகத்தில்
15 இருக்கும், 2 முதல் 9 வரை அநுவாகங்களில் முறையே, 13, 17, 17,
15, 15, 16, 17, 19 யசுசும், 10 - வது அநுவாகத்தில் 12 இருக்கும், 11 - வது
அநுவாகத்தில் 10 இருக்கும் 3 யசுசும் ஆக இருக்கு 37 - ம், யசுசு
132 - ம் ஆக மந்திரங்கள் 169 கூறுப்பட்டுள்ளன. இம்மந்திரங்களை
நியமமாக ஓதும் முறை, தியானம், பயன் முதலிய எல்லாம் உருத்திர
கற்பத்துள்ளும், ஏனைய கற்ப சூத்திரங்களிலும் விரிவாகக் காணலாம்.
இவ்வுருத்திரப் பிரசினத்தின் பாடியம் இரண்டனுள் பட்டபாஸ்கரர்
பாடியத்தும் அவை கூறப்படுதல் காணலாம்.

     5. பிரளயாகலராகிய ஆன்மாக்களுள் மலபரிபாக மெய்திச்,
சிவபெருமானால் நிரதிகரணமாகத் தீக்கை செய்யப்பெற்று, முத்தராகிப்,
பல்லாயிரங்கணங்களுடன் கூடிய நூற்றுப் பதினெட்டு உருத்திரருள்,
நிவிர்த்திகலையின் பிருதிவிதத்துவ அண்டங்கள் ஆயிரகோடியினு மமைந்த
நூற்றெட்டுப் புவனங்களுள், புறத்தே கிழக்கு முதலிய பத்துத் திசையினும்
ஒவ்வொரு திசைக்கும் பதின்மராக வைகும் புவன பதிகளாகிய உருத்திரர்
நூற்றுவர்க்கும் அவர் கணங்கட்கும் வணக்கங்கூறி, இவர் அனைவரையும்
பரிசனங்களாகவுடைய முழுமுதலாய்ச் சாந்தியதீத கலாபுவனாந்தம் முழுதும்
யாவையும் இறுதி
யுறச் சங்கரிக்கும் மகாருத் திரனாகிய சிவபிரானுக்கு
வணக்கங்கூறிப், பிறவிப் பெரும்பிணித் துன்பவெள்ளக் கடனீந்துங்
கருத்தே மிக்குச்
சாந்தி வேண்டிக்கோடலின் அருமறைப் பயனாகிய
திருவுருத்திரம் சதருத்திரீயம் எனவும் பெயர்பெறும். இங்குக்கூறிய
உருத்திரர் பெயர் முதலியனவும் பிறவும் ஸ்ரீ பவுட்கராகம விருத்தியில்
பசுபடலத்தின் அத்துவப் பிரகரணத்திற் காண்க. "தைத்திரீய சாகையின்
உருத்திரப் பிரசின முடிவிலே அவ்வத்திக்கி னிருப்போராகிய
இவ்வுருத்திரர்கள் பப்பத்து எண்ணிக்கையோடும் நமஸ்காரத்தோடும்
சுருக்கமாநக் குறிக்கப்பட்டனர்" என அப்பிரகரண முடிவில் கூறியதும்
இங்கே சிந்திக்கற்பாலது.

     6. வேதம் நான்கினும் மெய்ப்பொருளாகிய திருவைந்தெழுத்து
இந்திருவுருத்திரத்துள் இருத்தலின், இதனை வேத புருடனுக்குக்
கண்ணாகவும், திருவைந்தெழுத்தைக் கண்மணியாகவும் பெரியோர் கூறுப.
நிற்பனவும் நடப்பனவுமாகிய உலகப்பொருள் அனைத்தினும் இறைவன்
பகுப்பின்றி அவையேயாய்க் கலந்துநிற்றல் பற்றி, இறைவனை
விசுவரூபனாகவும் விசுவேசனாகவும் புகழ்ந்து வணக்கங் கூறும்
இத்திருவுருத்திரம்.1


     1இவை ஸ்ரீமத் முத்துக்குமாரத் தம்பிரான்சுவாமிகள் அன்புடன்
எழுதிய குறிப்புக்கள்.