பக்கம் எண் :


1368 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     குழல் நெல்கதிர் மிலைச்சிய - புலைமகளிர் பசிய நெற்கதிர்களைக்
குழலில் அணி பெறச் சூடிக்கொள்வர். குவளைப்பூ என்றும்,
நெற்பைங்கதிர்
என்றும் கூட்டுக. களிதூங்க கறங்கு பறையும் கலிக்கும்
-
புலைமகளிர் களியாட்டயர, அந்த ஆடலுக்குத் தக்கபடி பறைகள்
ஒலிக்கும் என்க. 10

1051.



இப்படித்தா கியகடைஞ ரிருப்பின்வரைப் பினின்வாழ்வார்;
மெய்ப்பரிவு சிவன்கழற்கே விளைத்தவுணர் வொடும்வந்தார்;
அப்பதியி லூர்ப்புலைமை யான்றதொழிற் றாயத்தார்;
ஒப்பிலவர் நந்தனா ரெனவொருவ ருளரானார்.          11

     (இ-ள்.) மெய்ப்பரிவு....வந்தார் - உண்மையன்பினைச் சிவபெருமான்
திருவடிக்கே விளைவித்ததனாலுளதாகிய முன் உணர்ச்சியொடும் இவ்வுலகில்
வந்தவதரித்தாராய்; நந்தனார் என ஒருவர் - நந்தனார் என்ற பெயருடைய
ஒருவர்; இப்படித்தாகிய....வாழ்வார் - இவ்வாறாக உள்ள புலையர் சேரியில்
வாழ்வாராயினர்; அப்பதியில்...தாயத்தார் - அவ்வூரில் ஊர்ப்புலைமையால்
அமைந்த தொழில் தாய உரிமையுடையவர்; ஒப்பிலவர் - தமக்கு
வேறெவருமிணையில்லாதவர்; உளரானார் - உள்ளவராயினார்.

     (வி-ரை.) இப்படித்து - மேலே கூறியபடியாகிய இந்தத்
தன்மையுடையது. கடைஞர் இருப்பு - புலையர்களின் குடியிருப்பு.
வரைப்பு
- வட்டம்; வளாகம்.

     வந்தாராய் - வாழ்வார் - தாயத்தார் - நந்தனார் என ஒருவர் -
உளர் - என்க.

     மெய்ப்பரிவு...வந்தார் - மெய்ப்பரிவு - உண்மையன்பு.
"உள்ளத்திற் றெளிகின்ற வன்பின் மெய்ம்மையுரு" (திருஞான - புரா - 1023)
என்றது காண்க. அன்பின் உண்மையாவது அதனின்றும் பிரிந்து
வேறொன்றின்பாலும் செல்லாமை.

     கழற்கே விளைத்த - அன்பினைக் கழலினிடத்தே செலுத்தி
விளைவித்ததன் பயனாகப்பெற்ற. ஏகாரம் - பிரிநிலை. "மறந்துமய
னினைவின்றி" (1052) என்பது காண்க.

     உணர்வொடும் வந்தார் - முன் உணர்ச்சியுடனே வருதல் என்ன
தன்மையால் விளங்குவதாயிற்று என்பதனை மேல்வரும் பாட்டில்
உரைக்கின்றார்.

     விளைத்த உணர்வொடும் வந்தார்- "ஒருமைக்கட் டான்கற்ற
கல்வி யொருவற், கெழுமையு மேமாப் புடைத்து" என்றும், "என்னொருவன்
சாந்துணையுங் கல்லாதவாறு" என்றும் (குறள்) கூறியவாறு, ஒரு பிறவியிற்
கற்ற கல்வி, ஒருவனுக்குப், பின்னர்ப் பல பிறவிகளிலும் உடன்வந்து
பயன்படும் என்பதறியப்படும். அதுபோலவே ஓருயிர்செய்த புண்ணிய
பாவங்களும் அவ்வுயிருடன் பின் பிறவிகளிற் கூடவே வந்து அதனால்
அனுபவிக்கப்படும் என்பதும் உண்மை. உயிர் பற்பல பிறவிகளிலும்
வெவ்வேறு உடம்பு எடுத்துவரும். ஆயின், அது தனது முன்னைக்
கல்வியையும், ஞானத்தையும், புண்ணிய பாவங்களையும், விடாது உடன்
கொண்டே வரும். இதுபற்றியே, ஒருகுலத்தில் ஒரு குடியில் ஒருவன்
அதனுள்வேறு எவருக்குமில்லாத ஞானத்துடன் மேம்படுதலும், அல்லது
அவ்வாறே வேறுவகையால் மாறுபாடாயிருத்தலும் காண்கின்றோம். இவ்வாறு
வரும் விளைத்தவுணர்வின் றிறத்தைச் "சந்தமறைக ளுட்படமுன் றலைவர்
மொழிந்த வாகமங்கண், முந்தை யறிவின் றொடர்ச்சியினால் முகைத்த
மலரின் வாசம்போற், சிந்தை மலர வுடன்மலருஞ் செவ்வி யுணர்வு"
(சண்டீசர் - புரா - 13), "ஈசர்கழல் முறைபுரிந்த முன்னுணர்வு மூள"
(திருஞான - புரா - 61) என்ற இடங்களிற் காண்க. "முன்புசெய் தவத்தி
னீட்டம்" (751) என்றதும், அங்குரைத்தனவும் பார்க்க. வந்தார் -
இவ்வுலகிற் பிறந்தருளினார்.