பக்கம் எண் :


1388 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     தென்திசை மதிற்புறத்து - திருவாயின் முன் - நெருப்பமைத்த
குழி
- ஓமகுளம் என்ற பெயருடன் ஒரு திருக்குளமாக இன்றும் வழங்கி
வருகின்ற குளம் இக்குழியிருந்த இடமென்பர். 1அவ்வளவில் தென்புறம்
திருமதிலும் அதன் திருவாயிலும் முன் காலத்திருந்தது போலும்.

     பிறை உரிஞ்சும் திருவாயில் - திருவாயிலின் உயர்ச்சி குறித்தது.

     நிறை அருளால் - நிறை - நந்தனார் பாலும் மறையவர் பாலும்
நிறைந்த. இனி இத்திருவருள் கேட்டு உய்யும் எண்ணிறந்த உயிர்களின்
மேலும் எக்காலத்தும் நிறைவதாதலின் நிறை என்று முக்காலத்துக்கும்
பொதுவாகிய வினைத்தொகையாற் கூறினார்.

     இறையவர்தாள் மனங்கொண்டே- இது நந்தனார் தீயினை
வலங்கொண்டபோது மனத்துட்கொண்டது. மேல் வரும்பாட்டில் கழல்
உன்னி என்றது தீயினுட்புகும்போது மனத்துட்கொண்ட நிலை.

     கழல் நினைந்து வலம் வருதலும் தீயினுட்புகுதலும் என்னை?
எனின், அருளின் வயப்பட்டு அதனுள் தம்மையே முழுதும் ஒப்புவிக்கும்
பெருஞ்செயலிற் புகும்போது, பிறிதொன்றினையும் மனத்தில் வையாது
இறைவன் கழல்களையே சிந்தித்தல் வேண்டுமென்பதாம். "அஞ்செழுத்
தோதினா ரேறினார் தட்டில்" (544) "அஞ்செழுத் தோதிப் பாற்றடம் புனற்
பொய்கையில் மூழ்கினார் பணியால்" (திருநா - புரா - 370),
"அஞ்செழுத்தை வாய்ந்த தொண்ட ரெடுத்தோதி மணிநீர் வாவி முழுகினார்"
(தண்டி - புரா - 19) என்பனவும், பிறவும் பார்க்க. (அஞ்செழுத்துச்
சிவநாமமே யாம்). இங்கு நந்தனார் அஞ்செழுத்தைப் பயிலப் பெறாமையின்
அதன் குறிக்கோளாகிய நடமாடுங் கழலினை உன்னித் தீயினை வலம்
வந்து அதனுட் புகுந்தனர் என்க.

     எரிசூழ வலம் கொண்டார் - அத்தீ, இறைவனது ஆணையால்
வளர்க்கப்பட்டதாதலானும், அது தமது இழிபிறவியை நீங்கி மன்றினடம்
கும்பிடும் புண்ணிய உடல்தரும் சிவசாதனமாகுவதென்று
கொண்டனராதலானும் அதனை வலங்கொண்டார் என்க. "தனித்துலை
வலங்கொண்டு" (543) என்றதும், இவ்வாறு வரும் பிறவும் காண்க. 31

     1072. (வி-ரை.) கைதொழுது - என்றதனால் உடம்பால் வணக்கமும்,
கழல் உன்னி என்றதனால் மனத்தால் வணக்கமும் கூறப்பட்டன. வாழ்த்துச்
சொல்லுதலாகிய வாக்கின்றொழில் நிகழ்தற்கியைபில்லை யாதலின் கூறாது
விடுத்தனர். அன்றி இனம்பற்றி உடன்கொள்ளுதலுமாம். "நான் உய்ந்தேன்"
என முன்னரே தோத்திரித்தார் என்று கொள்ளுவதுமமையும்.

     அழல்புக்கார் - "எரியினிடை நீமூழ்கி" (1068) என்று
இறைவர் ஆணையிட்டனராதலின் அவ்வாறே தீயின் மூழ்குவாராய்
அழலினுட்புகுந்தனர்.

     பொழுதின்கண் - எரியின்கண் - (மாயப் பொய்யுரு வொழித்த)
காலமும் இடமும் குறித்தபடி. கண் - ஏழனுருபு.

     இம்மாயப் பொய்தகையும் உரு ஒழித்து- பொய் பொருந்திய
மாயாகாரியமாகிய இந்த உடல். பொய் - சாதி குலம் பிறப்பு என்று
அபிமானம் செய்தற்குரிமையும் நிலையாமையும் கருதியது. நந்தனார் புலை
உருவாய இழிபிறவி என்று கருதிய அவ்வுடலை ஒழித்தனர் என்பதாம்.

     புண்ணியம் ஆம் முனி வடிவாய் - பொய் உடலைத் தீயில்
ஒழித்த நந்தனார் மெய் உடலாம் புண்ணிய முனி வடிவம் பெற்றுத்
தீயினின்றும் எழுந்தனர் என்க.


     1 இத்தீர்த்தத்தினை அடுத்து நாயனார் திருக்கோயிலும் உண்டு.
மற்றும் அம்மரபினரால் அமைக்கப்பட்டும் கொண்டாடப்பட்டு வருகின்றது.