பக்கம் எண் :


1558 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

உய்தலாவது இவர் காட்டிய வழியாற் சிவபூசைசெய்து அதன் பயனை
இவர்பாற் பெற்று உய்தல். இவ்வாறே "ஏழுலகுங் குளிர்தூங்க" (திருஞான
- புரா. 23) என்று கூறுவதும் காண்க.

     சைவ வாய்மை வளர்தலாவது சைவத்திற் சொல்லப்பட்ட சிவபூசையே
மக்களுக்கு உறுதி தருவதாம் என்ற முடிந்த உண்மை நிலைபெற்றுப் பரவுதல்.

     மாதவத்தோர் வென்றி விளங்க என்றது சிவபூசை செய்வோரின்
வெற்றி விளக்க முறுதல். மாதவம் - சிவபூசை, தவங்களுள் எல்லாம் தலைசிறந்தது அதுவே யாகலின். "மாதவத்தோர் செயல்வாய்ப்ப" (திருஞான -
புரா. 23) என்றதும் காண்க. இவ்வெற்றியாவது பூசையில் வரும்
இடையூறுகள் எவையே யாயினும் அவை முன்னிற்காதொழிதல். "வானந்
துளங்கிலென்...ஒருவனுக்காட்பட்ட வுத்தமர்க்கே", "அஞ்சுவ தியாதொன்
மில்லை அஞ்ச வருவது மில்லை" என்றற்றொடக்கத்துத் திருவாக்குக்களும்
சரிதங்களும் நினைவு கூர்க. இந்நாயனார் சரிதத்தினுள், உலகர் செய்யிற்
பெரும்பாதகமாகும் செயலாகிய, மறையவனும் - தந்தையும் -
ஆகியவனைக்கொன்ற செயலும், நன்மையாகி முடிந்து முத்திக்கேதுவாகிய
வெற்றி காண்க.

     உதயம் செய்தார் - அவதரித்தார். ஞாயிறு - மதி - முதலிய
ஒளிப்பொருள்கள் உதயமாயின் உலகத்துப் புற இருள் நீங்குதல்
பயனாவதுபோல, இந்நாயனார் உதயமாயினமையால் ஆணவ இருள் நீங்கி
உய்தி பெறுதலாகிய பெரும்பயனாகுவது என்பது குறிப்பு.

     விசார சருமனார் - இஃது இவரது பிள்ளைத் திருநாமம். சருமர்
- மறையவர்களுக்குரிய மரபுப்பெயர். விசாரம் - ஆத்துமஞான விசாரணை.
முன்னைநிலையிலே, ஆன்ம விசாரணை முற்றிய உணர்ச்சியுடன் வந்து
அவதரித்த சாமுசித்தராவர் என்பது சரிதத்தாலறியப்படும். "கொளுத்து
வதன்முன் கொண்டமைந்து...அலகில் கலையின் பொருட்கெல்லை யாடுங்
கழலே யெனத்தெளிந்த, செலவு மிகுந்த சிந்தை" (1220) என்பதும், மேல்வரும்
பாட்டிற் கூறும் பொருளும் காண்க. பிரளயாகலர் விஞ்ஞான
கலர்களுக்குப்போல அருள்புரியத் தக்கவர் சாமுசித்தர். "பண்டைநற்
றவத்தாற்றோன்றிப் பரமனைப்பத்திபண்ணும், தொண்டர்" என்ற சித்தியாரும்
உரையும்பார்க்க. விசாரணையாவது - உயிர்களின் இருப்பையும்,
அவற்றைக்கட்டிய பாசத்தின் இயல்பையும், அந்த மலக்கட்டினை நீக்கி
இன்பந்தரும் இறைவனையும் விசாரித்து அறிந்து, பாச நீக்கத்தின் பொருட்டுச்
சைவ சாதனங்களின் வழி நிற்றல். 12

1218.

ஐந்து வருட மவர்க்கணைய வங்க மாறு முடனிறைந்த
சந்த மறைக ளுட்படமுன் றலைவர் மொழிந்த வாகமங்கண்
முந்தை யறிவின் றொடர்ச்சியினான் முகைத்த மலரின்
                                    வாசம்போற்
சிந்தை மலர வுடன்மலருஞ் செவ்வி யுணர்வு சிறந்ததால்.
13

     (இ-ள்.) வெளிப்படை. அவருக்கு ஐந்து ஆண்டுகள் நிரம்ப,
ஆறங்கங்களுடன் கூடியனவாகிச் சந்தசுகளுடைய மறைகளுட்படத்
தலைவராகிய சிவபெருமான் முன்னே மொழிந்தருளிய சிவாகமங்களிலே
முன்னைய அறிவினது தொடர்ச்சியினாலே, அரும்பாகி முதிரும்பூவில்
வெளித்தோன்றும் மணம்போலச் சிந்தை மலர அதன் உடனே
மலர்கின்றதாகிய பக்குவமுள்ளவுணர்ச்சி சிறக்க உளதாயிற்று.

     (வி-ரை.) ஐந்து வருடம் - ஐந்தாவது ஆண்டின் நிறைவு.
அங்கம்...மறைகள் - அங்கம் அறு - சிக்கை முதலியன. 354 பார்க்க.
இவை வேதம் ஓதுங்கால் ஒரு தலையாகப் பயிலப்பட வேண்டுபவையாதலின்
உடன் நிறைந்த என்றார். சந்தம் - வேதங்களுக்குரிய சுரங்கள்; புகழுடைய
என்பாருமுண்டு.