(இ-ள்.)
வெளிப்படை. வயது நிகழ்ந்துவரும் முறைமையில்
ஏழு ஆண்டுகளும் நிரம்பும் பக்குவம் வந்து பொருந்தப். புகழும்
பெருமையையுடைய உபநயனம் என்கின்ற ஒப்பற்ற சடங்கினை
முடித்ததற்பின், இகழப்படும் நெறியையுடையனவல்லாத எல்லாமும்
அவரறிவினிடத்தே பொருந்தியிருந்தன எனினும் அவரைப் பெற்றவர்கள்,
தமது விளக்கமுடைய மரபின் வழக்கின்படி வேத மோதுவிக்கும் செயலை
செய்வித்தனர்.
(வி-ரை.)
நிகழும் முறைமை - நாளும் மாதமுமாக ஆண்டுகள்
ஏறிச்செல்லும் முறையிலே. முன்பாட்டில் அவர்க்கு ஐந்தாண்டுகளின் பருவ
நிகழ்ச்சியும், இப்பாட்டால் ஏழு ஆண்டுகளின் பருவ நிகழ்ச்சியும்
கூறப்பட்டன. ஐந்து ஆண்டுகளின் பருவம் ஒருவனுக்கு உணர்வு தொடங்கி
வெளிப்படும் பருவம் என்ப. "பிறந்துணர்வு தொடங்கியபின்" (காரைக் -
புரா - 3) என்று ஆசிரியர் உரை செய்தது காண்க. "ஐந்தில் வளையாதது
ஐம்பதில் வளையுமா" என்றமுதுமொழிக் கருத்தும் காண்க.
உபநயனப்
பொருவில் சடங்கு - உபநயனம் - அந்தணர்
முதலாகிய முதல் மூன்று வருணத்தார்க்கும் சிறப்பாயுரியதாய் ஏழு
வயதளவில் நடைபெறவேண்டுவதோர் சடங்கு. பிள்ளைக்குப் பஞ்சசிகை
வைத்தும், மான்றோலுடன் முந்நூலணிவித்தும், பிரமமந்திரோபதேசம்
செய்தும் பிரமசரியமாகிய முதல் நிலையில் நிறுத்துதல். பொருவில்
சடங்கு
என்றது இதனால் அப்பிள்ளை இரு பிறப்பானனாகிய நிலையைப்பெறும்
அருமைப்பாடு குறித்தது. "உபநயன முறைமை யாகும் இருபிறப்பி
னிலைமையினைச் சடங்கு காட்டி" (திருஞான - புரா - 264) என்றது பார்க்க.
உபநயனம் - சேர்ந்தாகிய மற்றொரு கண்
என்பது பதப்பொருள். (உப -
அணுக; நயனம் - நடத்துதல்; இறைவனை அணுகஅடையச்
செய்தல்
என்றலுமாம். நீ
- நாய் - நட
- என்பது பகுதி.) மந்திரோபதேசத்தால்
ஞானக்கண் திறக்கப்படுதல் என்பதாம். சிவத்துவ விளக்கத்துக் கேதுவாகிய
ஞானம் மூன்றாவது கண் என்ப. மான்றோலும், முஞ்சி யரைஞாணும், பஞ்ச
சிகையும் முதலிய பிரமசரிய அடையாளங்களும் இக்கருத்தே பற்றியன.
சிவனே பிரமம்; சிவனை அறிகின்றவன் அவருடைய அடையாளங்களைத்
தாங்கிச் தரித்தல்வேண்டும். ஐந்து முகங்களுடைமையால் பஞ்சசிகை
சிவனதடையாளம்; மூன்றாவது கண் சிவனுக்குரியது. 507, 508, 509
பாட்டுக்களில் உரைத்தவையும் பார்க்க. "முந்நூலணியும் கலியாணம்"
(வெள் - சரு - 6) என்பதும் காண்க. எனவே, சைவ மரபில் நிற்பவர்க்கன்றி
ஏனைப் பாஞ்சராத்திரிகள், துவைதமார்க்கத்தவர், ஏகான்மவாதிகள்
முதலியோரிடத்து உபநயனம் என்பது உரிய பொருளின்றிப் போதலும்,
சைவமே எல்லாவற்றையும் உள்ளடக்கியதென்பதும் அதனாற் போதருதலும்
உய்த்துணர்ந்துகொள்க.
இகழும்
நெறிய அல்லாத எல்லாம் - அறிவோரால் இகழ்ந்து
விலக்கப்படாத எல்லா நூலறிவும்.
இயைந்த
எனினும் - ஓதுவிக்கும் செய்கை - செய்வித்தார் - அறிவின்கட் சிறப்பு
முன்னரே பொருந்தியிருப்பினும், உபநயனச்சடங்கு
முடித்ததுபோலவே வேதமோதும் பயிற்சியையும் சடங்காகவே செய்வித்தனர்
என்று ஓதுவிக்கும் செய்கை - வேதம் பயில்வித்தல் - கனம் சடை முதலாக
வேதம்பயிலும் செயல். "தாம்பாடிய சாமங் கணிப்போர்" (1210), "ஓது கிடையி
னுடன்போவார்" (1222), "சமிதை யுடன்மேல் எரிகொண்டு" (1232) என்றவை
வேதம்பயிலுதல் குறித்தன. மறையவர்க்குரிய அறுதொழில்களுள் "ஓதல்",
"ஓதுவித்தல்" என்பன வேதம் ஓதுவதனையே குறிப்பன. இதனை வேத
அத்தியயனம் என்பது வழக்கு.
|