பக்கம் எண் :


எறிபத்தநாயனார்புராணம்709

 

செயலினாலே நீங்க, மன்னனும் ஒங்கியது காண்க. மன்னனது
கோலோங்குதலும் மழைக்குக் காரணமாமென்ப. திருப்பாசுரத்தினும்
"வீழ்க தண்புனல்; வேந்தனு மோங்குக" எனத் தொடர்ந்து கூறியருளியதுங்
காண்க. இதுபற்றிய விரிவுரையில் ஆசிரியர் சேக்கிழார் பெருமான்,

"வேள்வி நற்பயன் வீழ்புன லாவது, நாளு மர்ச்சனை
                              நல்லுறுப் பாதலா,
 லாளு மன்னனை வாழ்த்திய தர்ச்சனை, மூளு மற்றிவை
                           காக்கு முறைமையால்"

- திருஞான - புரா - 822

என்றருளியிருப்பதையும் இங்குவைத்துச் சிந்திக்க.

     அழல் அவிர் சடை - தீப்போலச் செந்நிறத்தனவாகி விரிந்தசடை.
"அழனீரொழுகியனைய சடை", "மின்னார் செஞ்சடை", "மின்வண்ண,
மெவ்வண்ணமவ்வண்ணம் வீழ்சடை" என்பனவாதி திருவாக்குக்கள் காண்க.
மின் தீயினது கூறாகும் என்க.

     அடாதன - அடுக்கத்தகாதன. வரத்தகாத தீங்கு. அடியார்களுக்கு
நேரும் தீங்கினைத் தம் வாக்கினாலும் சொல்லாத மரபுடைய ஆசிரியர்,
அம்மரபுபற்றி அடாதன என்ற நயம் காண்க. 481, 647 - முதலிய பாட்டுக்கள்
காண்க.

     முழையரியென்ன - முழை - சிங்கங்கள் பதுங்கி வசிக்கும்
மலைக்குகை முதலிய மறைவிடங்கள். அரி - சிங்கம். பசிமுதலிய அவசியம்
நேர்ந்தபோ தன்றிப் பிறகாலத்து இது வெளிவராது. அவசியம் நேர்ந்தபோது
எவ்வகையிடையூற்றுக்கும் அஞ்சாது வீரத்தோடெழுந்து பாயும். யானைமேற்
பாய்தல் சிங்கத்தினாலன்றிப் பிறவற்றிலியலாது. இவை முதலியகாரணங்கள்
பற்றி இங்குச் சிங்கத்திற்கு ஒப்புமை கூறினார். தொழிலுவம அணி. "செங்கண்
வாளரியிற்கூடி" (572) என்று பின்னருங் கூறினார்.

     சீறி - இச்சீற்றம் அன்பர்க்கடாதன அடுத்தபோது தீர்க்கும்
அன்புடைமையால் எழுந்த சிவப் பணிவிடையின் நிகழ்வதாகலின் நூல்களால்
விலக்கப்பட்ட மனக்குற்றங்களில் ஒன்றாக வைத்து எண்ணப்படாததாமென்க.
இறைவனது கோபப் பிரசாதம் போலக் காண்க.

     முரண்கெட - பகை நீங்குமாறு. முரண்செய்த காரணத்தைக்
கெடச்செய்தலே அடாதனவற்றைத் தீர்க்கும் வழியாம். "அண்ணல் அரண்
முரண் ஏறும்" என்பது அப்பர் சுவாமிகள் தேவாரம். அடுத்தார்க்கு அரணும்
அடுக்காதார்க்கு முரணுமாம்.

     எறிந்து தீர்க்கும் பரசு - மறைபரசும் பரசு - எனப் பாசு என்பதனை
இரண்டிடத்தும் கூட்டுக. மறைபரசும் பரசு - சிவபெருமான் கையில் உள்ளது.
பரசு ஹஸ்தாய நம : என்பது சிவாஷ்டோத்தரம். "பரசுபாணியர்"
முதலாகவுள்ள தமிழ் வேதங்களும் காண்க. இங்கு நாயனார் ஏந்தியது அது
போன்றதே என்பதாம். இது பற்றியே முதனூலாகிய தமிழ் மறையும்
"இலைமலிந்த வேல்" என்று போற்றியது.

     பாசும் பரசு - சொற்பின் வருநிலை என்ற சொல்லணி. தூயபரசு
- இங்குப் பரசு, எறிந்து கொலைசெய்யும் படையாயிருந்தும், தூய் - என்ற
தென்னை? எனின், அடியார்க்கு அடுக்கும் அடாதனவற்றை நீக்கித், தூய
நல்ல சிவதன்மஞ்செய்யத் துணை செய்தலானும், அடாதன செய்து
அடியார்பால் அபசாரப்பட்டாரை ஒறுத்து அவரையுந் தூய்மை செய்தலானும்
அது தூயதேயாம் என்க. "கோல மழுவா லேறுண்டு குற்றம் நீங்கிச்
சுற்றமுடன், மூல முதல்வர் சிவலோக மெய்தப் பெற்றான்" - சண்டீசர்
புராணம் - 58.
"பாதகமே சோறு பற்றினவா" - திருவாசகம்.

     முன் எடுக்கப்பெற்றார் - முன் - முதன்மையாக. எப்போதும்
தம்முணர் விளக்கம் பெற. எடுக்கப்பெற்றார் - எடுத்துத் தாங்கும் பேறு
பெற்றார்.

     அடியார் பணிகள் இருவகைப்படும். அவர் வேண்டுவன கொடுத்தல்
ஒன்று. இளையான்குடிமாற நாயனார், இயற்பகை நாயனார் முதலியோர்
செய்தன.