பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்779

உழவு செய்தொழிலும், விளைபயனும், வடிகாலும் ஆகிய உழவுவகை தெரித்த கவிநலமும் காண்க.
626
     2525. (வி-ரை.) தடமெங்கும் - இவை நகரங்களின் அணிமையினும், உள்ளும் இருக்கும் நீர்நிலைகள்; குளிப்பதற்கும் மற்றைப் பயன்களுக்கும் உதவுவன; முன் பாட்டிற் கூறிய வாசத்தடம் - பெரு நீர்நிலைகள்; உழவுக்குதவுவனவாய் நகர்புறத்தே பணிகளின்மேல் அமைவன; "திரை வெள்வளை வாவி" (238) என்ற விடத்துரைத்தவை பார்க்க.
     தடமெங்கும் தொய்யில் நிறம் - பெண்கள் குளித்தலால் அவர்கள் உடலில் எழுதிய தொய்யிலின் நிறம் கவர்ந்து கொண்டு விளங்குவன தடங்கள்; தொய்யில் - நீர்கொடியின் ஒருவகை; இக்கொடி போன்ற கோலத்தைப் பெண்கள் முலைமேல் எழுதுவது முன்னாளில் அணிசெய்யும் வகைகளுள் ஒன்று; "ஐய பிதிர்ந்த சுணங்கணி மென்முலைமேற், றொய்யி லெழுதுகோ மற்றென்றான்" (கலி-111); இவ்வாறே கரும்பையும் வல்லியையும் தோளில் எழுதுவதும் வழக்கு; தொய்யிலினைச், சந்தனம் - அகில் - தேவதாரம் - குங்குமம் முதலியவை கூடிய கலவைக் குழம்பால் எழுதுவர்.
     இடமெங்கும் அந்தணர்கள் ஓதுகிடை யாகநிலை - இடம் - புறநகரில் உள்ள வெற்றிடங்கள்; ஓதுகிடை - மறைபயில் மாணவர்களின் ஓதும் இடம்; வேத பள்ளிக்கூடங்கள்; அந்தணர்கள் - ஓதுவிக்கும் கிடை என்க; ஓதும் - ஓதுவிக்கும் எனப் பிறவினையாக வந்தது; கிடை - பள்ளி; போதுதொறும் மாணவர் கூடிக் கிடத்தற்கிடமாதலின் கிடை எனப்படும்; யாகநிலை - யாகங்கள் செய்யும் சாலைகள்; அந்தணர்கள் என்பதனை இதனுடனும் கூட்டுக; (1208 - 1209 பாட்டுக்களில்) சண்டீச நாயனார் புராணத்துள் இவைபற்றி உரைத்தவையும் பார்க்க.
     மடம் - சைவ மடங்கள்; தக்கவன்பர் மடங்கடொறுஞ் சைவ மேன்மை சாற்றுவன" (கழறிற் - புரா. 3) : ஓதுகிடை - அறநிலைகளையும், யாகநிலை - மழைக்குக் காரணமாதலின் பொருணிலைகளையும், புனைவதுவை என்றது இன்பநிலையையும், தொண்டர்குழாம் என்பது வீட்டுநிலையினையும் குறிப்பின் உணர்த்துவதும் காண்க. இக்கருத்தை விரித்து முன்காட்டிய கழறிற்றறிவார் புராணப் பாட்டில் கூறியதும் கருதுக. மடங்கள் துறவற நிலையினையும், மனைகள் இல்லற நிலையினையும் குறிப்பித்தலும் காண்க.
     மனை எங்கும் புனை வதுவை - "மங்கல வினைக ளெங்கும் மணஞ்செய் கம்பலைகளெங்கும்" (80) வதுவை கல்யாணம்.
     நடமெங்கும் - நட ஒலி - நடம் - ஆடல் இடம்; ஒலி - அதற்கேற்ற பாடல் ஒலி.
     ஓவா - நீங்காத; ஓவா என்பதனை முன்கூறிய எல்லாவற்றுடனும் தனித்தனிக் கூட்டுக; நிறமும், கிடையும், நிலையும், குழாமும், வதுவையும், ஒலியும் ஓவாத பதிகள் என்க; நடமும் ஒலியும் நித்தியுமா கவுள்ளவற்றோடு வதுவையைச் சார்த்தி அவற்றின் பொருட்டு நடமும் ஒலியும் ஆகிய மங்கலத் துழனிகள் உள எனக் கூறிய நயமும் காண்க; ஆடல்பாடல்கள் நகர்களின் நித்திய மங்கலங்களுமாம்.