பக்கம் எண் :

[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்427

  (இ-ள்) அண்ணலார்....நீங்க - இறைவர் முன் கூறியபடி மொழிந்தருளிச் செய்து மறைந்தருள; ஆரூரர்....செல்வார் - நம்பியாரூரரும் தேவதேவராகிய இறைவரது அருளாணையினாலும் விரைந்து செல்வாராகி; கண்ணிய...காதலால் - ஏயர்கோனாரது நட்பினைக் கருதிய மனத்தினுள்ளே எழுந்த பெரு விருப்பத்தினாலும்; கலிக்காமர்க்கு.... செப்பிவிட்டார் - அக்கலிக்காமனாருக்கு வந்த வலிய சூலையினைத் தீர்க்கும் பொருட்டுத் தாம் வருகின்ற நிலையினைச் சொல்லி வரத் தூதுவரையனுப்பினார்.
  (வி-ரை) அண்ணலார் -"செய்யும் பெருமையை அறிந்தார் யாரோ?; என்று ஏயர்கோனாருங் கூறியபடி அறிதற்கரிய பெருமையினையுடையவர்.
  ஏவலால் - காதலால் - இறைவரது ஏவலும் தமது காதலும் ஆகிய இரண்டு காரணங்களாலும் நம்பிகள் கலிக்காமர்பால் விரைந்து செல்லுதலும், செப்பிவிடுதலும் ஆகிய இரு செயல்களையும் உடன் நிகழ்த்தினார்; எண்ணும்மைகள் தொக்கன.
  செல்வார் - செல்வாராகி; முற்றெச்சம்; செல்வார் - செப்பிவிட்டார் என்று கூட்டுக,
  கண்ணிய - கருதிய; கண்ணுதல் - குறிக்கொண்ட நோக்கம் வைத்து உணர்தல்; கருதுதல்; "கண்ணிருள்" என்றவிடத்து (போதம் - சிறப்புப்பாயிரம்) கருதியுணரப்படும் என்றுரைத்தமை காண்க. ஈண்டுக் கருதியுணர நின்ற பொருளாவது கலிக்காமனார் தம்பாற் கொண்ட செற்றத்தினுள்ளே நின்ற சிவன்பாலுறைப்புடைய அன்பின்றிறம். ஏயர் கோனாரது நட்பைக் கருதுகின்ற; ஏயர்கோனாரது சூலையைத் தீர்க்கக் கருதுகின்ற; சிவபிரான் கட்டளையைக் கருதுகின்ற என்று பலவும் உரைக்க நின்றது.
  திண்ணிய சூலை - திண்மையாவது இறைவரது திருவருட்கருவியாய்க் குறித்த பயனை விளைத்துவிடும் வலிமை; ஈண்டுப் பயனாவது அன்பு காரணமாக பகைப் பட்டாரை நட்புக்கூட்டுதல்; திண்ணிய - பெருநோய் செய்து பிறிதெவ்வாற்றானும் தீராத என்ற குறிப்பும் தருவது.
  வருதிறம் - தாமே வரும் செயல்; திறம் - ஈண்டு வலிய செயல் என்ற குறிப்புமுடையது.
  செப்பி விடுதலாவது - அறிவிக்கும்படி தூதரை ஏவுதல்.
 

395

3550
நாதர்தம் மருளா னண்ணுஞ் சூலையு மவர்பாற் கேட்ட
கேதமும் வருத்த மீண்டம் வன்றொண்டர் வரவுங் கேட்டுத்
"தூதனா யெம்பி ரானை யேவினான் சூலை தீர்க்கும்
ஏதமிங் கெய்த வெய்தி லியான்செய்வ தென்னா?" மென்பார்,
 

396

3551
"மற்றவ னிங்கு வந்த தீர்ப்பதன் முன்னான் மாயப்
பற்றிநின் றென்னை நீங்காப் பாதகச் சூலை தன்னை
உற்றவிவ் வயிற்றி னோடுங் கிழிப்ப"னென் றுடைவா டன்னாற்
செற்றிட வுயிரி னோடுஞ் சூலையுந் தீர்ந்த தன்றே.
 

397

  3550. (இ-ள்) நாதர்தம்....வருத்த - இறைவரது திருவருளினாலே வந்து பொருந்திய சூலையும், அதன்மேல் அவ்விறைவர் மொழிந்தருளக் கேட்ட துன்ப மொழியும் தம்மை மிகவும் வேதனை செய்ய; மீண்டும்...,கேட்டு - அதன் மேலும் வன்றொண்டரது வரவினையும் கேட்டு; தூதனாய்....என்பார் - தூதனாக எமது பெரு