பக்கம் எண் :

438திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  குறியாகக் கழல் என்றார். கழல் - ஈண்டு வெற்றிக்குறி என்ற பொதுமையை உணர்த்திய குறிப்புமாம். நம்பிகள் அரசர் திருவுடையாராதலின் அணிந்த கழல் என்பதுமாம். ஏயர்கோனார் வணங்கி வீழ்ந்தபோது நம்பிகள் திருவடி பெயர்க்கக் கழல் ஒலித்த குறிப்புமாம்.
  வீழ்ந்தார் - தன் வயமிழந்து வீழ்ந்தனர் என்பது; தமது முன்னை நினைவுகளையும், தாமே பிழைபட்டதனையும் நினைந்து மனமுருகிய நிலையினால் அவசமாயினர்; இரண்டிடத்தும் வீழ்ந்தார் என்றது அவர் வீழ்ந்த கருத்துப் பற்றியே இவரும் வீழ்ந்தார் என்ற குறிப்பும் தருவது காண்க.
  புவனம் போற்ற வானோர் மலரின்மாரி பொழிந்தனர் என்க; புவனம் - நில வுலகத்துள்ளோர்; வானோர் சிவனருள் வெளிப்பாடு கண்டு பொழிந்தனர்; உலகரும் அது கண்டு போற்றினர் என்க. புவனம் - இடவாகு பெயர்.
 

405

3560
இருவரு மெழுந்து புல்லி யிடைவிடா நண்பி னாலே
பொருவரு மகிழ்ச்சி பொங்கத் திருப்புன்கூர்ப் புனிதர் பாதம்
மருவினர் போற்றி நின்று, வன்றொண்டர் தம்பி ரானார்
அருளினை நினைந்தே "யந்த ணாள"னென் றெடுத்துப் பாடி,
 

406

3561
சிலபகல் கழிந்த பின்பு திருமுனைப் பாடி நாடர்
மலர்புகழ்த் திருவா ரூரின் மகிழ்ந்துடன் வந்த வேயர்
குலமுதற் றலைவ னாருங் கூடவே குளிர்பூங் கோயில்
நிலவினார் தம்மைக் கும்பிட் டுறைந்தனர் நிறைந்த வன்பால்.
 

407

  3560. (இ-ள்) இருவரும் எழுந்து புல்லி இருவர்களும் (வீழ்ந்து வணங்கிய நிலையினின்றும்) எழுந்து தழுவிக்கொண்டு; இடைவிடா....பொங்க - இடையறாத நண்பினுடனே ஒப்பற்ற மகிழ்ச்சி மேன்மேலும் பொங்க; திருப்புன்கூர்....நின்று - திருப்புன்கூரிற் சென்று அங்கு விளங்க வீற்றிருந்தருளிய இறைவரது திருவடிகளிற் பொருந்த வணங்கித் துதித்து நின்று; வன்றொண்டர்....பாடி - வன்றொண்டராகிய நம்பிகள் தமது பெருமானாரது திருவருளினை நினைந்து "அந்தணாளன்" என்று தொடங்கிப் பாடியருளி,
 

406

  3561. (இ-ள்) சிலபகல் கழிந்தபின்பு - சில நாட்கள் இவ்வாறு செல்ல; திருமுனைப்பாடி நாடர் - திருமுனைப்பாடி நாடராகிய நம்பிகள்; மலர்புகழ்....வந்த - விரிந்த புகழினையுடைய திருவாரூரிலே மகிழ்ச்சியுடன் தம்முடன் கூடத் தொடர்ந்து வந்த; ஏயர்....கூடவே - ஏயர் மரபில் வந்த தலைவராகிய கலிக்காமனாருடன் கூடவே; குளிர் பூங்கோயில்....அன்பால் - குளிர்ந்த பூங்கோயிலின்கண் நிலைபெற எழுந்தருளிய இறைவரை கும்பிட்டு நிறைந்த அன்பினாலே அங்குத் தங்கியருளினார்.
 

407

  இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன.
  3560. (வி-ரை) இருவரும் எழுந்து புல்லி - எழுந்து - "வன்றொண்டர் வணங்கி வீழ்ந்தார்" (3558); "ஏயர் கொற்றவனாரும் நம்பி குரைகழல் பணிந்து வீழ்ந்தார்" (3559) என்றபடி இருவரும் வீழ்ந்த நிலையிற் கிடந்தார்களாதலின் அந்நிலையினின்றும் எழுந்து; புல்லுதல் - தழுவிக்கொள்ளுதல்; இஃது அன்புடையார் தலைப்பெய்யும் கூட்டத்தின் நிகழும் மெய்ப்பாட்டுவகை.
  இடைவிடா நண்பு - முன்போலன்றி, இடையறாத தொடர்புடைய நட்பு.