பக்கம் எண் :

[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 30. திருமூலதேவ நாயனார் புராணமும் உரையும்473

  தன்மையால் உயிரும் தூய்மை பெற்றன என்பார் இரண்டும் சேர்த்துக் கூறியதோடு கலந்து என்ற குறிப்பும் கூறினார்; கலந்து - "கங்கை யாடிலென் காவிரியாடிலென்....எங்கு மீச னெனாதவர்க் கில்லையே" (தேவா - தனிக் குறுந்) என்றபடி இறைவரது தன்மை விரவும் நினைவுடன் என்ற பொருள் தருவது. முன்னர்க் "கங்கைநீ டுறையாடி" (3567) என்ற ஆசிரியர் இங்குக் "காவிரிநீர்ப் பெருந்தீர்த்தங் கலந்தாடி" என்றதும் கருதுக.
  கடந்து ஏறி - காவிரியைக் கடந்து தென்கரையில் ஏறி; யோகியார் காவிரிக்கு வடக்கே திருத்தில்லையினின்றும் தெற்கு நோக்கி வருகின்றாராதலின் காவிரியைக் கடந்து ஏற வேண்டுவதாயிற்று.
  ஆவின் அருங்கன்று உறையும் ஆவடு தண்துறை - உமையம்மையார் ஒரு காரணத்தால் பசுவின் வடிவுடன் போந்து இங்குத் தவஞ்செய்து அப்பசு வடிவம் நீங்கப்பெற்று வழிபட்டுறைகின்றார் என்பது தலவரலாறுகளுள் ஒன்று; ஆவின் அருங்கன்று - பசுக் கன்று வடிவு பெற்ற அம்மையார்; இது காரணமாக இறைவர் பசுபதியார் எனப் பெற்றார் என்ற வரலாறும், மேல் "சேவில் வரும் பசுபதியார் செழுங்கோயில்" என்பதும் காண்க; ஆவின் அருங்கன்று - பின்னே போந்த வடிவமாதலானும், மலம் பற்றிய உயிர்களாகிய ஏனைப் பசுக்கள் போலாது சிவத்தினின்றும் போந்த, சிவசத்தியாதலானும் ஆ என்னாது ஆவின் கன்று என்றார். அருங்கன்று என அருமைபடக் கூறியது மிக்கருத்து. ஆ அடுதுறை - பசுத்துவம் நீங்கப் பெற்ற இடம், - பசு; கோகழி - என்பதும் இப்பொருட்டு, கோ - பசு.
  சேவில் வரும் பசுபதியார் சே - இடபம்; பசுபதி - உயிர்களுக்கெல்லாம் பதியாவார். இரட்டுற மொழிதலால் இங்குப் பசுவாக வந்து வழிபட்ட அம்மையாருக்குப் பதியாவார் என்றுரைக்கவும் நின்றது.
  மேவு பெருங் காதலினால்....விருப்புறுவார் - மேவுதல் பின்னரும் வந்து பொருந்தித் தங்கும் என்ற சரித நிகழ்ச்சியின் முற்குறிப்பு; பெருங் காதல் - முதலில் இறைவரைப் பணிந்தபோது உள்ள மனநிலை; விருப்புறுவார் - பின்னர் வந்து உறையும் மனநிலையின் முற்குறிப்பு. உறுவார் - என்ற எதிர்கால வினையெச்சக் குறிப்புமது. இதனை மேற்பாட்டில் ஆசிரியர் விரித்தருளுதல் காண்க.
  காவிரியின்நீர்த் தீர்த்தம் - காவிரிநீர்த் தீர்த்தங்கள் - என்பனவும் பாடங்கள்.
 

9

  3573. (வி-ரை) அந்நிலை....ஆதரவு எய்த - இது யோகியர் திருக்கோயிலில் வழிபடும்போது திருவருளினால் அவர் மனத்துள் எழுந்த கருத்தும், அதனால் அங்குத் தங்குதற்கு உற்ற பெரிய ஆசையும் குறித்தது. அகலாதது ஒரு கருத்து - வழியில் ஏனைய பதிகளைக் கண்டு நீங்கியதுபோல அந்தத் தலத்தையும் விட்டு நீங்காத நிலைமையில் அங்கு உறையும்படி எழுந்த எண்ணம். இக்கருத்து எழுந்த காரணம் அவரையறியாமலே உள்வந்து நினைவில் எழுந்தது. இதன் காரணத்தைப் பின்னரே ஆராய்ந்து தெளிகின்றார் (3585); அந்நிலைமைத் தானத்தை - அந்த நிலைமையில் கருத்து எழுந்த அவ்விடத்தை; அந்நிலையாமை - கன்று உறையும் அந்தநிலை என்றலுமாம். அகலாத - முன் தானங்களினின்றும் நீங்கி வந்து தென்றிசையில் சென்றதுபோல் நீங்காத; மூளும் - மேன்மேல் எழுகின்ற; ஆதரவு - காதல்; ஆசை; இது பிற்சரித விளைவுக் குறிப்பினால் நிகழ்ந்தது.
  பின்னும் - அத் தானத்தை அகலாத ஆதரவு மூண்ட பின்னரும்; அதனாற் றடைபடாது என்க.