தொண்டரை ஆக்குதல் - தீக்கை, உபதேசம், பயிற்சி, உதவி முதலிய செயல்களினால் தொண்டர்களை உண்டாக்குதல்; அவரவர்க் கேற்ற தொழில் செய்வித்து - அவ்வவர் தகுதிக்கு - உடல்நிலை உள்ளநிலை பக்குவம் முதலியவற்றுக்கு - ஏற்கும்படி தகுதியுள்ள சரியைத் தொழில்களைச் செய்யும்படி பழக்கி; இவை - திருவலகு, திருமெழுக்கு, திருமஞ்சனம், திருமாலை, திருவிளக்கு முதலாயின. இவைபற்றிப் புராணத்தினுள் (3925 -3926) பார்க்க; அக்கணத்துக்கு - அந்த அடியார் கணங்களுக்கு; நாயகம் - முதன்மை; கொண்டல் கொண்டேறியமின் - மேகத்தி னுட்கொண்டு ஆகாயத்திற் சென்ற மகள்; கண்டல் - தாழை; கோலமடல்கள் - அழகிய நீண்ட இலைகள்; வெண்சோறு - தாழைப்பூவின் உள்ளீடாகிய பகுதி சோறு எனப்படுவது; மின்னுக்கொடி போல்வதால் பெண் என்றும், தாழை உயர்ந்தோங்கி வெள்ளிய உள்ளீடு உள்ள பூக்களை வெண்சோறு என்றும், அவற்றை ஏந்துதல் மேலிருந்த மகளுக்குச் சோறு அளித்தல் என்றும் உருவகித்தார்; தாழைப் பூச்சோறு பல பகுதிகளாயிருத்தல் சோற்றின் சிறு உருண்டைகள் போன்றிருத்தலும் காண்க. |
மின்னுக்கு - மின்னாகிய மகளுக்கு; கடற்காழி - கடற்கரையினையுடைய காழி; கடற்காழிக் கணநாதன் - முதனூலாட்சி போற்றப்பட்டது; கணநாதனே - நாயகம் பெற்றவன் என்று கூட்டுக. காண் - கண்டுகொள்க. முன்னிலையசையுமாம். |
ஊரும் பேரும் முதனூல் தொகுத்தது; அவற்றுடன் திருத்தொண்டின் பண்பும் வரலாறும் வகைநூல் வகுத்தது; இவை விரியும்நிலை விரிநூலுட் கண்டு கொள்க. |
3923. (இ-ள்) ஆழி...வனப்பினது - கடல் சூழ்ந்த பெரிய நிலவுலகத்தில் எல்லா உயிர்களையும் ஈன்று காக்கின்ற உமையம்மையாரது திருமுலைப்பாலமுதத்தினை உண்டருளியதனால் வாழ்வு அளித்த திருஞானசம்பந்த நாயனார் வந்தவதரித்தருளிய அழகிய பெருமையினை யுடையதாகிய; அளப்பில்லா...மாநகர் - அளவுபடாது ஊழியிற் பெருகிய பெருங்கடல் வெள்ளத்திலும் ஆழாது மிதந்து நின்று உலகம் மீள உளதாதலுக்கு ஒரு முதலாகிய சீகாழிப்பதியிலே; மறையவர்...கணநாதர் - வேதியர் குலத்தலைவராய் விளங்கியவர் கணநாதரென்பவர். |
(வி-ரை) ஆழி மாநிலம் - கடல் சூழ்ந்த பெரு நிலப்பரப்பாகிய நிலவுலகம். |
அகிலமு மீன்றளித்தவள் - உலகுயிர்களை யெல்லாம் பெற்றெடுத்து வளர்க்கின்றவளாகிய உமையம்மையார். |
வாழி - வாழ்வு தருபவர்; வாழ்வுடையவர். |
வந்தருளிய - வருதற்கிடமாகிய; வருதல் - அவதரித்தல்; வனப்பு - அழகு; ஈண்டு இப்பதிக்கு அழகாவது நன்மக்கட் பேறாக அந்நாயனாரைப் பெறுதல்; ''நன்கலன் நன்மக்கட் பேறு'' (குறள்) “வாழிவளர் மறைச்சிறார் நெருங்கியுள மணிமறுகு” (1909). |
வனப்பினதாகிய - மாநகர் - என்று கூட்டுக. பண்புத் தொகை. |
காவலர் - தலைவர்; காத்தலாவது அக்குலத்துக்குரிய மேம்பட்ட சைவவொழுக்க நிலைகளை வழுவாமல் ஓங்கும்படி காத்து வளரச் செய்தல். |
மறையவர் குலம் - நாயனார் அவதரித்த மரபு கூறியவாறு. |
வெள்ளத்தும் - உம்மை உயர்வு சிறப்பு. உலகினுக்கு ஒருமுதல் - என்றது உலகம் மீள உளதாதற்கு ஆதரவாயிருத்தல்; பிரம தீர்த்தத்தினைக் “கருப்பம்போல்” (1956) என்றதும் காண்க. |