பக்கம் எண் :

(வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - II)218

     அவை தாங்கி - பாதங்களையே முடியாகத் தாங்கிக்கொண்டு.
 
     தனிப்புரந்தார் - ஒப்பற்ற அரசு செலுத்தினார். பொதுக் கடிந்து என்றலுமாம்.
 
     பாதமலர்தாங்கி - உலகு புரந்தார் - இராமனது பாதுகைதாங்கிப் பரதன்
உலகாண்டனன் என்ற இராமன்கதைப் பகுதி ஈண்டு நினைவு கூர்தற்பாலது.     6
 
3936.   அம்பொ னீடு மம்பலத்து ளாரா வமுதத் திருநடஞ்செய்
தம்பி ரானார் புவியின்மகிழ் கோயி லெல்லாந் தனித்தனியே
இம்பர் ஞாலங் களிகூர வெய்தும் பெரும்பூ சனையியற்றி
உம்பர் மகிழ வரசளித்தே யுமையாள் கணவ னடிசேர்ந்தார்.            7
 
     (இ-ள்) அம்பொன்....தம்பிரானார் - அழகிய பொன்னாலியன்ற திருவம்பலத்திலே
ஆராவமுதமயமாகிய திருநடனத்தினைச் செய்கின்ற பெருமானார்; புவியின்....இயற்றி -
இந்நிலவுலகத்தில் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற கோயில்களில் எல்லாம் தனித்தனியாக
இவ்வுலகத்துயிர்கள் இன்பமடையும்படி பொருந்துகின்ற பெரும்பூசனைகளைச்
செய்வித்து; உம்பர் மகிழ அரசளித்தே - தேவர்கள் மகிழும்படி அரசாட்சி செய்து;
உமையாள் கணவனடி சேர்ந்தார் - உமைபாகராகிய சிவபெருமான்றிருவடி சேர்ந்தனர்.
 
     (வி-ரை) அம்பொன் நீடும் அம்பலம் - “முழுதும் வானுல கத்துள
தேவர்கள்....தூயசெம் பொன்னினால், எழுதி வேய்ந்த சிற்றம்பலம்” (தேவா) என்றபடி
தேவர்களும், பின்னர் இரணிய வர்மன் முதலிய அரசர்களும் அவ்வக்காலங்களில்
முறையே பொன் வேய்ந்து வந்தமையால் பொன்நீடு என்றார். “அம்பொ னீடிய
வம்பலம்” (440)
 
     ஆரா அமுதத்திருநடம் - தெவிட்டாத - குறைவு படாத - அமுதம் போன்ற
திருநடனம். அமுதம் - மரணம் தவிர்ப்பது. தேவரமுதம் சில காலம் நீடிக்க
மரணமின்றி வைப்பினும் பிறவிக்கேதுவாவது; ஆதலின் மரணத்துக்கு மேதுவாவது;
திருநடனம் அவ்வாறின்றி, என்றைக்கும் பிறவியில் மீளாத நிலையுடன் பேர் இன்பமும்
தருவது.
     தம்பிரானார் - அவரது திருவடியே முடியாகச் சூடியமையால் தமது பெருமான்
என்றார்.
 
     கோயில்....இயற்றி - இறைவர் கோயில்களிற் பூசை வழுவாது நிகழச்செய்தல்
அரசரது கடமைகளுள் ஒன்று. “எங்குமாகி யிருந்தவர் பூசனைக், கங்கண் வேண்டு
நிபந்தமா ராய்ந்துளான், துங்க வாகமஞ் சொன்ன முறைமையால்” (100); “மங்கையைப்
பாக மாக வைத்தவர் மன்னுங் கோயி, லெங்கணும் பூசை நீடி யேழிசைப் பாட லாடல்,
பொங்கிய சிறப்பின் மல்கப் போற்றுதல் புரிந்து” (469); “புற்றிடங்கொள் புனிதர்க்
கமுதுபடி முதலா, நீதி வளவன் றான்வேண்டு நிமந்தம் பலவு மரியணையின், மீது திகழ
விருந்தமைத்தான் வேதா கமநூல் விதிவிளங்க” (1884) என்பன
முதலியவற்றால்இவையே யாண்டும் அரசர்க்குரிய முதற்கடமையாக வகுத்து வற்புறுத்திக்
காட்டிய ஆசிரியரது அருளிப்பாடு காண்க.
 
     தனித்தனியே - ஒரு கோயிலுக்காயின திருவமுது முதலியவற்றையே எல்லாக்
கோயிற் சுவாமிகளுக்கும் கைகாட்டும் கோயில் அதிகாரிகள் இதனை நோக்கித் தக
ஒழுகுவார்களாக.