இம்பர் ஞாலம் களிசிறக்க - பரார்த்த பூசை என்பர்; கோயிற் பூசைகள் உலகம் வாழ அரசராற் செய்யப்படுவன. இவை நன்கு செய்யப்படின் உலகம்களித்துத் தழைத்து ஓங்கும்; செய்யாவிடின், அதற்கு மாறாக உலகம் துன்பமடையும் என்று எதிர்மறை முகத்தால், “முன்னவனார் கோயிற் பூசைகண் முட்டிடின், மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும்; கன்னங் களவு மிகுத்திடுங் காசினி” என்று நாட்டுக்கும் அரசுக்கும் கேடுவருமென்ற சிவாகம ஆணைவழி அறுதியிட்டருளிய திருமூலர் திருமந்திரமும் காண்க. |
எய்தும்பூசனை - பெரும்பூசனை - எனப் பிரித்துக் காட்டி நித்திய நைமித்திகங்கள் எனப்படும் இரண்டும் கொள்ளத்தக்கன. |
இயற்றி - இயற்றுவித்து; நிபந்தங்கள் நியமித்து. |
உம்பர்மகிழ அரசளித்தே - அறநூல் வழியான செங்கோலரசு மழைக்குக் காரணமாய் வானவர் பூசைக்கும் ஏதுவாதல் குறிப்பு. இறைவரது பூசையினால் உலகம் மகிழவும், அரசாட்சியினால் உம்பர் மகிழவும் என்க. 7 |
| 3937. | காதற் பெருமைத் தொண்டினிலைக் கடல்சூழ் வையங் காத்தளித்துக் கோதங் ககல முயல்களந்தைக் கூற்ற னார்தங் கழல்வணங்கி நாத மறைதந் தளித்தாரை நடைநூற் பாவி னவின்றேத்தும் போத மருவிப் பொய்யடிமை யில்லாப் புலவர் செயல்புகல்வாம். 8 |
(இ-ள்) காதல்...அளித்து - பெருவிருப்பமுடைய பெருமையுடைய திருத்தொண்டினிலைத்த கடல் சூழ்ந்த உலகத்தைக் காத்து அரசளித்து; கோது....வணங்கி - குற்றம் நீங்கும்படி முயன்ற களந்தைக் கூற்றுவநாயனாரது திருவடியை வணங்கி, (அத்துணை கொண்டு); நாதமறை....மருவி - நாத உருவாகிய வேதங்களைத் தந்து உலகளிக்கும் இறைவரை நடைநூலின் பாக்களால் சொல்லித் துதிக்கும் சிவபோதம் பொருந்தி; பொய்யடிமை...புகல்வாம் - பொய்யடிமையில்லாத புலவர் என்ற திருக்கூட்டத்திற் சேர்ந்த அடியார்களது செயலினைச் சொல்லப் புகுகின்றோம். |
(வி-ரை) ஆசிரியர் தமது மரபுப்படி இதுவரை கூறிப் போந்த சரிதத்தை வடித்து முடித்துக் காட்டி, இனி, மேற் கூறப்புகும் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார். |
காதற் பெருமைத் தொண்டு - பெருவிருப்பம் விளைத்தற்கேதுவாகிய பெருமையுடைய திருத்தொண்டு. |
தொண்டின் நிலை - இந்நாயனார் திருத்தொண்டின் நிலைத்த தன்மைகள் முன் (3930 - 3935 -3936) கூறப்பட்டன. |
தொண்டின் நிலை(யில்) - காத்து - அளித்து - இறைவரது திருவடியே முடியாகக் கொண்டு அரசு செய்து என்ற சரிதப் பகுதி; “அவைதாங்கி - புரந்தார்” (3935). |
கோதங் ககல முயல் - கோது - ஆணவமலக்குற்றம். “ஆழ்க தீயது; எல்லாமரனாமமே, சூழ்க - வையக முந்துயர் தீர்கவே” என்ற திருப்பாசுரம் காண்க. |
களந்தைக் கூற்றனார் - “கூற்றன் களந்தைக்கோன்” (தொகை); “களப்பாளனாகிய கூற்றுவனே” (வகைநூல்); (களப்பாள் - களப்பாளன் - களந்தை முதல்வன்). |