பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்254

  பாறுற் றவெயிற் பதிபற் றறவிட்
டேறுற் றனனோ டியிருஞ் சுரமே.                            29
 
     (இ-ள்) மாறுற்ற...அதிகன் - பகைமை பூண்ட வலிய சேனைகளையுடையவாள்
ஏந்திய அதிகன் நூறுற்ற...பட - அழிந்துபட்ட பெரும்படைகள் குவியல் குவியல்களாக
ஆக்கப்பட்டதனால்; பாறுற்ற....சுரமே - சிதறுண்ட மதில்களைக் கொண்ட தனது
ஊரினைப் பற்றியிருத்தலை விட்டுப் பெரிய காட்டினுள்ளே ஓடிப்போய் ஒளித்தனன்.
 
     (வி-ரை) மாறு - பகைமை; நூறுதல் - அழிதல்; நூழில் - கொன்று குவித்தல்;
இது பற்றிய துறை நூழிலாட்டு எனப்படும். பாறுதல் - சிதறுதல்; ஏறுறுதல் -
உட்சென்று ஒளித்தல் என்ற பொருள் தந்து நின்றது.
 
     இருஞ்சுரம் - நெருங்கிய காடு; கானகம் பாலைவனம் என்பாருமுண்டு.
 
     பற்றறவிட்டு - பதிபற்றுக்கோ டாகக் காவல் தரும் என்று எண்ணித்
துணிந்திருந்த ஒழுக்கத்தினை விடுத்து; “பற்றறுப்பீர்” (3958).
 
     விறற்படை - சேனை; “அடற்படையும், உளநிறைவெஞ் சினந்திருகி” (3960);
அதிகன் படைச்செருக்கும் பதிச்செருக்கும் என்ற இரண்டினையுமே பற்றித் துணிவு
கொண்டு பணியாதிருந்தனன்; அவற்றுள் அந்தப் படை முன் பலபோரிலும்
வென்றிருந்தது; இப்போது நூறுண்டு நூழில்பட்டது; எயிற்பதி பாறுற்றது. ஆதலின்
பற்றற விட்டு ஓடினன் என்பதாம். நூழில்பட்டதனாலும், பாறுற்றதனாலும் என்க.
 
     சுரமே ஓடி ஏறுற்றனன் - இவ் வதிகன் ஏழு அரசர்களைப் போரில்
வென்றிருந்து இறுதியில் சேரமான் பெருஞ் சேர லிரும்பொறையால் வெல்லப் பட்டான்
என்று பதிற்றுப்பத்து (8ம் பத்து) அறிவிக்கின்றது; இவ்வாறு பின்னரே வென்றொழிய
இருந்தானாதலின் இப்போது அருஞ்சுரமே ஓடி ஏறுற்றனன் என்பதாம்.
 
     மாறு - நூறு - (நூழில்) - பாறு - என்ற இவ்வெதுகைத்தொடைகளும்
சொற்கருத்துக்களும் காட்டும் போர்பற்றியே, உமாபதி சிவனார் திருத்தொண்டர் புராண
வரலாற்றினுள் “மாறுமுகமும் பொருந்த” என்ற முருகப்பெருமான் துதியினுள்
எடுத்தாண்டு போற்றியிருத்தல் காண்க.
 
3971. அதிகன் படைபோர் பொருதற் றதலைப்
பொதியின் குவையெண் ணிலபோ யினபின்
நிதியின் குவைமங் கையர்நீள் பரிமா
எதிருங் கரிபற் றினரெண் ணிலரே.                           30
 
     (இ-ள்) அதிகன்....போயினபின் - அதிகனது சேனையிலே செய்தலில்
வெட்டப்பட்ட போர் வீரர்களின் தலைக்குவியல்களின் கூட்டம் எண்ணில்லாதன
அனுப்பப்பட்ட பின்பு; நிதியின் குவை...எண்ணிலரே - நிதிக்குவியல்களும், பெண்களும்
நீண்ட குதிரைகளும் போரில் சீறி எதிர்க்கும் யானைகளுமாகிய இவற்றை அளவற்ற
சேனைவீரர்கள் கொண்டனர்.
 
     (வி-ரை) போரில் வென்ற அரசனது வீரர்கள் வெல்லப்பட்ட அரசனது
படைவீரர்களின் வெட்டுண்டு வீழ்ந்த தலைக்குவியல்களைக் கொண்டு தமது அரசன்
முன் கொணர்ந்து காட்டுதல் முன்னாட் போர் முறைகளுள் ஒன்று; “பகைத்தவர்
சின்னமும் கொண்டு” (கோவையார் - 330).