சேனையில் பணிசெய்வோர்; மின்னும்...கொணர்ந்தனர் - விளங்கும் ஒளியினையுடைய பெரிய முடியினைச் சூடிய வேல் ஏந்திய சோழரது முன்னே கொண்டு வந்தனர். |
(வி-ரை) மன்னும் - பழமையாகிய புகழ்நீடிய; நிலைபெற்ற. |
வாயிலின் வாய் முன் வந்த - இத்தலைக்குவியல்களை அரசர் கண்காணிக்கும் வேளையிலன்றி முன்னர் நகரினுள்ளே கொண்டு போதல் அதன் சுபத்தன்மைக்கும், தூய்மைக்கும் பலவாற்றானும் பொருந்தாமையின் அவற்றை முன் கொண்டு வந்தாரேனும் நகர வாய்தலில் வைத்தனர் என்பதாம். நகர்வாயில் - அரண்மனைவாயில் என்பாருமுண்டு. |
வேல் - ஆயுதப்பொது; வெல்வதற்குக் கருவியாயுள்ளது என்பது பற்றி வந்த பெயர். வளவன் - வளமுடையவன். சோழரது மரபுப் பெயராய் வழங்குவது, ஏனையோர்க்கு இத்தகைய பொய்யாத(காவிரி) நீர்வள மின்மையால்; இங்குப் புகழ்ச்சோழரைக் குறித்தது. வளவன்தன் - வளவனுடைய. |
தானையுளோர் - சேனைப்பணிவீரர். 32 |
| 3974. | மண்ணுக் குயிரா மெனுமன் னவனார் எண்ணிற் பெருகுந் தலையா வையினும் நண்ணிக் கொணருந் தலையொன் றினடுக் கண்ணுற் றதொர்புன் சடைகண் டனரே. 33 |
(இ-ள்) மண்ணுக்கு......மன்னவனார் - மண்ணுலகத்தினுக்கு உயிரே போன்றவர் என்று சொல்லத்தக்க அம்மன்னவனார்; எண்ணில்....யாவையினும் - எண்ணினால் பெருகிய தலைகள் யாவையுள்ளும்; நண்ணி...ஒன்றின் நடு - சென்று கொண்டு வரும் தலை ஒன்றின் நடுவிலே - (உச்சியிலே); கண்...கண்டனரே - எண்ணப்படுகின்றதாகிய ஒரு சிறு சடையினைக் கண்டனர். |
(வி-ரை) மண்ணுக்கு உயிராம் எனும் - “மண்ணில் வாழ்தரு மன்னுயிர் கட்கெலாங், கண்ணு மாவியு மாம்பெருங் காவலான்” (99) என்றதும், ஆண்டுரைத்தவையும் காண்க. “நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே, மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம்” (புறம் - 386); எண்ணில் - எண் (இலக்கம்)ணினால்; அளவினால். |
நண்ணிக் கொணரும் - காணும் பொருட்டு குவியலினின்றும் எடுத்துக் கொணரும் (3975) |
கண்ணுற்ற - கண்ணுதல் - நினைத்தல்; சிவனது சிறந்த அடையாளமென்று எண்ணப்படுதல்; “சடையான்” “கபர்த்தன்” என்பன சிவனுக்கே யுரிய பெயர்கள். நடுக்கண் - நடுவிடத்திலே என்றலுமாம். |
நடுக்கண்ணுற்றதொர் புன்சடை - நடுக்கண் - சிவனது தீக்கண்; ஆகுபெயராய் நடுக்கண்ணினையுடைய சிவன் என்று கொண்டு அவனது அடையாளமாய்ப் பொருந்திய என்றலுமாம். நடுக்கண் - இப்பொருளில் சிவனையுணர்த்திப் பின் அவனது அடையாளமான என இருமடியாகுபெயர். சிவனுக்குப் பொருந்திய சடை என்றலுமாம். புன்சடை - சிறுசடை; ஓர் - ஒன்று. 33 |