பக்கம் எண் :

பெரியபுராணம்259

     சடைப்பெருமான் நெறிதாங் கண்டவரானார் - சிவநெறி நின்றவர்.
சடைதாங்கும் திருமுடியாராதலின், அச்சடை அடையாள முடைய சிவபெருமான்
நெறிநின்றவர் என்பது அதனாலேதெளியப்படும் என்றதாம். நீர் - கங்கைக்கு
ஆகுபெயர்.
 
     தாங்கி வரக்கண்டும் - பழிச்சின்னமாகிய இதனை ஒருவன் கையில் ஏந்தி
என்முன் வெற்றிச் சின்னமாகக் கொண்டு வந்து காட்டக் கண்டபின்னரும்.
 
     பார்தாங்க இருந்தேனோ? - உலகம் புரக்க என்று உயிர் தாங்கிக்
கொண்டன்றோ இருந்தேன்? கண்டபொழுதே ஆவிகழிந்திலேன் என்பது குறிப்பு.
அவ்வாறு ஆவிகழியாமலிருக்கும் காலம் கணந்தோறும் பார்தாங்க இருப்பதாகவே
முடியுமன்றோ? என்பதாம். கண்டபோதே ஆவி துறப்பதன்றோ தலையன்பு என்ற
குறிப்பு.
 
     பழிதாங்குவேன் - அக்காலம் பார்தாங்குதலன்றி பழியையன்றோ தாங்கி
நிற்பேனாவேன்; ஆதலின் பழிதாங்கி நில்லாது உயிர் துறந்து இதற்குத் தீர்வு
தேடுவேன் என்பது குறிப்பு.
 
     கண்டறிவானார் - என்பதும் பாடம்.                             36
 
3978. என்றருளிச் செய்தருளி யிதற்கிசையும் படிதுணிவார்
நின்றநெறி யமைச்சர்க்கு “நீணிலங்காத் தரசளித்து
மன்றினடம் புரிவார்தம் வழித்தொண்டின் வழிநிற்ப
வென்றிமுடி யென்குமரன் றனைப்புனைவீ”
றெனவிதித்தார்.        37
 
     (இ-ள்) என்று...துணிவார் - முன்கூறியவாறு அருளிச் செய்தருளி, இதற்குத்
தீர்வாகப் பொருந்தும் செயலை துணிவாராய்; நின்ற நெறி அமைச்சர்க்கு - தமது
ஆணைவழியிலும் நூல் நெறி வழியிலும் நின்ற அமைச்சர்களுக்கு;
நீணிலம்...எனவிதித்தார் - நீண்ட நிலவுலகத்தினைக் காவல் புரிந்து அரசு செய்து
அம்பலத்துள் நடம்புரியும் இறைவரது வழியே வரும் தொண்டின் வழிவழி நிற்கும்படி
வெற்றி பொருந்தும் முடியினை எனது மகனுக்குச் சூட்டுங்கள் என்று
ஆணையிட்டருளினர்.
 
     (வி-ரை) இசையும்படி - பொருந்தும் தீர்வும் மேற்செயலுமாகிய படியினை; படி
-தன்மை; செயல். படியை என இரண்டனுருபு விரிக்க.
 
     நின்றநெறி - ஆணையும் நூல்விதியும் ஆகியவற்றில் வழுவாதுநின்ற
அரசியல்நெறி.
 
     வழித்தொண்டின் வழிநிற்ப வென்றிமுடி புனைவீர் - என் போல் வழுவிப்
பழிவெற்றி தாங்காது என்பது குறிப்பு. ஆயினும், போரினும், உயிர்கொடுத்துச் சைவச்
சீரினும் புக இரண்டினும் வெற்றிபெற்றவர் இவரென்க. தொண்டினெறி வழியே வழிவழி
நிற்கும் அவ்வெற்றியே பெறும் வகையால் முடிசூட்டுவீர். இது, தாம்பழி நீங்கத் தீப்புகத்
துணிந்தாராதலின் இனி நில அரசாட்சி நடைபெறும் வகையினை முறைசெய்து
ஆணைதந்தனர். “விதியி னாலே, பரவிய திருநீற் றன்பு பாதுகாத் துய்ப்பீர்” என்று
 மெய்ப்பொருணாயனார் இறைவரைச் சிந்தித்துக் கூறிய இறுதி மொழிகள் ஈண்டு
நினைவு கூர்தற்பாலன. வென்றி - நீற்றுநெறிபாலிப்பது தம் உயிரினுஞ் சிறந்ததென்று
போற்றிக் காத்தலே வென்றியாவது; "வேடமே மெய்ப் பொருளெனத் தொழுது
வென்றார்" (481); “வெல்லுமா மிகவல்ல” (தொகை) என்றவை காண்க. குமரன்றனை -
குமரனுக்கு; வேற்றுமை மயக்கம்.
 
     விதித்தார் - அரச ஆணையிட்டருளினர்; விதி - பிழையாது செய்யக்
கடவதாகிய ஆணைமொழி.                                          37