வகை: திறமமர்....விடுவோன் - திறமுடைய மீன் வரும்போதெல்லாம் அங்கு ஒரு மீனைச் சிவனுக்கென்று பொருந்த அப்பெருங் கடலினுள்ளே விடுபவர்; ஒருநாள் - அவ்வாறொழுகும் நாள்களில் ஒருநாள்; கனகநிறம்....விட்டோன் - பொன்மயமான யாவரும் விரும்பத்தக்க தொருமீன் கிடைக்க அதனை நிமலனாராகிய சிவபெருமானுக்கென்றே கடலில் விட்டவர்; கமலம்....பொய்யிலியே - தாமரைகள் புறங்களில் பூக்கும் நாகைப்பட்டினத்தில் அவதரித்த அதிபத்தர் என்கின்ற பொய்யில்லாத அடியவர். |
திறமமர் மீன்படுக்கும் பொழுது - திறம் - கடல் மீன்கள் பெரியனவாயும் விலை பெறுவனவாயும் உள்ள தன்மை; திறம் - பலவகை என்றலுமாம். அமர் - விரும்பும்; படுத்தல் - பிடித்தல்; வலையிற்பட வருதல்; மீன்படுத்தல் என்பது மரபு வழக்கு. பொழுது - பொழுதெல்லாம்; ஒவ்வொரு நாளிலும்; முற்றும்மை தொக்கது; ஒரு மீன்....விடுவோன் - வலையில் வருமவற்றுள் சிறந்த ஒன்றை இது சிவனுக்காகுக என்று எடுத்து மீனைக் கடலுள் புகுவிடுவோர் (4002); ஒருநாள் ஒப்பற்றநாள். இவ்வொரு நாளின் ஒப்பற்ற தன்மை விரிநூலுள் (4003 - 4008) விரிக்கப்படும். கனக நிறமமர் மீன்பட - (4008) பொன்னிறமும் நவமணிச் சுடரும் பொருந்தி ஒளிவீசிய நிலை; அமர் - யாவரும் விரும்பும்; பட - கிடைக்க. விட்டோன் - அதனையும் கடலினுள் சிவனுக்காக என்று விடுத்தோர் (4008); கமலம் புறமமர் - இந்நகர் காவிரிநீர் நாட்டின் பகுதியாய், மருதமும் நெய்தலும் மயங்கும் நிலப்பகுதியாதலின் நகர்ப்புறத்து வயல்களில் தாமரைகள் மலர்தல் கூறினார். பொய்யிலி - உண்மைத் தன்மையுடைய அடிமைத் திறம்; எதிர்மறையாற் கூறியது உறுதிப் பொருட்டு (4009); பொய்யிலி - இறைவர் பெயராதலும் காண்க. “பூந்துருத்திப் பொய்யிலியாய்” (தேவா). ஊரும் பெயரும் வரலாறும் பண்பும் வகை நூல் வகுத்தது. புறவமர் - என்பதும் பாடம். |
விரி: (இ-ள்) மன்னி....உரிமை - நிலைபெற்று நீடிவருகின்ற சூரியன் வழியில் வந்த மரபாகிய பழமையாகிய முதன்மைபெற்ற சோழர்களது திருக்குலத்திற்கு உரிமையுடைய; பொன்னி நாடெனும்....மலர்போல் - காவிரி நாடு என்னும் கற்பகப் பூங்கொடியிற் பூத்த மலர்போன்று; நாகப்பட்டினத் திருநகரம் - நாகப்பட்டினம் என்கின்ற திருநகரமானது; நன்மை சான்றது - நன்மையினில் மேம்பட்டது. |
(வி-ரை) செங்கதிரவன் - ஞாயிறு; செங்கதிரவன் வழிமரபில் - முதற்சோழர் திருக்குலம் - சோழர்கள் சூரிய குலத்தில் வந்தவர்கள் என்பது மரபு; அவ்வாறே பாண்டியர் குலம் சந்திர மரபு; சேரர் குலம் அக்கினி மரபு; என்பதும் வழக்கு. “ஆதித்தன் குலமுதல்வன் மனுவினையா ரறியாதார்” (கம்பன்). |
தொன்மையாம் சோழர் - முதற்சோழர் - என்க. முதல் - முதன்மை பெற்ற. |
உரிமை - பொன்னி நாடு சோழர்களுக்கே உரியது என்பதாம். |
பொன்னி நாடெனும் - கற்பக மலர்போல் நாகப்பட்டினத் திருநகரம் நன்மை சான்றது - பொன்னி நாட்டினைக் கற்பகப் பூங்கொடிக்கும், நாகப்பட்டினத்தை அக்கொடியிற் பூத்த மலருக்கும் உவமித்தார்; கற்பகப் பூங்கொடி - கற்பகவல்லி; “வான்றிகழ் கற்பகவல்லி” (கந்தபு - மாயைப் - 25); காமவல்லி என்பர். வேண்டியவர் வேண்டியவாறே தருவது. இனிக், கற்பகம் தருவாக வுரைத்துப் பொன்னி கற்பகத்தரு எனவும்; அது பாயும் நாடு கற்பகத்திற் படர்கொடி யெனவும்; அந்நாட்டின் நாகப்பட்டினம் அக்கொடியின் பூவெனவும் உவமைபெற |