செல்வங்களுடன் உள்ள குடிகள் நிறைதலாலும் ஆகிய தன்மை. “மெய்யொளியி னிழற்காணு மாடியென” (1274). |
நிலம் பதினெட்டு - பதினெட்டு மொழிகள் வழங்கும் பதினெட்டுத் தேயங்கள். இத்தேயங்கள், சிங்களம் முதலாகத் தமிழகம் ஈறாகத் தமிழ் நூல்களிற் கூறப்பட்டவை. மொழிகளும் அவ்வத் தேயங்களின் பெயராலே அறியப்படுவன. |
சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கவுடம், கோசலம், தமிழகம் என்பன. “பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்” (திருமந்திரம்). |
நிலம் பதினெட்டினும் நிறைந்த - பல பொருள் மாந்தர்கள் பெருகி - இவர்கள் வாணிபத்தின் பொருட்டு இங்கு வந்து குழுமுவர்; தத்தம் நாட்டின் வாணிபப் பொருள்களையும் கொணர்வர்; இந்நகர் கடல் துறைமுகப் பட்டினமாதலாலும், செல்வப் பொருட் பண்டங்கள் நிறைதலாலும் வாணிபத்திற்காகப் பல திசைகளிலுமிருந்து மக்கள் வந்து கூடுவர். “ஊறுபொரு ளின்றமி ழியற்கிளவி தேருமட மாதருடனார், வேறுதிசை யாடவர்கள் கூறவிசை தேரும்” (4); காசுமணி வார்கனக நீடுகட லோடுதிரை வார்துவலைமேல், வீசுவலை வாணரவை வாரிவிலை பேசுமெழில்; (10) என்று, (சாதாரி - வேதவனம்) இதுபோன்ற கடற் றுறைமுகப் பட்டினமாகிய வேதாரண்யத்தினைப் பற்றி ஆளுடைய பிள்ளையார் அருளியவை இங்கு நினைவு கூர்தற்பாலன. |
கோடி - எல்லை; கோடி நீள்தனம் - தனங்களின் எல்லை இது என்னும்படி நீண்டதனம். கோடி - என்ற பேர் எண் குறித்ததென்றலுமாம். மண்டலம் - வளைவு. பிறங்கலிற்சிறந்து - என்பதும் பாடம். 4 |
| 3996. | அந்நெ டுந்திரு நகர்மருங் கலைகடல் விளிம்பிற் பன்னெ டுந்திரை நுரைதவழ் பாங்கரின் ஞாங்கர் மன்னு தொன்மையின் வலைவளத் துணவினின் மலிந்த தன்மை வாழ்குடி மிடைந்தது தடநுளைப் பாடி. 5 |
(இ-ள்) அந்நெடும்.....ஞாங்கர் - அந்த நீண்ட திரு நகரத்தின் பக்கத்தில் அலைகளையுடைய கடலின் விளிம்பிலே பல நீண்ட அலைகளின் நுரை வந்து தவழ்தற்கிடமாகிய பக்கங்களை அடுத்து; மன்னு...தன்மை - நிலைபெற்ற பழமையில் வலைவீசி மீன்படுக்கும் தொழிலாற் பெறும் வளமுடைய மீன் உணவினில் பெருகிய தன்மையாலே; வாழ்...நுளைப்பாடி - வாழ்வு பெற்ற பரதவர் குடிகள் மிடைந்துள்ளது பெரிய பரதவர் சேரி. |
(வி-ரை) கடல் விளிம்பு - கடலின் கரையோரம். |
திரை நுரைதவழ் பாங்கர் - கடலலைகள் கரையின் மோதிச் சிதறிப் பரவும்போது அவ்வலைகளின் நுரை நெடுந்தூரம் சென்று கரையின் தரையிற்றவழும். ஞாங்கர் - அந்த அளவு எல்லையினை அடுத்துள்ள இடம். |
தொன்மையாவது இப்பரதவர் இத்தொழிலையே உரிமையாக வழிவழி நீண்ட காலமாகச் செய்து வாழ்வார் என்ற பழமையுரிமை. |
| வலைவளம் - வளை வீசிப்படுக்கும் மீனாகிய வளம்; செல்வம். |