பக்கம் எண் :

பெரியபுராணம்283

     (வி-ரை) வந்தார் - மேலோர் - என்க; மேலோர் பெயர்ப் பயனிலை;
மேலோர் - வந்தார் என்று கூட்டி முடிப்பதுமாம்.
 
     அடித்தொண்டு புரியும் வினை - திருவடித் தொண்டில் செய்யப்படும் செயல்.
தொண்டு மனத்தாலும் செய்யப்படுமாதலின், இங்கு, அதனோடு, விளங்கிய
செயலினாலும் தொண்டுபுரிபவர் என்றதாம்; அச்செயல், மேல் (4002) உரைக்கப்படும்.
 
     அதிபத்தர் - காரணப் பெயர்; நிகழ்தலாவது அப்பெயர்க் காரணத்துக் கேற்றபடி
ஒழுக்கத்தாலும் விளங்குதல்.                                           9
 
4001. ஆங்க வன்பர்தா நுளையர்தந் தலைவரா யவர்கள்
ஏங்கு தெண்டிரைக் கடலிடைப் பலபட வியக்கிப்
பாங்கு சூழ்வலை வளைத்துமீன் படுத்துமுன் குவிக்கும்
ஓங்கு பல்வகை யுலப்பில வுடையரா யுயர்வார்.                        10
 
4002. முட்டின் மீன்கொலைத் தொழில்வளத் தவர்வலை முகந்து
பட்ட மீன்களி லொருதலை மீன்படுந் தோறும்
“நட்ட மாடிய நம்பருக்” கெனநளிர் முந்நீர்
விட்டு வந்தனர் விடாதவன் புடனென்றும் விருப்பால்.                11
 
     4001. (இ-ள்) ஆங்கு...தலைவராய் - அந்த அதிபத்தர் என்னும் அன்பர்
நுளையர்களின் தலைவராகி; அவர்கள்....இயக்கி - அவர்கள் சத்திக்கின்ற தெளிந்த
அலைகளையுடைய கடலில் பலவாறும் தொழில் செய்து; பாங்கு...படுத்து -
பக்கங்களிலே சூழும் வலைகளை வளைத்து வீசி மீன்களைப் பிடித்துக் கொணர்ந்து;
முன்குவிக்கும் ஓங்கு பல்வகை - முன் குவிக்கின்ற உயர்ந்த பலவகை மீன் குவைகள்
அளவில்லாதவற்றையுடையவரா யுயர்ந்தவராகி,                            10
 
     4002. (இ-ள்) முட்டில்....மீன்களில் - குறைதலில்லாத மீன்களைப்படுத்து
அக்கொலைத் தொழிலினது வளத்தையுடைய பரதவர் வலைகளால் வாரி எடுத்தலினாற்
பட்ட மீன்களில்; ஒருதலை மீன் படும் தோறும் - ஒரு தலைமையாகிய மீன்
படுந்தோறும்; நட்டமாடிய நம்பருக்கென - இஃது, ஐந்தொழிலருட் கூத்தாடும்
ஐயருக்காகுக என்று; விடாத அன்புடன் - இடையறாத அன்பினாலே; விருப்பால் -
விருப்பத்துடன்; நளிர் முந்நீர் என்றும் விட்டு வந்தனர் - குளிர்ந்த கடலினிடத்தில்
நாடோறும் விடுத்துவந்தனர்.
 
     இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
 
     4001. (வி-ரை) ஆங்கு - முன் கூறிய அத்தன்மையுடன்; அசையென்பாருமுண்டு.
 
     ஏங்குதல் - சத்தித்தல்; ஒலித்தல். தன் வளங்களைக் கொள்ளையிடுதல் பற்றி
இரங்குதல் என்ற குறிப்புமாம்.
 
     பலபட இயக்குதலாவது - மீன்படுத்தற்றொழிலின் பலவகைகளையும் செய்தல்.
பலபடவு - பல படகுகளை என்று கொண்டு, படகுகளைச் செலுத்தி என்றலுமாம். படகு
- படவு
- என வந்தது; படகியக்கி - என்று பாடங்கொள்வாரு முண்டு.
 
     அவர்கள் - தம் கீழுள்ள அக்குலத்தவராகிய அந்நுளையர்கள்; அவர்கள் -
இயக்கிப் - படுத்துக் குவிக்கும் - பல்குவை
என்க. குவை - மீன் குவியல்கள்
“பரிவுறத் தடிந்த பன்மீன் படர்நெடுங் குன்று செய்வார்” (73).
 
     முன்குவிக்கும் பல்குவை - அவ்வவரும் தமது தலைவர்க்குச் செலுத்தும்
பகுதியாகிய குவியல்கள்.