உயர்வார் - உயர்தல் - உலகநிலைச் செல்வ வளங்களால் உயர்தல். உயர்வாராகி; முற்றெச்சம் - உயர்வார் - விட்டுவந்தனர் - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. உயர்வார் - அவர்தம் குலத்தளவிலன்றிச் சிவனன்பின்றிறத்தில் மேம்படுகின்றாராய் என்ற குறிப்புமுடையது. 10 |
4002. (வி-ரை) முட்டில் மீன் - கடலின் மீன்களுக்கு எப்போதும் குறைவில்லை யாதலின் முட்டில் என்றார். |
கொலைத் தொழில் - மீன்களை நீரினின்றும் வலைப்படுத்துப் பிடித்து எடுத்தலேயின்றி அவற்றைக் கொல்லுதல் இல்லை; அவை தாமாக இறந்துபடுகின்றன; ஆதலின் கொலைப் பழியாகிய பாவச் செயலில்லை யாதலின் அவற்றை உண்ணலாம் என்னும் புத்த சமணக் கொள்கைகளை மறுத்துக் கூறியவாறு; அவற்றை நீரினின்றும் எடுத்தலே கொலை செய்தலாகும் என்பது முன்னரும் “பரிவுறத் தடிந்த பன்மீன்” (73) என்றார். வளம் - செல்வம் “வளம்பட வேண்டாதயார்” (நாலடி.) |
பட்ட - படுத்த; அகப்படுத்த; தலைமீன் - தலைமையாகிய - உயர்ந்த - சிறந்த; தமது பொருள்களுட் சிறந்தவற்றையே சிவனுக்காக்குதல் வேண்டும் என்பது சிவாகம விதி; அரிவாட்டாய நாயனார் வரலாறு முதலியவை காண்க. “விரும்பின கொடுக்கை பரம்பரற்கென்று” (11 - திருமுறை - இடைமருது - மு - கோ - 28). |
நம்பருக்கென - நம்பருக்கு இது ஆகுக என்று நிவேதித்து. |
படுதோறும் - மீன்படுத்த நாட்களிளெல்லாம்; என்றும் - நாடோறும்; விட்டுவந்தனர் - விடாத - முரண் அணி; அன்புடன் - தலைமீன் - விட்டுவந்தனர் - என்று கூட்டுக. |
வலை - வலையினால்; முகந்து - முகக்க; முகத்தலால்; முகத்தல் - பிடித்தல் - கவர்தல். |
| 4003. | வாகு சேர்வலை நாளொன்றின் மீனொன்று வரினும் ஏக நாயகர் தங்கழற் கெனவிடு மியல்பால் ஆகு நாள்களி லனேகநா ளடுத்தொரு மீனே மேக நீர்படி வேலையிற் படவிட்டு வந்தார். 12 |
(இ-ள்) வாகு...வரினும் - ஒழுங்காகிய வலையிலே ஒருநாளில் ஒரு மீனேவந்தாலும்; ஏகநாயகர்.....ஆகுநாள்களில் - முழு முதல்வராகிய இறைவரது திருவடிக்கு என்று விடுகின்ற இயல்பாலாகிய நாட்களில்; அனேக நாள்...பட - அனேக நாட்கள் தொடர்ந்து ஒரு மீனே மேகம் படியும் கடலிற் கிடைக்க; விட்டுவந்தார் - அதனை இறைவனுக்கென்று கடலில் விட்டு இவ்வாறொழுகி வந்தனர். |
(வி-ரை) வாகுசேர் வலை - வாகு - ஒழுங்கு; அழகு; வலை - வலையில்; மீன் ஒன்று - ஒரு மீனே. மாகு - என்பது பாடமாயின் வலையிற் சேர்த்தும் மணிகள் என்க. மாகு - வலையின் பரியாயப் பெயர்களுள் ஒன்றுமாம். தேற்றேகாரம் தொக்கது; பிரிநிலையுமாம். மகாஜாலப் பிரயோகத்தில் வரும்ஞானவலையில் 51 அக்கரங்களையும் அவ்வலையின் மணிகளாகக் கூறப்பட்டிருத்தலும் அறிக - (ந. சிவப்பிரகாசக் குருக்களையா அவர்களின் குறிப்பு). |
இயல்பாலாகு நாள்களில் - இவ்வியல்பால் ஒழுகிய நாளிலே. |
அடுத்த அனேக நாள் ஒரு மீனே - பட - என்க; அடுத்து - தொடர்ச்சியாக; பட - கிடைக்க. |
விட்டு வந்தார் - இறைவருக்காகுக என்று கடலில் மீனை விட்டு இவ்வாறொழுகி வந்தனர். |
| அடுத்தடுத் தொருமீன் - என்பனவும் பாடம். 12 |