பக்கம் எண் :

பெரியபுராணம்285

4004.     மீன்வி லைப்பெரு குணவினின் மிகுபெருஞ் செல்வந்
தான்ம றுத்தலி லுணவின்றி யருங்கிளை சாம்பும்
பான்மை பற்றியும் வருந்திலர்; பட்டமீ னொன்று
மான்ம றிக்கரத் தவர்கழற் கெனவிட்டு மகிழ்ந்தார்.
         13
 
     (இ-ள்) மீன்...மறுத்தலின் - மீன் விலைப்படுத்தலினால் பெருகும் உணவுப் பண்டங்களால் மிக்க பெருஞ் செல்வம் இவ்வாறு மறுக்கப்பட்டமையால்; உணவின்றி....வருந்திலர் - உணவில்லாமல் தமது அரிய கிளைஞர்கள் பசியால் வருந்துகின்ற தன்மை பற்றியும் வருந்திலர்; பட்ட....மகிழ்ந்தார் - வலையிற்படுத்ததொரு மீனையும் மான்மறியினைக் கரத்தில் ஏந்திய இறைவரது திருவடிக்கு என விட்டு மகிழ்ந்தனர்.
 
     (வி-ரை) மீன்....செல்வம் - மீன்விற்பதனால் மிக்க உணவுப் பொருள்கள் தேடுதற்காகிய பெருஞ் செல்வம்; அருங்கிளை உணவின்றிச் சாம்பும் பான்மை பற்றியும் வருந்திலர் - என்க.
 
     அருங்கிளை - மனைவி மக்கள் முதலிய சுற்றத்தார்கள். சாம்புதல் - பசியினால் கண்குழிந்து மயங்குதல்; பற்றியும் - உம்மை - உயர்வு சிறப்பு. குங்கிலியக் கலயநாயனார் சரிதம் (838) பார்க்க. கிளை - மரத்தின் கிளைபோலச் சூழ்ந்த சுற்றத்தார்.
 
     மகிழ்ந்தார் - வருந்தாமை மாத்திரையே யன்றி மகிழ்ச்சியினையும் அடைந்தார்.
 
     பட்ட - படுத்த - பிடித்த.
 
     கழற்கு என - கழற்கு ஆக என்று சொல்லி; “சென்று பொற்கழல் சேர்கென”
(4008) மான்மறி - மான்கன்று.                                     13
4005. சால நாள்களிப் படிவரத் தாமுண வயர்த்துக்
கோல மேனியுந் தளரவுந் தந்தொழில் குறையாச்
சீல மேதலை நின்றவர் தந்திறந் தெரிந்தே
ஆல முண்டவர் தொண்டரன் பெனுமமு துண்பார்,              14
 
4006.     ஆன நாளொன்றி லவ்வொரு மீனுமங் கொழித்துத்
தூநி றப்பசுங் கனகநற் சுடர்நவ மணியால்
மீனு றுப்புற வமைத்துல கடங்கலும் விலையாம்
பான்மை யற்புதப் படியதொன்
றிடுவலைப் படுத்தார்.          15
 
     4005. (இ-ள்) சால..வர - அனேக நாட்களில் இப்படி வர; தாம்...தளரவும் - தாம்
உணவு மறந்து வாடி தமது அழகிய திருமேனியும் தளர்ச்சி யடையவும்; தந்தொழில்
குறைய.....தெரிந்தே - தமது திருத்தொண்டினின்றும் குறைவுபடாத அவ்வொழுக்கத்திலே
சலியாது ஒழுகியவரது திறத்தினைத் தெரிந்தே; ஆலம்....உண்பார் - விடத்தினை
உண்ட இறைவர் இத்திருத் தொண்டரது அன்பு என்கின்ற திருவமுதத்தினை
உண்பாராகி.                                                    14
 
     4006. (இ-ள்) ஆன....ஒழித்து - முன்கூறியவாறு ஆகிய நாள் ஒன்றிலே அந்த
ஒரு மீனும் அங்கு அகப்படாதொழியச் செய்து; தூய...அமைத்து - தூய நிறமுடைய
பசும் பொன்னாலும் ஒளியுடைய நவமணிகளாலும் மீன் உறுப்புக்கள் பொருந்தும்படி
அமைத்து; உலகடங்கலும்.....ஒன்று - உலகங்களெல்லாம் விலை