உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
44. கலிக்கம்ப நாயனார் புராணம் |
தொகை |
| “கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் (கலியன் கழற்சத்தி வரிஞ்சையர்கோன்) அடியார்க்கு மடியேன்” | |
- திருத்தொண்டத் தொகை (7) |
வகை |
| “பொய்யைக் கடிந்துநம் புண்ணியர்க் காட்பட்டுத் தன்னடியான் சைவத் திருவுரு வாய்வரத் தானவன் றாள்கழுவ வையத் தவர்முன்பு வெள்கிநீர் வாரா விட, மனைவி கையைத் தடிந்தவன் பெண்ணா கடத்துக் கலிக்கம்பனே” | |
- திருத்தொண்டர் திருவந்தாதி - (53) |
விரி |
4012. | உரிமை யொழுக்கந் தலைநின்ற வுயர்தொன் மரபி னீடுமனைத் தரும நெறியால் வாழ்குடிக டழைத்து வளரும் தன்மையதாய் வருமஞ் சுறையு மலர்ச்சோலை மருங்கு சூழ்ந்த வளம்புறவிற் பெருமை யுலகு பெறவிளங்கு மேல்பாற் பெண்ணா கடமூதூர். 1 |
புராணம்; இனி, ஆசிரியர், நிறுத்த முறையானே, எட்டாவது பொய்யடிமையில்லாத புலவர் சருக்கத்துள், ஐந்தாவது கலிக்கம்ப நாயனார் புராணங் கூறத்தொடங்குகின்றார். கலிக்கம்ப நாயனாரது சரித வரலாறும் பண்பும் கூறும்பகுதி. |
தொகை: மனைவியினது கையினைத் தடிந்த, வரிவில் ஏந்திய கலிக்கம்ப நாயனாரின் அடியார்க்கும் நான் அடியேனாவேன். |
கைதடிந்த - மனைவியினது கையினை வெட்டிய; மனைவியினது என்பது சரித வரலாற்றினின்றும், வகைநூல் விரிநூல்களினின்றும் வருவிக்கப்பட்டது. வரிசிலையான் - விற்பிடித்த வீரனாகிய; வரிசிலை - வரிந்து கட்டப்பட்ட வில்லை. |
வகை: பொய்யை.....ஆட்பட்டு - பொய்யினை நீக்கி நமது புண்ணியராகிய சிவபெருமானுக்கு ஆளாகி; தன்னடியான்...கழுவ - தமது அடியவன் சைவ தவவேடந்தாங்கி வரத் தாம் அவரது கால்களைக் கழுவுதற்கு; வையத்தவர்.... நீர் வாராவிட - உலகியல் நிலையின் உலகமக்களின் முன்னே வெள்கி மனைவி நீர் வார்க்காது விட; மனைவி ....தடிந்தவன் - மனைவியினது கையைத் தடிந்தவர்; பெண்ணாகடத்துக் கலிக்கம்பனே - பெண்ணாகடத்தில் வாழும் கலிக்கம்பரே. யாவர். |