பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்298

     வெள்கிநீர் வாரா - தொழித்தாள் “வெள்கிநீர் வாரா விட ” வகை நூல்.
 

     வாளை வாங்கி - வாளை உருவி; கரகம் வாங்கி - மனைவியார் கையில்
இருந்த கரகத்தினைத்தாம் வாங்கிவைத்து; கரகம் அடியார்க்கு உதவும் புனித
நீருடைமையால், அதனுடனே தண்டித்தல் தகாதென்று, அதனைத்தாம் வாங்கி நீக்கி
என்க. அரசாங்க அடையாளக் குறிகளுடையாரைத் தண்டிக்க நேரின், இந்நாளினும்
அவ்வடையாளங்களை அகற்றி மாற்றிப் பின்னரே தண்டம் வகுக்கும் நீதிமுறையும்
மரபும் காண்க.
 

     கைதறித்து - நீர்வார்க்காது முட்டுப்பாடு செய்த குற்றம் செய்தது கையாதலின்
அதனைத் தடிந்தார் என்க. இவ்வரிய செயலே செயற்கரிய செயலாய்ப் பேறு
தந்ததனால் “கைதடிந்த வரிசிலையான்” என்று இதனையே தொகைநூலுள்
எடுத்தோதிப் போற்றுதல் காண்க.
 
     கரக.....விளக்கினார் - மனைவியார் செய்யத் தவறிய நிலையில் அதனைத்
தாமே செய்து திருத்தொண்டினை நிறைவாக்கினார் என்க.
 
     தறித்தக் கரக - கரகம் பிடித்தகை - என்பனவும் பாடங்கள்.          8
 
4020.    விளக்கி யமுது செய்வதற்கு வேண்டு வனதா மேசெய்து
துளக்கில் சிந்தை யுடன்றொண்டர் தம்மை யமுது செய்வித்தார்
அளப்பில் பெருமை யவர்பின்னு மடுத்த தொண்டின் வழிநின்று
களத்தி னஞ்ச மணிந்தவர்தா ணிழற்கீ ழடியா ருடன்கலந்தார்.       9
 
     (இ-ள்) விளக்கி.....செய்து - (முன்கூறியவாறு அடியாரது திருவடியைத்தாமே)
விளக்கிய பின்னர் அவர் அமுது செய்வதற்கு வேண்டிய ஏனைய செயல்களையெல்லாம்
தாமே செய்து; துளக்கில்...செய்வித்தார் - அசைதல் இல்லாத மனநிலையுடன்
அத்தொண்டரைத் திருவமுது செய்வித்தார்; அளப்பில்......நெறிநின்று - அளவற்ற
பெருமையினை உடைய அவர் அதன்பின்னும் அடுத்த திருத்தொண்டின் வழியிலே
வழுவாமல் ஒழுகி; களத்தில்.....கலந்தார் - கண்டத்தே விடத்தினை வைத்தருளிய
இறைவரது திருவடி நிழற்கீழே அடியார்களுடன் கலந்து மீளாநெறியில் அமர்ந்தனர்.
 
     (வி-ரை) விளக்கி - முன்கூறியவாறு அடியவரது திருவடியை விளக்கி.
 
     வேண்டுவன - பரிகலந்திருத்தல், அமுது படைத்தல், முதலிய எல்லாச்
செயல்களையும்;
 
     தாமே - மனைவியார் கைதடியப்பட்டு ஒதுக்கப்பட்டாராதலின் தாமே செய்தனர்
என்பதாம். துளங்கல் - தளர்தல் - சலித்தல்.
 
     துளக்கில் சிந்தையுடன் - முன்னே நிகழ்ந்த செயலைப் பற்றிச் சிறிதும் மனம்
அசையாதபடி; “சுரும்பமருங் குழன்மடவார் கடைக்க ணோக்கிற் றுளங்காத
சிந்தையராய்த் துறந் தோருள்ளப், பெரும்பயனை” (தேவா - தாண் - கோயில் - 7);
“அளவில்லாத பெருமையராகிய....அடியார்” (5) பார்க்க.
 
     பின்னும் - அந்நிகழ்ச்சியின் பின்னரும் பலகாலம்.
 
     அடுத்த தொண்டின் வழி - தமக்கேற்ற திருத்தொண்டின் வழி; “அடித்தொண்டு
பற்றி” (4013); சிவன் திருத்தொண்டே உயிர்களுக்கு அடுத்தது; ஏனையவெல்லாம்
அடாதன என்ற குறிப்புமாம்.
 
     தாணிழற்கீழ் அடியாருடன் கலந்தார் - நாயனார் பெற்ற வீடுபேற்றின் நிலை;
“சிவலோக நண்ணி அடியார் பாங்குறத்தலை யளித்தார்” (4010).

9