பக்கம் எண் :

பெரியபுராணம்317

4040. வரிஞ்சை யூரினில் வாய்மைவே ளாண்குலம்
பெருஞ்சி றப்புப் பெறப்பிறப் பெய்தினார்

விரிஞ்சன் மான்முதல் விண்ணவ ரெண்ணவும்
அருஞ்சி லம்பணி சேவடிக் காட்செய்வார்.                    2
 

4041.

அத்த ராகிய வங்கண ரன்பரை
இத்த லத்தி லிகழ்ந்தியம் பும்முரை
வைத்த நாவை வலித்தரி சத்தியார்;
சத்தி யாரெனு நாமந் தரித்துளார்.                           3
 

     4040. (இ-ள்) வரிஞ்சையூரினில்...எய்தினார் - வரிஞ்சையூரிலே வாய்மைப் பண்புடைய வேளாளர் குலமானது பெரிய சிறப்பினையடையும்படி அதனுள் வந்தவதரித்தார்; விரிஞ்சன்.....செய்வார் - பிரமதேவன் முதலிய தேவர்களும் எண்ணுதற்கும் அரிய சிலம்பினை அணிந்த சிவபெருமானது திருவடிக்கு ஆட்செய்வாராகி;                                              2
 

     4041. (இ-ள்) அத்தராகிய......நாவை - அத்தராகிய சிவபெருமானது அடியவர்களை இவ்வுலகில் இகழ்ந்து சொல்லும் சொல்லைக் கொண்ட நாவினை; வலித்தரி சத்தியார் -வலிசெய்து அரியும் சத்தி வாய்ந்தவர்; சத்தியார் எனும்.... தரித்துளார் - சத்தியார் என்னும் திருநாமத்தினைத் தாங்கியவர்.     3
                         
 

     இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டுரைக்க
நின்றன.
 
     4040. (வி-ரை) வாய்மை வேளாண் குலம் - வாய்மை - இயற்கை
யடைமொழி. வேளாண் குலத்தின் பல சிறப்பியல்புகளுள்ளும் சிறந்த வாய்மையின்
தன்மை பற்றியே காட்டுதல் ஆசிரியர் மரபு. அதுவே எல்லாவற்றுள்ளும் சிறந்து
இறைவரது சத்தாம் தன்மை பெறுவிக்கும் பண்புடைமையால்; “நம்பு வாய்மையின் நீடு
சூத்திர நற்குலம்” (440); “உயிரையும்.......சொற்ற மெய்மையும் தூக்கியச் சொல்லையே
காக்கப், பெற்ற மேன்மை” (1080).
 
     குலம் பெருஞ் சிறப்புப் பெற - வாய்மையின் விளங்கிய வேளாண் குலம்
தன்னியல்பிற் சிறப்புடையது; இவர் அதில் வந்தமையால் மேலும் பெரிய சிறப்புப்
பெற்றது என்பார் பெருஞ் சிறப்புப் பெற என்றார்.
 
     வாய்மை - வாயின் தன்மை; வாயினுக்குரிய பண்பு வாய்மை; அஃதாவது
சிவனையும் அடியாரையும் வாழ்த்துதல்; “வாயே வாழ்த்து கண்டாய்” (தேவா), “வாழ்த்த
வாயும்” (தேவா.) அப்பண்பினைத் தாம் பெற்றதுமன்றிப் பிறரையும் அவ்வாறே
பெறும்படி நிற்கவைத்த பண்புடைய இந்நாயனாரது சரிதவரலாற்றுக் குறிப்புப்பெற
இத்தன்மையாற் கூறினார். உண்மை (உள்ளத்தின் தன்மை). மெய்ம்மை மெய் (உடல்)
பின் றன்மை; வாய்மை - வாயின் தன்மை என மனம் வாக்குக் காயம் என்ற
இம்மூன்றும் சிவன் (சத்து) வழியே செலுத்தற்குரியன என்று காணும் வகையில் நிற்பது
இப்பண்பொன்றே யாதலின் இஃது தனிச் சிறப்புடையது.
 
     எண்ணவும் அரும் - நினைத்தற்கு மரிய, உம்மை சிறப்பு. எண்ணவும்
அரும்அடி என்க.
 
     4041. (வி-ரை) அத்தர் - கருத்தர்; தலைவர்.