| ஆற்றினர் - புரிந்தனர்; ஆற்றுதல் - செய்தல். |
| ஆற்றினர் - ஆற்றினர் - சொற்பின் வருநிலை என்னும் சொல்லணி. |
| 5 |
| 4044. | ஐய மின்றி யரிய திருப்பணி மெய்யி னாற்செய்த வீரத் திருத்தொண்டர் வைய முய்ய மணிமன்று ளாடுவார் செய்ய பாதத் திருநிழல் சேர்ந்தனர். 6 |
(இ-ள்) ஐயமின்றி...........திருத்தொண்டர் - சந்தேகமில்லாமல் அரியதாகிய திருத்தொண்டினை மெய்யினாலே செய்த வீரத்தன்மை, பொருந்திய திருத்தொண்டராகிய சத்தியார்; வையம்.......சேர்ந்தனர் - உலகம் உய்யும் பொருட்டு அழகிய திருவம்பலத்தில் ஆடுவாரது செம்மைதரும் பாதத் திருநிழலிற் சேர்ந்தனர். |
(வி-ரை) ஐயமின்றி - ஐயமாவது, மக்களின் நாவினை அரிந்து வலி செய்தல் தருமமாமோ என்ற ஐயமில்லாமல்; சிவாபராதத்தினைப் போக்குதலால் இது எவ்விதமாகிய சந்தேகத்திற்கு மிடமில்லாமல் சிவப்பணியேயாகும் என்ற துணிவுடன். அரிய - பிறராற் செய்தற்கரிய; “செயற்கரிய செய்வார் பெரியர்” (குறள்). இஃது செயற்கரியபணி என்றே எவரும் நிச்சயமாகக்கொள்ளும் என்றலுமாம். |
மெய்யினாற் செய்த - மெய் - உண்மை, வாய்மை, உண்மையன்பு; மெய்யினால் - உடலின் செயலாக என்றலுமாம். மெய்யால்; இன் சாரியை |
வீரம் - “ஆண்மைத் திருப்பணி” (4043); இத்திருப்பணிக்கு மிக்க வீரம் வேண்டற்பாலதாம். |
வையமுய்ய - “வாராருங் கடல்புடைசூழ் வையமெலா மீடேற , ஏராரு மணி மன்று ளெடுத்த திருவடி” (புராண வரலாறு). திருஅம்பலத்தின்கண் இறைவர் ஐந்தொழிற் கூத்தியற்றுதல் உலகமுய்தற் பொருட்டேயாம் என்பது. |
செய்ய - செம்மைதரும்; செய்ய - தாமரை மலர்போலச் சிவந்த என்றலுமாம். |
| 6 |
| 4045. | நாய னார்தொண் டரைநலங் கூறலார் சாய நாவரி சத்தியார் தாள்பணிந் தாய மாதவத் தையடி கள்ளெனுந் தூய காடவர் தந்திறஞ் சொல்லுவாம். 7 |
(இ-ள்) நாயனார்...பணிந்து -சிவபெருமான் திருத்தொண்டர்களை நன்மை சொல்லாதவர்கள் வீழ அவர்களது நாவினை அரியும் சத்தி நாயனாரது திருவடிகளைப் பணிந்து; (அத்துணையாலே) ஆய..சொல்லுவாம் -சிவநெறி ஆகிய மாதவத்தையுடைய ஐயடிகள் என்னும் தூய காடவரது அடிமைத் திறத்தினைச் சொல்லுவோம். |
(வி-ரை) நாயனார் - தலைவர்; முழுமுதற் தலைவராதலின் சிவபெருமானுக்கே உரிய திருநாமம். “தில்லைநாயனார்” (திருவிசை - சேதி) நாயனாரையும் தொண்டர்களையும் என்றலுமாம். |
நலங் கூறலார் - இகழ்ந்து கூறுவார்; சொல்லவேண்டிய நன்மை கூறாமையே இகழ்ச்சியாவது என்றலுமாம். “இதமுயிர்க்குறுதி செய்தல் அகிதமற்றது செய்யாமை” (சித்தி - 2- 13). |