பக்கம் எண் :

பெரியபுராணம்323

     தொகை: ஐயடிகள் காடவர்கோன் நாயனாரது அடியார்க்கும் நான்
அடியேனாவேன்.
 

     பேரும் மரபும் தொகைநூல் தொகுத்துக் கூறியது.
 

     வகை: சத்தி.....மொழிந்து - ஞான சத்தியாகிய வேலாயுதத்தை ஏந்திய வலிய
கையினையுடைய குமாரக் கடவுளின் தாதையாராகிய இறைவரது பதிகள் எங்கும்
முத்திப் பதத்தினையே குறிக்கோளாகக் கொண்ட ஒவ்வோர் வெண்பாப் பாடி;
முடியரசாம்.......என்னும் - அரனுக்காக ஐயமேற்றல், முடிசூடிய அரசராகும்
அத்தன்மைக்கு மும்மையாலும் நன்றாகும் என்று எடுத்துக்கூறிய; ஐயடிகளாகின்ற
பல்லவனே - ஐயடிகள் என்னும் பெயரினையுடைய பல்லவரே; பத்திக்கடல் - பத்தியின்
கடல் போன்றவர்.
 

     சத்தி - குமரக்கடவுளின் ஞானசத்தி எனப்படும் வேல். தானமெல்லாம் -
பதிகள் பலவற்றிலும்; முத்திப்பதம் - முத்தி காதலிக்கும் குறிப்புடைய; க்ஷேத்திர
வெண்பா என்னும் இந்நூலில் வெண்பாத்தோறும் யாக்கை நிலையாமையினைப்
பலவாறும் இடித்து எடுத்துக் கூறி, வீடுபேற்றின் சாதனமாகிய சிவவழிபாட்டினை
வற்புறுத்தியுள்ள நிலை குறித்தது.
 
     ஓரொர் வெண்பா - ஒரு பதிக்கு ஒரு வெண்பாவாக; “முடியரசாம்......ஏற்றல்”
என்னும் - இது அந்நூலின் 10 - வது வெண்பாவின் பொருள். அதன் பெருமையும்,
ஓரரசர் சொல்லாதலும், இந்நாயனாரது அடிமைப் பண்பின் மேன்மையும் ஒருங்கே
விளங்கவுள்ளது, அவ்வெண்பாவாதலின் அதனை ஈண்டெடுத்து விதந்தோதினார்.
 
 
“படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலா மாண்ட
முடியரசர் செல்வத்து மும்மைத் - தொடியிலங்கு
தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்
டோடேந்தி யுண்ப துறும்”                (க்ஷேத்திர வெண்பா - 10)
 
என்பது அத்திருப்பாட்டு, அதற்கு என்பது எதுகை நோக்கி அத்திற்கு என வந்தது.
 
     அரற்காய் ஐயம் ஏற்றல் - அரற்காய் - அரனுக்குத் தொண்டுபட்டு அதற்காக
-அதுவே பற்றாக என்க. அரற்காய் என்பது பிறிதினியல்பு நீக்கிய விசேடணம்; இரத்தல்
இழிவு என்பது நீதியாதலின் ஐயமேற்றுண்ணல் எவையும் விரும்பத் தக்கனவல்ல;
அவை இகழ்ச்சியே; ஆனால் அரனுக்குத் தொண்டுபட்டு ஐயமேற்றல் முடியரசினும்
மும்மைச் சிறப்புடையது என்பதாம்.
 
     கடல் - கடல் போன்றவரைக் கடல் என்றார்; பெயரும் பண்பும் வரலாறும்
வகைநூல் வகுத்துரைத்தது.
 
     விரி: 4046. (இ-ள்) வையநிகழ்.....தோன்றி - உலகில் புகழ் சிறந்து அரசியற்றும்
பல்லவர்களது மரபிலே முறைமையாக அவதரித்து; வெய்ய.....அடக்கி - கொடிய
வறுமையும் பகையும் அவற்றால் வரும் துன்பங்களும் நீங்கும்படி அடக்கி;
செய்ய....அரசளிப்பார் - சிவந்த சடையினையுடைய இறைவரது சைவத்
திருநெறியின்வழியே நின்று அரசாட்சி செய்வாராகி; ஐயடிகள்.....செங்கோலார் -
ஐயடிகள் காடவர்கோன் என்னும் அரசர் அரசநீதி முறையினாலே உலகமெல்லாம்
தம்மடியின்கீழ் வாழும்படி செய்யும் செங்கோ லாணையினை யுடையராய்;        1