பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்328

பின்; பரமர்....மருங்கணைந்தார் - இறைவரது திருவடியின கீழே சிவனுலகத்திலே
வழிவழி நிற்கும் அன்பர்களுடன் சார அணைந்தனர்; கன்னி...ஐயடிகளார் -
வெல்லப்படாத மதில் சூழ்ந்த காஞ்சிபுரத்தில் அரசியற்றிய ஐயடிகள் காடவர்கோன்
நாயனார்.
 

     (வி-ரை) அரனடியார்.....பணி - பதிகள் தோறும் பரமனைப் பணிந்து
வெண்பாப் பாடித் திருத்தொண்டு செய்ததனோடு அரன் அடியார்கட் கிசைந்த
பணிகளையும், முன்பாட்டில் அரன்பணியும், இப்பாட்டில் அடியார் பணியும் கூறினார்.
 

     மன்னு சிவலோகம் - மன்னுதல் - அழியாது நிலைபெற்றிருத்தல்; வழிஅன்பர்
- சிவநெறியில் வழிவழி வந்த அடியவர்கள். சிவலோகத்துவழி - என்றலுமாம்
 

     மருங்கு அணைந்தார் - அன்பர்களுடன் கூடக் கலந்து அணைந்தனர்;
“அடியார் நடுவு ளிருக்கும் அருளைப் புரியாய்” (திருவா). மருங்கு - அருகில்.
 
     காஞ்சிக் காடவர் - இவர் காஞ்சிபுரத்தைத் தலை நகராகக்கொண்டு ஆண்டவர்;
காடவர் - சோழர்களின் ஒரு குலத்தினர் பெயர்; சோழருட் சில மரபுடையோர்
ஆற்காட்டையும் ஆண்டமையால் இப்பெயர் பெற்றனர் என்பர். கன்னி மதில் -அழியாத மதில்; காஞ்சியின் மதில் பழம் பாடல்களிலும் சிறப்பிக்கப்பட்ட பழமையையும்
பெருமையையும் உடையது.

     7
 

4053. பையரவ மணியார மணிந்தார்க்குப் பாவணிந்த
ஐயடிகள் காடவனா ரடியிணைத்தா மரைவணங்கிக்
கையணிமான் மழுவுடையார் கழல்பணிசிந் தனையுடைய
செய்தவத்துக் கணம்புல்லர் திருத்தொண்டு விரித்துரைப்பாம்.           8
 
     (இ-ள்) பையரவம்...வணங்கி - நச்சுப் பையினையுடைய பாம்பினை
மணிமாலையாக அணிந்த இறைவர்க்கு வெண்பா அணிந்த ஐயடிகள் காடவர்கோன்
நாயனாரது திருவடியிணைத் தாமரைகளை வணங்கி, (அத்துணை கொண்டு);
கையணி...விரித்து உரைப்பாம் - கையில் அணிகொண்ட மழுவினை ஏந்திய இறைவரது
திருவடியைப் பணியும் சிந்தனையினையுடைய செய்தவம் பொருந்திய கணம்புல்ல
நாயனாரது திருத்தொண்டினை விரித்துச் சொல்வோம்.
 
     (வி-ரை) இது கவிக்கூற்று; ஆசிரியர், தமது மரபுப்படி இதுவரை கூறிவந்த
புராணத்தை முடித்துக் காட்டி, மேல்வரும் புராணத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார்.
இதன்மேல் வருவது சருக்க முடிவில் கூறும் நம்பிகளது துதி.
 
     பை - நச்சுப்பை; அரவமாகிய மணிமாலை என்றலுமாம்; மணியையுடைய மாலை.
மணி - நாகமணி. ஆரம் - ஆத்தி என்று கொண்டு, அரவத்தினையும் ஆத்தியையும்
அணிந்த என்றலுமாம்.
 
     பா - வெண்பாவாகிய மென்மலர். அரவ மணிந்தார்க்குப் பா அணிந்து -
விடமுடையஅரவத்தை வேண்டா என்று விலக்கிப் பா அணிந்தார் போல; “அரவ
மொன்று .....பூணாதே - பொன்னார மற்றொன்று பூண்” (27 - அற் - அந்,) என்ற
அம்மையார் திருவாக்குக் கருதுக.
 
     கையணி மழுவுடையார் - கையில் அழகிய மழுவினை ஏந்தியவர்; அணி -
அழகிய; மழுவுக்கு அழகாவது சிவனுக்குரிய சிறப்புக் கருவியாகச் செம்மைதரும்
இயல்பு.
 
     சிந்தனையுடைய தவம் - செய்தவம் - என்க. சிந்தனை மாறாது அருமையாகச்
செய்த தவம் நிரம்பப் பெற்ற.