பக்கம் எண் :

பெரியபுராணம்329

     சரிதச் சுருக்கம்: ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம் :-
இப்பெயருடைய நாயனார் சோழ மரபில் பல்லவர் குலத்தில் அவதரித்துக்
காஞ்சிபுரத்திலே அரசாண்டவர்; உலகில் வறுமையும் பகையும் துன்பமு மின்றி, எல்லா
உயிர்களும் ஒருங்கு நன்கு வாழவேண்டு மென்னும் கொள்கை யுடையவராய்
நீதியினால் பகைகளை அடக்கிக் சைவத் திருநெறியில் அரசளித்தார். இவர் வடமொழி
தென்றமிழ் என்ற. இரண்டிலும் கலைஞானங்களிலும் வல்லவர்.
 

     அரசாட்சி துன்பந் தருவதாகும் என்று துணிந்து, அதனை இகழ்ந்து, தமது
மகனை முடி சூட்டினர். தாம் தில்லைத் திருச்சிற்றம்பலம் முதலிய சிவதலங்களிற்
சென்றிறைஞ்சித் தலங்கள் தோறும் ஓரோர் வெண்பாப்பாடி வழிபட்டு வந்தனர்; தமக்கு
ஏற்றபணிகளையும் செய்தனர்; அடியார்கள் இன்பமுற அடியவர்களின் வழிபாடும்
செய்தனர். இவ்வாறு பணிசெய்து சிவலோகத்தில் வழியன்பர் மரூங்கணைந்தார்.
 

     குறிப்பு : இவர் பாடியருளிய வெண்பாக்கள் யாவும் யாக்கை நிலையாமையை
வற்புறுத்தி இறைவரைத் தலந்தோறும் சென்று வழிபட்டு முத்திக்கு வழிதேடும்
கருத்தினை உபதேசிக்கும் வகையில் அமைந்துள்ளன; இவை க்ஷேத்திரத் திருவெண்பா
என்ற பெயரால் தொகுத்து வகுக்கப்பட்டுப் பதினோராந் திருமுறையினுள்
நம்பியாண்டார் நம்பிகளாற் சேர்க்கப்பட்டுள்ளன.
 

     கற்பனை ;-1. கலியும், (வறுமை - பிணி முதலியன) பகையும் மிகை யொழியும்
வகையடக்கி அரசு ஆளுதலும், எல்லா உயிர்களும் இன்பமுற வாழ்தலும் நீதியரசர்
மேற்கொள்ளும் குறிக்கோள்களாம்.
 
     2. பிறவாகிய பகைப்புலங்களை அடிப்படுத்தும் செயல் நீதிமுறையில்
மேற்கொள்ளத்தக்கது.
 

     3. சைவத் திருநெறியால் அரசளித்தல் சிறப்புடையது.
 

     4. சிறந்த அரசர்கள் உலகில் தரும நெறி தழைக்கவும், அதனோடு சைவமும்
வைதிகத் துறையும் விளங்கவும் அரசளிப்பர்.
 
     5. அரசாட்சி இன்னல் தருவது என்று இகழ்ந்து அதனைத் துறந்து சிவன்
பணியிற் செல்லும் அரசர்களையுடைய மேன்மை தமிழ்நாட்டுக்கே உரியது.
 
     6. வடமொழி தென்மொழிகளிலும் கலைகளிலும் வல்லராய்த் தெய்வப் பெரும்
புலமை பெற்றிருத்தல் அரசர்க்குப் பெருஞ் சிறப்பு. அம்மேன்மையும் அரசர்களுள்
தமிழரசர்க்கே யுரியது. கழறிற்றறிவார் நாயனார் வரலாறும், இளங்கோவடிகள் வரலாறும்,
புறநானூற்றில் பாடினோராகிய அரசர் வரலாறுகளும் காண்க.
 
     7. சிவதல யாத்திரை செய்தலும், மற்றும் பணி செய்தலும் , அடியார் மகிழ
வழிபடுதலும் முத்தி சாதனங்களாம்.
 
     தலவிசேடம்;- காஞ்சிபுரம் - முன் உரைக்கப்பட்டது; II - பக் 1547;
திருமேற்றளி III - பக்கம் 550 பார்க்க. திருக்கச்சி மேற்றளி இந்நாயனாரது வழிபடு
தலம் என்பர்.
 

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம் முற்றும்.