| உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
| ஐயடிகள் காடவர்கோன் நாயனார் |
| அருளிச் செய்த |
| க்ஷேத்திரத் திருவெண்பா _ _ _ _ _ |
| நூல் |
1. திருத் தில்லைச் சிற்றம்பலம் |
| | ஓடுகின்ற நீர்மை யொழிதலுமே யுற்றாருங் கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று - நாடுகின்ற நல்லச்சிற் றம்பலமே நண்ணாமு னன்னெஞ்சே தில்லைச்சிற் றம்பலமே சேர். 1 | |
(இதன் பொருள்) ஓடுகின்ற....கோடுகின்றார் - சரித்து இயங்குகின்ற தன்மை நீங்கிய உடனே, முன் உறவினராயினவர்களும் மனம் திரும்பி வேறுபடுகின்றார்கள்; மூப்பும் குறுகிற்று - கிழத்தன்மையும் பொருந்திற்று; நன்நெஞ்சே! - (ஆதலால்) எனது நல்ல நெஞ்சமே!; நாடுகின்ற....நண்ணாமுன் - நாடி எடுக்கும் நல்ல அச்சுக் கல்லில் இடித்து அமைக்கப்படும் தம்பலத்தினைப் பொருந்துவதன் முன்னரே; தில்லை....சேர் - திருத்தில்லையின் கண்ணே உள்ள திருச்சிற்றம்பலத்தினை அடைவாயாக. |
(விளக்கவுரை) ஓடுகின்ற நீர்மை - ஓடுதல் - இங்கு, இயங்குதல் - சரித்தல் என்ற பொருளில் வந்தது. நீர்மை - தன்மை. அஃதொழிதலாவது நடை ஓய்ந்து இருந்த இடத்துக்கிடத்தலும் இருத்தலுமாகிய நிலை; உற்றாரும் - முன் தமது நெருங்கிய உறவினராயும் நண்பராயும் துணையாயும் பொருந்தினவர்களும்; உம்மை சிறப்பு; கோடுதல் - முகமும் அகமும் சுளிந்து பிறிதுபடுதல்; அச்சில் தம்பலம் நண்ணுதலாவது அச்சில் இடித்து அமைக்கும் தம்பலத்தைப் பொருந்துதல்; பற்கள் கழன்று வீழ்ந்துவிட்டபோது தம்பலத்தை இடித்து அதுக்குதல் வழக்கு: அஃதாவது பற்கழன்று கிழட்டுப் பருவம் பொருந்தல் என்பது பொருள். இனி, இவ்வாறன்றி இதனை, அச்சில் இடித்துச் சேர்த்த தம்பலத்தை வாயினுள் பொருந்தச் செய்தல் பிண அலங்காரத்துள் ஒன்றாக வரும் வழக்குப் பற்றியதாகக்கொண்டு சாவதன்முன் என்றுரைப்பதுமாம். நல் - அச்சு - இற்று - அம்பலம் நண்ணாமுன் - என்று பிரித்து, அச்சு உடல் என்றும், அம்பலம் - மயானம் என்றும் உரைப்பதுமாம். மேல்வரும் 6- வது பாட்டும், “மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி மயானத்தி லிடுவதன் முன்” என்ற கருத்தும் காண்க. தில்லைச் சிற்றம்பலமே சேர் - தில்லையின்கண் திருச்சிற்றம்பலத்தின் நடம் செய்யும் இறைவரை அடைக; அடைந்தாயானால் அவர் இறப்பும் பிறப்புமாகிய இன்னல்களினின்றும் நீக்குவர் என்பது கருத்து. நன்னெஞ்சே - சேர் - என்று தமது நெஞ்சுக் குபதேச வகையாகக் கூறியது. அதுவேயாறாக உலகுக்குபதேசித்தபடியுமாம். நன்னெஞ்சே - என்றது நெஞ்சினை - உபதே |