கூற்றுவநாயனார் நாளொரு மேனியும் பொழுது ஒரு வண்ணமுமாக வளர்ந்து, ஐந்து வயதில் பள்ளிக்குச் சென்று, உலகநூல் - அறிவு நூல்களைக் கற்றுப், பல கலைகளிலும் வல்லவரானார். இவர் குறுநில மன்னர் ஆனதால், அரசுரிமை உள்ளவர்கள் பழகவேண்டிய யானையேற்றம், குதிரையேற்றம், வாட்போர், மற்போர், வேற்வோர் முதலிய படைப்பயிற்சிகளிலும் பயின்று அவைகளில் சிறந்து விளங்கினார். |
சிறப்பாக இவர் வேலாயுதத்தைத் தாங்கிப் போர் புரிவதில் இணையற்றவராக இருந்தார். இதனை:- |
"ஆர்கொண்ட வேற்கூற்றன்" - என்று சுந்தரரும், |
"கோதை நெடுவேற் களப்பாள னாகிய கூற்றுவனே" |
என்று நம்பியாண்டார் நம்பிகளும் கூறுவது கொண்டு அறியலாம். வில்லுக்கு ஓரியும், வாளுக்குப் பெரும் பெயர் வழுதியும்போல், வேலுக்குக் களப்பாளனாகிய கூற்றுவ நாயனார் என்க. |
| 7. கூற்றுவ நாயனார் அரசு கட்டில் ஏறியது |
கூற்றுவ நாயனார் வயது வந்து, தமது பெற்றோர்களுக்குப்பின் கி.பி. 500ல் அரசுக்கட்டில் ஏறி, ஆட்சி செய்தார். இவர் ஒரு குறுநில மன்னராக வாழ்ந்த சிறப்புப்பற்றி "களந்தைக்கோன்" என்று சுந்தரரும், "ஞாலமெல்லாம் ஒரு கோலின் வைத்தான்" என்று நம்பியாண்டாரும், "களந்தை வேந்தர்" என்று உமாபதி சிவமும், "களந்தை முதல்வனார்....முடி ஒன்று மொழிய அரசர்திரு வெல்லாம் உடையர் ஆயினார்" என்று சேக்கிழாரும் கூறுவார் ஆயினர். |
இவர் அரசு செய்யும் காலத்தில் சிவநாமத்தை எப்போதும் நவின்று கொண்டு, அடியார்களை வணங்கி அமுதூட்டிச் சிவாலயங்கள் தோறும் பல திருப்பணிகள் செய்து, சிவனது திருத்தொண்டில் உறைத்து நின்றார். அதனால், இவருக்குச் சிவனருள் எளிதில் கிடைத்தது. அதனோடு நாடு காவலுக்குரிய கடமை வழுவாது, நாட்டின் நிலைமை கருதி, மாற்றார் மேலுறா வண்ணம், நால்வகைப் படைகளையும் வளம்படுத்தி, மாற்றார் நடுங்கும் வண்ணம் நடந்து வந்தார். இதனை:- "மருங் களிறு, பாய்புரவி, மணித்தேர், படைஞர் முதன்மாற்றார் வெருங் கருவி நான்குநிறை வீரச் செருக்கின் மேலானார்" என்ற சேக்கிழார் திருவாக்கால் அறியலாம். |
| 8. நாட்டின் நிலைமையும் காலமும் |
கூற்றுவநாயனார் பெயர் சுந்தரமூர்த்திகளால் திருத்தொண்டத் தொகையில் கூறப்பட்டிருப்பதால், சுந்தர மூர்த்திகள் காலமாகிய (கி.பி. 694 - கி.பி. 712) கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு கூற்றுவநாயனார் முற்பட்டவர் என்று தெரிகிறது. என்னெனின், முடி அரசர்களாகிய சேர - சோழ - பாண்டியர்கள் வலியற்று இருந்தது கி.பி. ஆறாம் நூற்றாண்டிலேதான். அதனை ஈண்டு விரிக்க வேண்டியதில்லை.1 __________________ |
1 களப்பிரர் படை (வடுகக் கருநாடர்) எடுத்துப் பாண்டி நாட்டை அடிப்படுத்தியாண்ட செய்திகளும் - அவர்கள் தொண்டைநாட்டை வென்று அங்கு அரசராண்ட வேளாளர் - குறுநில மன்னர்களைத் துரத்திய செய்திகளும் - பல்லவர்கள் கிளம்பிப் போர் செய்து ஆட்சி புரிந்த செய்திகளும் பாண்டி நாட்டினின்றும் களப்பிரரைத் |