பக்கம் எண் :

பெரியபுராணம்363


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

48. கணம்புல்ல நாயனார் புராணம்
 

தொகை
 

"கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
கணம்புல்ல நம்பிக்கும் (காரிக்கும்) அடியேன்"

- திருத்தொண்டத் தொகை (8)
 

வகை
 

 
"நன்னக ராய விருக்குவே ளூர்தனி னல்குரவாய்ப்
பொன்னக ராயநற் றில்லை புகுந்து புலீச்சரத்து
மன்னவ ராய வரற்குநற் புல்லால் விளக்கெரித்தான்
கன்னவி றோளெந்தை தந்தை பிரானெங் கணம்புல்லனே"

- திருத்தொண்டர் திருவந்தாதி (58)
 

விரி
 

4055. திருக்கிளர்சீர் மாடங்க டிருந்துபெருங் குடிநெருங்கிப்
பெருக்குவட வெள்ளாற்றுத் தென்கரைப்பாற் பிறங்குபொழில்
வருக்கைநெடுஞ் சுளைபொழிதேன் மடுநிறைத்து வயல்விளைக்கும்
இருக்குவே ளூரென்ப திவ்வுலகில் விளங்குபதி.                    1
 
     புராணம்: இனி, ஆசிரியர், நிறுத்த முறையானே, ஒன்பதாவது கறைக்கண்டன்
சருக்கத்திற் கூறப்படும் அடியார்களின் வரலாறுகள் கூறப்புகுந்து, அவற்றுள், முதலாவது
கணம்புல்ல நாயனாரது புராணம் சொல்லத் தொடங்குகிறார்.
 
     தொகை: விடத்தினை உடைய கண்டராகிய இறைவரது வீரக் கழலணிந்த
திருவடிகளையே தமக்குக் காவலாகக் கொண்டிருந்த கணம்புல்ல நாயனாராகிய
பெரியாருக்கும் (காரி நாயனாருக்கும்) நான் அடியேன்.
 
     கறை - விடம்; நஞ்சு; காப்பு - காவல்; "தண்ணின்ற தாளைத் தலைக்காவல்
முன்வைத்து" (திருமந்) இஃது இந்நாயனாரது அடிமைத் திறத்தின் உறைப்புடைய பண்பு
குறித்தது; அடியே - ஏகாரம் பிரிநிலை; நம்பி - ஆடவரிற் சிறந்தோன்;
ஆண்பாற்சிறப்புப் பெயர்; பெயரும் பண்பும் தொகை நூல் உணர்த்திற்று.
 
     வகை: நன்னகராய.....நல்குரவாய் - தமது பதியாகிய நல்ல நகராகிய இருக்கு
வேளூரில் பணிசெய்து வாழ்ந்த நாளில் நல்குரவு வரப்பெற்று;
பொன்னகராய....எரித்தான் - பொற்பதி எனப்படும் நல்ல தில்லை நகரில் வந்து
அங்குத் திருப்புலீச்சரத் திருக்கோயிலினுள் வீற்றிருந்தருளும் அரசராகிய இறைவருக்கு
நல்ல கணம்