பக்கம் எண் :

பெரியபுராணம்367

பெருஞ் செல்வராயிருந்த இந் நாயனார்க்கு வறுமை வந்து வேற்றிடம் புக
நேர்ந்தபோது அன்பு பெருகிற்று; இஃது உலகியலின் மேம்பட்ட இறைபாலின்
அன்புநிலை.
 

     திருப்புலீச்சரம் - "திருப்புலீச்சுரத்து முன்னர்" (396) என்றதும், ஆண்டுரைத்த
தல வரலாறும் பார்க்க. (I பக்கம் 482); இறைவர் கோயிலில் விளக்கெரிக்கும் பணி
செய்யும் நியமமுடைய இந்நாயனார் அந்நியமமுடித்தற்குத் தில்லையம்பதியில் உள்ள
கோயில்கள் பலவற்றுள்ளும் திருப்புலீச்சரத் திருக்கோயிலைத் தேர்ந்து எடுத்து அங்கு
அப்பணியினைச் செய்தனர் என்க.
 
     இல்லிடை உள்ளன மாறி - வறுமையால் தமது ஊரினின்றும் போதுவார்
அங்கு எஞ்சிய சில பொருள்களைத் தம் சீவனத்துக்காக உடன் கொண்டு
போந்தனராக, அப் பொருள்களையும் விற்று; மாறி - விற்று; பண்டமாற்றாக
விற்றலுமாம். இல்லிடை உள்ளன - முரண் அணிச்சுவைபடக் கூறியது கவிநயம்;
இன்மையின் கண்ணும் உள்ள சிலவற்றை என்பதுமாம். வறுமையிற் செம்மை.
 
     எரித்து - விளக்கெரித்து.                                   4
 
     4059. (வி-ரை) ஆயசெயல் - இல்லிடை உள்ளன மாறி எரிக்கும் செயல்; ஆய்
- முன்கூறிய அவ்வாறு ஆகிய.
 
     மாண்டதற்பின் - செயல்மாறுதலாவது செய்ய வியலாதொழிதல்; மேலும்
மாறுதற்குரிய பொருள்கள் இல்லாமையால் அச் செயலும் ஒழிந்தது என்க.
     அயலவர்பால் இரப்பு அஞ்சி - திருக்குறள் "இரவச்சம்" என்ற அதிகாரத்துட்
கூறியவை ஈண்டுக் கருதற்பாலன; "ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற், கிரப்பி
னிளிவந்த தில்" என்பது முதலியவை காண்க; "இதனால் அறனும் முயன்று
செய்வதல்லது இரந்து செய்யற்க என்பது கூறப்பட்ட"தென்பது பரிமேலழகருரை;
இதனால் எந்தம் பெருமக்கள் தமது முயற்சியான் வரும் பொருளை உட்கொண்ட
மேம்பாடு காணத்தக்கது; கலிய நாயனார் வரலாறும், பிறவும் காண்க. இனி,
இப்பெரியோர்கள், செய்த இச்செயல்களும், மேற்கொண்ட கொள்கைகளும், தாம் உயிர்
வாழ்தற் பொருட்டன்றிச், சிவன் பணி மேற்கொண்ட நிலையில் வருவன என்பதை
உணர்ந்தபோது, இவர்க்கீடாவார் உலகில் வேறிலர் என்பது இனிது விளங்கும்.
 
     காயமுயற்சி - இதுவரை ஏனைப்பொருள்களின் சார்பினையே பற்றிச்செய்த
அறத்தினை, இனித் தம் உடல் முயற்சி துணையாகச் செய்ய மேற்கொண்டனர்;
"செல்வந் தலைநின்ற பயனிது" என முன்னர்த் துணிந்து, பொருட்பற்றிப் பூசனை செய்த
இவர், இப்போது உடல்பெற்ற பயனும் இதுவே யாம் என்று உடலால் வருந்தி முயன்று
அதன் பயனாற் பணி செய்யலாயினர்.
 
     கணம்புல் - ஒருவகைப்புல்; மெல்லிதாய் வீடு வேய்தல் முதலியவற்றுக்குப்
பயன்படுவது; இது சிறு காடுகளிலும் குன்றிடச் சாரல்களிலும் மிகுதியாய்க் கிடைப்பது;
இப்புல் பச்சைமலை கொல்லிமலைச் சாரல்களில் பெரும்பான்மை காணப்படும்.
இப்புல்லினை அரிந்து கொடுவந்து விற்கும் தொழிலினை இந்நாயனார் வறுமை
வந்தபோது தமது ஊரில் (இருக்கு வேளூரில்) செய்து பழகினர்; அன்றிப், பிறர்
செய்தலைக் கண்டறிந்தனர் என்பது கருதப்படும்.
 
     விலைப்பொருளால் - புல் விற்ற விலைப்பொருளினால்; துளக்கு அறும் -
அசைவில்லாத; பிறழாத; துளக்கம் - சலிப்பு;                             5
 
4060. இவ்வகையாற் றிருந்துவிளக் கெரித்துவர வங்கொருநாண்
மெய்வருந்தி யரிந்தெடுத்துக் கொடுவந்து விற்கும்புல்