பக்கம் எண் :

பெரியபுராணம்369

     போதாமை - போதாமையால் என மூன்றனுருபு விரிக்க.
 
     மெய்யான அன்பு புரிவார் - மெய்யான - என்றும் பொய்படாத; அன்பு -
அன்பின் செயல்.
 
     அடுத்த விளக்கு - கணம் புல்லும் போதாது விளக்கு மாளும் நிலையில்
அதற்கு அடுத்த விளக்காக; அடுத்த - பொருந்திய என்றலுமாம். நெய் விளக்கு
இல்லாதபோது அடுத்தது புல் விளக்கு; அது தீர்ந்தபோது அடுத்தது முடிவிளக்கு
என்னும்படி. வினைக்கு - என்பதும் பாடம்.
 
     திருமுடி - தலையில் விதிப்படி வைத்திருந்த குஞ்சி; இந்நாளிற் முடியினைக்
கத்தரித்தல் போலன்றி முன்னாளில் ஆண் மக்கள் குஞ்சிமயிர் வைத்து வளர்த்திடுதல்
மரபு.
 
     என்புருக - எலும்பும் உருகும் அன்பு மேலீட்டினால்; பேரன்பு காரணமாக;
மடுத்தல் - தீ மூட்டுதல்.
 
     இருவினையின் தொடக்கு எரித்தார் - இருவினைப் போகமாக வருவது
உடம்பெடுத்தலாகிய பிறவி; இங்கு முடிவிளக்கெரித்த செயல் விளக்கெரித்த
அதனோடமையாது, இவரது இருவினைப் பாசத்தொடர்பை எரித்த செயலேயாகவும்
பயன் தந்துமேற் பிறவியில்லாமற் செய்தது; தொடக்கு - தொடர்பு - கட்டு - என்ற
கருத்துமது; வினைத் தொடக்கறுத்த நிலை மேல்வரும் பாட்டிற் கூறப்படுதல் காண்க.
                                                           7
 
4062.     தங்கள்பிரான் றிருவுள்ளஞ் செய்துதலைத் திருவிளக்குப்
பொங்கியவன் புடனெரித்த பொருவிறிருத் தொண்டருக்கு
மங்கலமாம் பெருங்கருணை வைத்தருளச் சிவலோகத்
தெங்கள்பிரான் கணம்புல்ல ரினிதிறைஞ்சி யமர்ந்திருந்தார்.    8
 
     (இ-ள்) தங்கள்பிரான்....செய்து - (இத்திருப்பணியினைத்) தமது பெருமானார்
திருவுள்ளங்கொண்டு; தலை...வைத்தருள - தலைத்திருவிளக்கினை மிகுந்த அன்புடனே
எரித்த ஒப்பற்ற திருத்தொண்டருக்கு மங்கலமாகிய பெருங் கருணையினை வைத்தருள;
சிவலோகத்து....அமர்ந்திருந்தார் - சிவனுலகத்திலே எங்கள் பெருமானாராகிய
கணம்புல்ல நாயனார் சேர்ந்து இனிதாக வணங்கி வீற்றிருந்தருளினார்.
 
     (வி-ரை) திருவுள்ளம் செய்து - திருவுள்ளத்தில் ஏற்றுவைத்து; திருவுள்ளஞ்
செய்து - கருணை வைத்தருள
என்று கூட்டுக.
 
     தலைத்திருவிளக்கு எரித்த - தலைக்குஞ்சியினையே திருவிளக்காக எரித்த.
 
     மங்கலமாம் பெருங்கருணை - திருமுன்புமயிரை எரித்தலும், உடலை எரிவாய்
மடுத்து எரித்து உயிர்நீத்தலும் முதலிய செய்கைகள் எங்குச் செய்யினும் அமங்கலமும்
அநுசிதமும் ஆம் என்பது பொது விதி; சிவன் கோயிலிற் றிருமுன்பு செய்தல் அதனின்
மிக்க அமங்கலமும் அநுசிதமுமாம். ஈண்டுப் பொங்கிய அன்புடனே
செய்யப்பட்டமையால் இவையே மங்கலமாகவும் இறைவர்க் குகந்தனவாகவும்
ஆகியபடியால் இறைவர் மங்கலமாம் பெருங்கருணை வைத்தனர் என்பதாம்.
 
     சிவலோகத்து - இறைஞ்சி - இச் செயலால் நாயனார் இறைவர் திருமுன்பு தம்
உடலை நீத்துச் சிவலோகத்தணைந்தனர் என்பதாம்.
 
     எங்கள்பிரான் - "எந்தை தந்தைபிரான்" (திருவந்தாதி - 58) என்ற வகைநூற்
கருத்தினைத் தொடர்ந்து கூறியது.